கம்பனுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராமாயணம்

கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு முன்னரே தமிழகத்தில் ராமாயணம் பரவலாக இருந்ததா ? கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். வால்மீகியின் ராமாயணம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் தமிழில் முழுவதும் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அதற்கு சிற்பத்தில் வர்ணனை உண்டோ ? இந்தக் கேள்விகளை தான் நாம் இந்த பதிவில் அலசப் போகிறோம்.

கவிச்சக்ரவர்தியின் காலத்தை பற்றி மொழி ஆர்வலர்களும், சரித்திரி ஆர்வலர்களும் பல காலமாக விவாதித்து வருகின்றனர். கம்பர், இந்தப் புனிதப் பணியை பாரம்பரியத்துக்கு எதிராக, தனது வரிகளில் எந்த ஒரு அரசனை பற்றியும் பாடாமல், தனது நண்பர் புரவலர் சடையப்ப வள்ளலை மட்டும் ஆயிரம் செய்யுளுக்கு ஒருமுறை பாடியது இன்னொரு காரணம். இவற்றைக் கொண்டு அவரது காலத்தை நிர்ணயம் செய்வது கடினமாகி விட்டது. தற்போது அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாட்சியம் எதுவும் இல்லாமல் விரிந்து கிடக்கிறது. பொதுவாக பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்ற கருதப்படுகிறது.

கம்பரின் ராமாவதாரம், வால்மீகி்யின் வடமொழி காவியத்தின் கருவை கொண்டாலும், அவர் அதனை அதன் மொழி பெயர்ப்பாக அதை இயற்ற வில்லை. தனது தமிழ் புலமையை முழுவதுமாக பயன் படுத்தி, காவியத்தின் பல்வேறு இடங்களில் சிறு மாற்றங்களை செய்து, அப்போதைய காலத்திற்கு ஏற்ப நயத்தை மாற்றி அவர் தனது படைப்பை தனி தமிழ்க் காவியமாகவே மாற்றி விட்டார். ஆனால் நாம் இன்று பார்க்கும் அப்படிப் பட்ட ஒரு மாற்றம் அவருடையதா , அல்லது வாட்டர வழக்காக வந்த ஒன்றை அவர் மேலும் அழகு பட பாடினாரா ?

இதனை பற்றி நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு – . நன்றி திரு திவாகர், திரு ஹரி்கி்ரிஷ்ணன், ஷங்கர் ( பொன்னியின் செல்வன் குழுமம் ), திரு அண்ணா கண்ணன் மற்றும் கீதா அம்மா – பல்வேறு விதங்களில் இந்த பதிவுக்கு உதவியதற்கு. நன்றி திரு அர்விந்த் ( படங்கள். )

இந்த சிற்பம், புள்ளமங்கை பிரம்ம புரீ்ஸ்வரர் ஆலயத்தில் இருப்பது, இதன் கட்டுமான முறையை கொண்டும், அதில் இருக்கும் முதலாம் பாரந்தக சோழரின் கல்வெட்டுகளை கொண்டும் இதன் காலம் 907 to 953 CE என்று நிர்ணயிக்கப் படுகிறது .

சிற்பத்தை அருகில் சென்று பார்ப்பதற்கு முன்னர், இரு காவியங்களில் இந்த நிகழ்வை கையாண்ட முறையை படிப்போம். அஹல்யையின் சாபமும் சாப-விமோ்சனும்

அஹல்யை -விக்கி

அஹல்யை பிரம்மனால் உலகிலேயே மிகவும் அழகு பொருந்திய மங்கையாக படைக்கப்பட்டாள். அப்போதே அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். எனினும் கௌதம முனிவரை அஹல்யையை மணந்ததால். மாற்றான் மனைவி என்றாலும் இந்திரனின் சபலம் குறையவில்லை. அவளை அடைய திட்டம் தீட்டி , கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அவளிடம் சென்றான். வந்திருப்பவன் தன மணாளன் அல்ல என்று தெரிந்தும் அஹல்யை தனது அழகின் மீது இருந்த ஆனவத்தாலோ , தேவர்களின் அரசனே வந்திருக்கிறான் என்பதாலோ தவறு செய்கிறாள்…

சரி, இதனை வால்மீகி எவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

tathaa shaptvaa ca vai shakram bhaaryaam api ca shaptavaan |
iha varSa sahasraaNi bahuuni nivaSisyasi || 1-48-29
vaayu bhakSaa niraahaaraa tapyantii bhasma shaayinii |
adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi ||

இப்படி பட்ட தவறை செய்ததனால் நீ ஆயிரம் ஆண்டுகள் உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, யாராலும் பார்க்க முடியா வண்ணம், இந்த ஆசிரமத்தை சுற்றியே காற்றில் கரைந்து புழுதி போல இருப்பாயாக !!

yadaa tu etat vanam ghoram raamo dasharatha aatmajaH |
aagamiSyati durdharSaH tadaa puutaa bhaviSyas

தசரதனின் புதல்வனான ராமன், இந்த வனத்திற்குவரும்போது, உனது பாவம் போய் சாப விமோசனமும் பெறுவாயாக


tasya aatithyena dur.hvR^itte lobha moha vivarjitaa |
mat sakaashe mudaa yuktaa svam vapuH dhaarayiSyasi

ராமனை போற்றி வழி படும்போது உனது பாவம், பித்து, பேராசை அனைத்தும் விலகி, உனது சுய உருவை நீ மீண்டும் பெற்று, என்னுடன் வந்து மீண்டும் மகிழ்ச்சியான வாழ்கையை பெறுவாய், என்று சபித்தார் கௌதம முனிவர். .

இதில் நாம் கவனிக்க வேண்டியது எங்குமே கல்லாய் கிடவது என்று அவர் கூறவில்லை.

இப்போது கம்பர் இதை கையாண்ட முறையாய் பார்ப்போம்.

பரிபாடல்


‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்

தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால், இந்திரன் அளவில்லாத,நாணத்தை அடைந்து, தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள், எல்லோர்க்கும்,
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும் வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன் தன் மனைவியைப் பார்த்து, விலைமகள் ( வேசியைப்) போன்ற நீயும் கல் வடிவம் போல ஆகுக என்று சபித்தான்.


‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.

அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி, தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும் நெருப்பைச் சிதறறும் கடவுள் அன்னாய், உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே! சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது, எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும் என்று கூறுவர். இச் சாபத்திற்கு ஒரு முடிவை அருள்வீராக என்று வேண்டி நிற்க, அதற்கு
இரங்கிய அம் முனிவன், ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த தசரதராமன் என்பான் திருவடித் தூள் உன்மேல் படியும் போது, இந்தக் கருங்கல் வடிவம் நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

இந்த இடத்தில தான் நாம் இரு காவியங்களில் உள்ள வேற்றுமையை ஆராய வேண்டும். வால்மீகி அஹல்யை காற்றோடு கலந்து எவராலும் அவள் அழகை பார்த்து ரசிக்க முடியா வண்ணம் , அவளது அழகின் மேல் அவளுக்கு இருந்த ஆணவத்தை இழக்குமாறு காட்சியை எடுத்துச் செல்கிறார். . கம்பனோ உணர்ச்சிவசப்பட்டு தவறிட்ட அஹல்யையை கல்லாக மாற்றி, உணர்ச்சியற்ற நிலையில் வாடும் வண்ணம் சபிக்கப்பட்டதாக காட்சியை அமைக்கிறார்.

இது கம்பனின் கற்பனையா? இல்லை இந்த வழக்கு தமிழ் மண்ணில் அவருக்கு முன்னரே இருந்ததா? ( நன்றி திரு ஹரிக்கிர்ஷ்ணன் அவர்களது பதிவு )

சங்கம் பாடலில் அஹல்யை

பரிபாடல் காலம்

சங்க காலத்து நூலானா பரிபாடலில் வரும் வரிகளில் அஹல்யையின் சாபம் இடம் பெறுகிறது.

பரிபாடல் 19 , முருகனை பற்றி வரும் பாடல்.அதில் ஒரு பகுதி

இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது. என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது–துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.

(Lines 50-57)

பக்தர்கள் ஓவியக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ரதி மன்மதனின் ஓவியத்தை பார்த்த பின், இன்னொரு ஓவியத்தில் – இந்த பூனை இந்திரன் (இந்திரன் பூசை) , இவள் அஹல்யை (இவள் அகலிகை), சினத்தில் சென்ற கௌதமன் (இவன் சென்ற கவுதமன்) , கல்லை மாறிய அஹல்யை (சினன்உறக் கல்லுரு ஒன்றியபடி இது‘) என்று பரங்குன்றம் செல்லும் யாத்ரிகள் பேசுவது போல வருகிறது பாடல்.

7029

இப்போது நாம், மீண்டும் சிற்பத்திற்கு வருவோம். சிறு சிற்பம் தான். புள்ளமங்கை, எனினும் அதில் நாம் மூன்று நபர்களை தெளிவாக பார்க்க முடிகிறது. லக்ஷ்மணன் , ராமன் , மற்றும் அஹல்யை.

7023
7019
7032

இப்போது பதிவின் முக்கியமான தருணம். ராமனின் காலை பாருங்கள். அப்படியே கம்பனின் அற்புத வரிகளை படியுங்கள்.எத்தனை வண்ணங்கள்.. வண்ணங்களா.. இல்லை கம்பனின் எண்ண ஜாலங்களா..

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இதை மேலும் விவரிக்க எனக்கு தேர்ச்சி இல்லை – தேவையும் இல்லை. ராமன் கால் பட்டு உயிர்ப்பிக்கும் அஹல்யையை சிற்பத்தில் பாருங்கள்.

7035

புள்ளமங்கை விமான சிற்பம் கண்டிப்பாக 953 CE க்கு முன்னர் செதுக்கப்பட்டது. நிச்சயமாக அது அஹல்யை கல்லாய் மாறுவதும், ராமனின் கால் ( அல்லது கால் தூசி) – சிற்பத்தில் குதிக்கால் ஊன்றி பாதம் கல்லின் மேல் படும்படி வடித்துள்ள திறமையை பாருங்கள் , அப்படி கால் பட்டு சாப விமோசனம் பெரும் அஹல்யை இரு கை கூப்பி பக்தி பரவசத்துடன் தன எழில் உருவம் பெற்று , ராமனை வணங்கும் வண்ணம் வடித்ததும் அருமை.
அது சரி கம்பன் சொல்லும் கால் வண்ணத்தை பார்த்துவிட்டோம் – அது என்ன கை வண்ணம். அதற்கும் சிற்பம் உண்டோ. விரைவில் பார்ப்போம்.

கிரேக்க சோழ கலை கலவை.

சோழ செப்புத்திருமேனிகளில் ஒரு வசீகரத் தன்மை இருக்கிறது. அதை புகைப்படங்களில் கொண்டு வருவது மிகவும் கடினம். உதாரணத்திற்க்கு சென்னை அருங்காட்சியகம் இருப்பில் இருக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டு சோழ முருகர் வடிவத்தை பாருங்கள்.

ஓவியர் பிரசாத் அரிய மனிதர்.செப்புத்திருமேனியின் அழகை ஓவியத்தில் கொண்டு வரும் தெய்வீக திறம் படைத்தவர்.

பொதுவாக த்ரிபங்க அமைப்பை பற்றி பல கட்டுரை படித்துள்ளேன். ஆனால் இந்த மூன்று வளைவுகள் என்பது மட்டும் தான இந்த அழகின் காரணமா ? இல்லை அவற்றை தாண்டியும் ஏதாவது உள்ளதா ? எப்படிஅந்த கலைஞன் இந்த தந்திரத்தைத் தெரிந்துக்கொண்டான்?

இன்று புகழ் பெற்ற கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி நாம் பார்க்கப் போகிறோம். அவர்கள் எப்படியெல்லாம் சிற்பங்களின் அழகைக் கூட்ட பல யுக்திகளைக் கையாண்டனர், தவிர அவர்கள் உபயோகித்த முறைகளுக்கும் சோழ சிற்பியின் கலைக்கும் ஏதாவது பொதுத் தன்மை உள்ளதா என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம். இந்த பதிவு உருவாக இந்த காணொளி கோப்பு மிகவும் உதவியாக இருந்தது.

கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி

பலமுறை இந்த கேள்வி எங்கள் மனதில் உதிக்கும். நண்பர் அர்விந்த் அவர்களுடன் அர்தனாரி வடிவத்தை பற்றி விவாதிக்கும் போதும் வந்தது. என்ன கேள்வி – சிற்பி ஏன் ஒரு காலை சற்றே மடித்தவாறு அமைத்தான் என்பதே அந்த கேள்வி. அப்போது எங்கள் கருத்து ஆண் பெண் என்ற இருவரின் உருவங்களின் அமைப்பை சரி கட்டவே அந்த அம்சம் என்பதில் முடிவாகும் .

அர்த்தனாரி வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது

ஆனால் இன்று இந்த கிரேக்க சிற்பம் பற்றிய காணொளியை கண்ட பின்னர் வேறு ஒரு விதமாக யோசிக்க வைத்தது. இந்த சோழ முருகர் வடிவம் அர்த்தநாரி போல அல்லவே, அப்போதும் எதற்கு அந்த காலின் மடித்து வடிக்கும் கலையையும், சிறபக்கலைஞனும் ஏன் வளர்த்துக்கொண்டே போகிறான் என யோசித்ததில் ஒஉர் உண்மை புலப்பட்டது. அதாவது கலைஞன் எனப்படுபவன் தனது படைப்புகளில் இருந்தும், தான் பார்ப்பதிலும் மட்டும் அல்லாமால், தனக்கு முன்னும் இருந்த வல்லுனர்களின் படைப்புகளில் இருந்து அவன் கற்றுக்கொள்கிறான். அவனல்லவோ கலைஞன்.. கிரேக்க சிற்பம் பாரெங்கும் புகழ் பெற்றது. கூகிள் மற்றும் விக்கி உதவியுடன் கிரேக்க சிற்பம் எப்படி பாரிணாம வளர்ச்சி கண்டது என்பதையும், அதை படிப்பது நாம் நமது சோழ செப்புத் திருமேனிகளை இன்னும் புரிந்துக்கொண்டு ரசிக்க எப்படி உதவுகின்றது என்பதை பார்ப்போம்.

கௌரோஸ்


கௌரோஸ் – சுமார் -800 BCE – 480 BCE, கிரேக்க அழகான ஆண் இளையர் சிற்பங்களை குறிக்கும்
இந்தக் காலத்திய சிற்பங்களில் நாம் பார்க்க வேண்டியவை

* உடல் முழுவதும் ஒரே நேரான கோணத்தில் இருக்கும், தலை நேராக, பார்வையும் நேரே பார்க்கும் வண்ணம் இருக்கும், இடுப்பு சின்னதாக, கைத்தசைகள் சதுரமாகவும் அதிகம் மேலே தூக்கி இராது. உடம்பும் அதே போல எந்த விதமான வளைவும் இல்லாமல் – விறைப்பாக இருக்கும்.

* சில சிலைகளில், ஒரு கால் முன்னால் வைக்கும் படி இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு இடுப்பின் வளைவை காண முடியாது.
* கைகளும் அதே போல நேரே தொங்கியபடியோ, அல்லது ஒரு கை மடக்கப்பட்டோ இருந்தாலும்,சிற்பம் பொதுவாக உயி்ரற்று இருக்கும்.

க்ரிடிஒஸ் பையன்


இதை அடுத்து பளிங்கு சிலை – க்ரிடிஒஸ் பையன் சிற்பத்தை பார்ப்போம்.

இங்கே சிற்பி மனித உடலின் செயல் பாட்டை முழுவதுமாக படித்து, அதை கல்லில் வடித்துள்ளான். உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கி ( இடது கால் ), வலது கால் சற்றே முட்டியில் மடிந்து உள்ளது. இதற்கு கிரேக்க மொழியில் ‘கண்டற்றபோஸ்டோ’ என்று பெயர். இந்த முறையில் ஒரு மனிதன் நிற்கும் பொது , உடலின் மற்ற பாகங்களில் சிறு மாற்றங்கள் தோன்றும். இடை சற்றே இடது புறம் செல்லும், முதுகு தண்டு ஆங்கில எழுத்து “s” போல வளையும்.

கண்டற்றபோஸ்டோ’

இந்த மாற்றங்களின் விளைவால் இதுவரை வெறுமனே உயிரற்று நிற்கும் மனிதன் சிலை போல இருந்த வடிவம் உயிரோட்டம் பெற்றுவிடுகிறது.

டோரிபோரோஸ்

டோரிபோரோஸ் – ஈட்டி ஏந்தியவன் சிற்பம் கிரேக்க சிற்பங்களில் மிகவும் புகழ் பெற்றது. செப்பு சிலையாக இருந்திருக்க வேண்டிய இந்த வடிவத்தின் காலம் சுமார் 450-40 BC.

கிரேக்க சிற்பியான திரு போல்ய்க்ளிடோஸ் என்பவர், மனித உடலின் அங்க குறிப்புகளையும் அதன் ஆற்றலையும் முழுவதுமாக படித்து, இந்த சிற்பத்தை வடித்துள்ளார். இந்த வடிவத்தில் பலம் மிக்க ஆண்மகன் ஒரு கையில் வேல் ஒன்றினை எறியும் வண்ணம் – அந்த தருணத்தின் உயி்ரோட்டதை அப்படியே கல்லில் சிறை பிடித்துள்ளார்.

“S” தோற்றம்

அதே போல அந்த “S” தோற்றமும் கிரேக்க சிற்பத்தின் நளினத்தை மிகவும் கூட்டியது . இதில் நாம் முன்னர் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உடல் இன்னும் தனது நடுதிசையில் இருந்து விலகி, வளைந்து நிற்கும் வண்ணம் இருக்கும். இதனால் இது ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உயர்ந்த காலத்தால் முற்பட்ட பாணி என்று கருதப்படுகிறது.

வீனஸ் டி மிலோ அல்லது அப்ரோடைடி மிலோஸ் சிற்பம் இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

சரி, இவை அனைத்தையும் பார்த்துப் படித்து புரிந்த பிறகு நம் சிலையை மீண்டும் பார்ப்போம். கிரேக்க சிற்பிகள் உபயோகித்த யுக்திகளை நமது சிற்பிகளும் உபயோகித்தார்களா? தேடலின் போது பல நல்ல தளங்களும் கிரேக்க சிற்பத்தின் படங்களும் அதனை ஒட்டிய விளக்க படங்களும் கிடைத்தன. அதே போல சோழ சிற்பத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

http://figdrawing.blogspot.com/2008/10/standing-pose-rhythm-and-contrapposto.html
http://employees.oneonta.edu/farberas/arth/ARTH209/Doyphoros.html


என்ன அதிசயம். அப்படியே ஒன்றை ஒன்று ஒட்டி இருக்கின்றனவே.



சோழர் சிலையின் பின் அழகு இன்னும் அற்புதம். நாம் கிரேக்க சிற்பங்க்ளில் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ எப்படி `s’ வடிவத்தோடு சேர்ந்து சிலையில் வந்துள்ளது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.



இந்த பதிவுக்கு உங்கள் கருத்தை இடுங்கள். கேட்க மிகவும் ஆவலாக உள்ளது. கிரேக்க சோழ கலைகள் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாக உணரப்படும்போது உருவாகும் ஆச்சரியத்தை என்னவென்பது…

படங்கள் உதவி : விக்கி மற்றும் இணையம். சோழர் சிலை மற்றும் ஓவியம் – ஓவியர் பிரசாத்.

சோமஸ்கந்தர் வடிவம் – செப்புத் திருமேனி, பல்லவர் காலம்

நாம் இதுவரையில் கல்லில் சோமஸ்கந்தர் வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை பற்றி பார்த்தோம். இதுவரையில் நாம் பார்த்த அனைத்து சிற்பங்களும் பல்லவ சிற்பங்களே. இன்று நாம் ஒரு செப்புத் திருமேனியை பார்க்கப்போகிறோம். பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. இன்றைக்கு அவற்றில் ஒன்றான சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை பார்ப்போம்.

இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.

அப்படி என்ன வித்தியாசம் இந்த அமர்ந்திருக்கும் கோலத்தில்?. படங்களை பாருங்கள்.


சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் ஈசன், சற்று பின்னால் சாய்ந்து அமர்த்தப்பட்டவாறு இருப்பது தெரிகிறதா. இது அவரது கம்பீர தோற்றத்தை இன்னும் அதிகரிக்கிறது.

அம்மை அப்பனின் உருவத்திலும் , முக ஜாடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஈசனின் முகம் வட்டமாக உள்ளது – அதில் கண் , மூக்கு மற்றும் வாயை கைகளால் சிற்பி அமைத்தது போல உள்ளது. தலையில் ஜடா மகுடம் , மற்றும் கழுத்தில் இரு சிறிய சங்கிளிகளிகள் மற்றும் ஹாரம் என ஜொலிக்கும் அவரது யக்நோபவீதம் தங்க கம்பிகளால் ஆனது போல உள்ளது. அதில் அவரது இடது மார்பின் மேல் ஒரு முடிச்சு மிகவும் அழகாக உள்ளது.



முகம் வட்டமாக , தலையில் முக்கோண வடிவில் கரண்ட மகுடம் ஜொலிக்க, லக்ஷணமான முகத்தொட்ட்ரத்துடன் அமர்ந்திருக்கும் உமை அழகு.

மகேசனின் பல கைகள் இணைக்கப் படுகிற பாணியும் ஒரு வழிகாட்டி. மேல் கைகள் பிரிவதும் – பிரியும் கோணமும் நாம் பார்க்க வேண்டும்.

கைகளில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை பிடித்திருக்கும் முறையும், கை முத்திரைகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிவன்

அணிகலன்களில் மிகவும் அழகான நாக கேயுர வகை இருப்பது அழகு.

உமை

கால் மற்றும் கைகள் மிகவும் நேர்த்தியாக நளினம் ததும்பும் வண்ணம் உள்ளன. இவையும் காலத்தை எடுத்துக்காட்டும் .


அங்க அணிகலன்கள், ஈசனின் இடுப்புப் பட்டையில் நாம் பிற்காலத்திய சிற்பங்களில் வரும் சிங்க முகம் இல்லாததை நினைவில் வைக்க வேண்டும் . இடுப்பை வடித்துள்ள வண்ணம் மிக அருமை.


ஈசனின் சிரத்தின் பின் நாம் கல் சிற்பங்களில் பெரிதாக பார்த்த சிரஸ்சக்கரம் இங்கே சற்று அளவில் சிறியதாகி உள்ளது. ஆறு சடைகளாக பிரியும் பின்னல் அருமை.

ஈசனின் மார்பை பாருங்கள். ஒட்டி வைத்தார் போல உள்ளதே.

இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து – நாம் அடுத்து பார்க்கும் சோழர் கால சுமார் 10th C மற்றும் 12 C செப்புத் திருமேனி்களுடன் வரும் பதிவுகளில் ஒப்பு நோக்கி எவ்வாறு இந்த படிமம் காலத்தால் அவற்றிற்கு முந்தையது என்பதை பார்ப்போம்.

Ref: Bronzes of South India – Sri. K. R. Srinivasan

இருநூறாவது பதிவு – பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழியவே – சோழ ஓவியம்

இந்த தளம் எங்களுக்கு வாழ்க்கைப் பாதையில் மிகவும் மனநிறைவைத் தரும் பயணம். திடீரென ஏற்பட்ட ஒரு தாக்கத்தால் பலரும் தங்கள் பயணத்தை துவங்குவது உண்டு , எனினும் முதலில் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்ந்து நினைவில் வைத்து கவனத்தை எங்கும் எதிலும் சிதற விடாமல் செல்வது பெரும் சவால். அந்த விதத்தில் நாங்கள் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களை இந்த பணியில் ஈர்த்த , இன்றும் தூண்டுதலாக இருக்கும் அந்த முதல் தீ பொறி – அதற்கு அப்படி ஒரு பலம். இருநூறாவது பதிவிற்கு அந்த தீப் பொறியை விட வேறு நல்ல கரு உண்டோ ?

ஆம் அவர்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர்.

ஆனால் எங்களை போன்றோருக்கு அவர் என்றும் அருண்மொழி வர்மர் தான் – இன்றும் எங்கள் நினைவில் நீங்காமல், ஒரு வாழும் வரலாறாக , எங்களை வழிநடத்தும் தமிழனின் வாழ்வியலில் பொன்னேட்டில் பொறிக்கப் பெற்ற மாமனிதர். தமிழனும் தமிழ் மண்ணும் தனது பெயரை கேட்டவுடன் தலை தானாக நிமிரும் சாதனைகளை நிகழ்த்திய சகாப்தம். இது வெறும் முகஸ்துதி அன்று – இன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல இடங்களில் இருந்து அவர் எழுப்பிய பெரிய கற்றளியான ராஜராஜேஸ்வரம் தஞ்சை பெரிய கோயில்தனை காண வரும் பலகோடிக்கணக்கான பேர்களில் பலர் அதன் பிரம்மாண்டத்தை ரசிப்பர், சிலர் அதன் அழகை ரசிப்பர், மற்றும் சிலர் அதன் கட்டட அமைப்பு,அறிவியல் , விஞ்ஞானம் என்று வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கும் கூட்டத்தில் இருப்பர். வேறு ஒரு கூட்டமும் உண்டு. எங்களை போல – இது எங்கள் மண் , இவர் எங்கள் அரசன் என்று எங்கோ ஒரு விட்ட குறை தொட்ட குறை – அடி மனதில் ஒரு இனம் புரியா ஆனந்தம், அருகில் அந்த மாமனிதர் இன்னும் எங்களை அன்புடன் பார்த்து மந்தகாச புன்னகை புரியும் ஒரு உணர்வு…

எங்களை வழிகாட்டும் அந்த சுடருக்கு என்றும் எங்கள் உழைப்பு அர்ப்பணம். முடிவு ஆரம்பம் என்று பிரிவு படுத்தி பார்க்காமல், இதுவரை நாங்கள் செய்துள்ள அனைத்தும் தங்களுடையது, இனி நாங்கள் செய்யப்போவதும் தங்களுக்கே அர்ப்பணம். எங்களை இந்த பணியில் ஆழ்த்தியதும் தாங்களே , உங்கள் புகழ் பாரெங்கும் பரவ நாங்கள் எங்களை இன்று மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

காலவெள்ளத்தில் நாம் பரபர வென்று பின்னோக்கி பயணிக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் இரண்டு நொடிகளில் புரட்டிவிட்டோம். கி பி 1010.

(ஆம், தற்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன – பெரியகோயில் எடுப்பித்து – கல்வெட்டுகளில் உள்ள படி உடையார் அவர்கள் தனது ஆடிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டின் இருநூற்றி எழுபத்தி ஐந்தாம் நாள் – விமானத்தின் மேல் உள்ள கலசத்திற்கு தங்கம் கொடுத்த செய்தி உள்ளது. ஆட்சிக்கு வரும் வரிசையில் இல்லாமல், காலத்தின் கோலத்தால் விதியின் ஆட்டத்தினால் தன்கையில் ஆட்சி வந்தாலும் பெருந்தன்மையுடன் அதை விட்டுக்கொடுத்த தியாக சிகரம் – பின்னர் அவர் தமிழுக்கும் தமிழன்னுக்கும் ஆற்ற வேண்டிய அற்புதங்களை எண்ணி மீண்டு்ம் அரியணை தேடி வந்தது கி பி 985 )

ஆலய மணிகள் கிண் கிண் என்று ஒலித்துக்கொண்டிருந்தன – அந்த மணியோசையின் பின்னணியில் பிரம்மாண்டமான வாயிற் காவலர்கள் வழி காட்ட பெருவுடையாரைக் காண உள்ளே வந்தனர் பெருமக்கள். அங்கே ஒருபக்கம் போட்டியாய் தவில், மேளம், பறை, தாரை , தப்பட்டை, நாதஸ்வரம் என்று ஒரு புயலென கிளம்பிய ஓசையில் திக்கு முக்காடி,அவை கருவறையின் கருங்கல் சு்வரில் வெளியே திரும்ப ஓட ஒரு வழியை தேட… ஒரு நிமிடம் அப்படியே அண்ணாந்து காற்றில் கலக்கும் கற்பூர வாசனையையும் பின்னந்தள்ளி வந்த சந்தன வாசனை முகரும்போது , அகில், ஜவ்வாது, சாம்பி்ராணி என்று ஒன்றோடு ஒன்று போட்டியிட….திடீரென இன்னும் ஒரு புது வாடை , மேலிருந்து வருகிறது, முல்லை – ஆமாம் அடர்த்திக்கட்டிய முல்லை மொட்டுகள் மெதுவாக மலரும்போது வெளிவரும் வாசனை. எங்கிருந்து வருகிறது, மேல் தளத்தில் அடுக்கடுக்காக பின்னிய ஜடைகளில் முல்லை மொட்டுக்கள். யார் இந்த யு்வதிகள். புலியின் பார்வையில் உறைந்து நிற்கும் மானைபோன்ற கண்களை கொண்டு தங்கள் பிடித்த ஜதிகளில் அப்படியே உறைந்து எதிரே இருக்கும் தங்கள் குருநாதரின் செய்கைக்காக காத்து நிற்கும் நாட்டிய மாதுகள். குருநாதரும் அங்கு இருக்கும் அனைவரையும் போல, காத்து நிற்கிறார் – யாருக்கு?

அனைவருமே அவரை பலமுறை பார்த்துள்ளனர், ஒளிவீசும் கவசத்தை தனது வெற்றி மார்புகளில் தரித்து, கம்பீரமாக தனது ரதத்தில் ஏறி செல்லும்போது, ராஜ உடையில் பட்டாடை உடுத்தி செங்கோலும் மணிமுடியும் ஜொலிக்க பட்டத்து யானை மீது பவனி வரும் போதும் பார்த்ததுண்டு. எனினும், இன்று அப்படி அல்ல. இன்று சாதனை ஒன்றை நிகழ்த்தி , ஒரு அதிசயத்தை நடத்தி அந்த மாவீரன் தன் கனவை நினைவாக்கும் பொன்னாள்.

ஆம், இன்று தான் பெரிய கோயிலின் குட நீராட்டு் நாள் – இது போல பாரில் எங்கும் இல்லை என்று ,சோழம் சோழம் என்று எட்டு திக்கும் இந்த குலத்தின் பெருமையை பறைசாற்றும் பொன்னாள்.

திடீரென எங்கும் அமைதி, அரசரின் அணிவகுப்பு வாசலை அடைந்து விட்டது. வாயிலின் மூலம் உள்ளே வரும் சூரிய கதிர்கள் ஒரு சில கணங்கள் மறைக்கப்படுகின்றன, பின்னர் சூரியன் உதிக்கும் ஒளி கிரணங்கள் போல அவரது மதிவதனம் , அரச சின்னங்கள் எதையும் அவர் தரிக்க வில்லை, வெள்ளை ஆடை இடுப்பில், ஒரு மேல் துண்டு , அங்கம் எங்கும் வெள்ளை விபூதி கோடுகள் – தங்க கவசத்தை விடவும் இந்த வடிவில் சிவப்பழமென ஜொலித்தார் மாமன்னர் – அப்போது..

சோழம் பூஜிக்கும் மந்திரமென பகைவர் மனதில் காலனின் நாமத்தை நினைவு படுத்தும் ஒலி.. மன்னனின் மெய்கீர்த்தி ஒலிக்க துவங்கியது….


ஸ்வஸ்திஸ்ரீ்
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்

உடனே, மாமன்னன் புருவங்கள் நெரிந்தன, வலது கை மேலே எழும்ப துவங்கியது.. குறிப்பால் அறிந்து புகழ் பாடும் வாய் அப்படியே நின்றது, என்ன வென்று அறியும் முன்னர் மெய்காவல் படை தலைவன் கை இடைவாளுக்கும் சென்றது. எனினும் நெறித்த புருவும் முழுவதுமாக நெறியாமல், முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு குடை பிடித்தது. அந்த ராஜ களை சொட்டும் முகத்தில் இன்னும் ஒரு படி அழகு எப்படியோ ஏறியது.

“அவனுக்கு முன் என் புகழ் எம்மாத்திரம். நான் இப்போது இங்கு ராச ராசன் அல்ல.. அடியேன் சிவ பாத சேகரன் “

மன்னரின் இந்த மொழியை கேட்டதம், மீண்டும் மேள தாளம், மணிகள் கிண்கிணி முழங்க – எங்கும் இசை வெள்ளம். அப்போது, மேலே இருந்து நானூறு சலங்கைகள் ஒரு சேர ஜதி பிடித்தன…குருநாதரின் ‘தா’ என்ற ஓசைக்கேற்ப.

தன் கனவு பலிக்கும் பேரானந்தத்தில் பெருவுடையாரின் அடியில் நின்ற மன்னர், தொலைவில் நின்ற குஞ்சர மல்லனை, தஞ்சைப் பெரும் சிற்பியைத் தேடி அழைத்தார்.

“இன்றுமுதல் உனக்கு ராஜ ராஜ பெருந்தச்சன் என்ற பட்டம் அளிக்கிறோம், பெயரில்லா சிற்பிகளாக நீங்கள் இருப்பது போதும். – யார் அங்கே, இந்த பெயரை எனது பெயருடன் இணைத்து கல்வெட்டில் வெட்டுங்கள். – உனது உன்னத படைப்பின் புகழ் சூரியனும் சந்திரனும் உதிக்கும் வரை நிலைத்து இந்த வையகத்தில் என் பெயரும் உன் படைப்பும் ஒன்றாய் ப் பிணைந்து உன் புகழை உலகிற்கு உணர்த்தட்டும்.

கணங்களில் நீர் பெருக தஞ்சைப் பெரும் சிற்பி கை கூப்பி வணங்கினார்.

“என் கோனே , இந்த குணமல்லோ எங்களை எந்நாளும் உங்கள் அடி பணிய வைக்கிறது. இந்த பெருமிதத்தில் இந்த அற்புத ஆலயத்தில் தங்களுக்கு விசேஷமாக வைத்துள்ள ஒரு அற்புத வெளிப்பாட்டைக் காட்ட மறக்கக்கூடாது. பிரத்தேயகமாக தலை சிறந்த ஓவியர்களை கொண்டு திருச்சுற்றில் உங்களுக்கு பிடித்த ஈசனின் வீரட்டானம் ஒன்றை தீட்டச் செய்துள்ளேன்.”

ஓ , அப்படியா. இதற்காகத்தான் கடந்த சில வாரங்களாக என்னை அந்தப பக்கம் செல்லாமல் தேர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தர அனைவரும் சேர்ந்து சதி செய்தீரோ..

ஐயனே , பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள். முதலில் வேலைபாட்டை கொஞ்சம் பாருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், அங்கே வெளிச்சம் போதவில்லை, யார் அங்கே – பந்தங்களை கொண்டு வாருங்கள். கவனம், சுவரின் அருகில் செல்ல வேண்டாம். எல்லா இடங்களையும் ஓவியங்களால் நிரப்பி உள்ளோம்.

வேந்தே – தாங்கள் விமானத்தின் கோஷ்டத்தில் திருப்புற விஜய சிற்பங்களை நிறுவச்சொன்ன போதே தங்களுக்கு திரிபுராந்தக கதையின் பால் உள்ள ஆவலை புரிந்துக் கொண்டோம். அதனால் அந்த கதையை ஓவியாமாக தீட்ட முடிவெடுத்தோம்.

“அருமை, கலைஞரே.! குறிப்பால் உணரும் உங்கள் திறன் அருமை. உங்களைப் போன்றோர் என்னிடத்தில் இருப்பது நான் செய்த புண்ணியம். ஆமாம், பெரிய அன்னை செம்பியன் மாதேவி பலமுறை சுந்தரர் , சண்டேஸ்வரர் புராணங்களை சொல்லிக்கொடுத்தாலும், என் அக்கன் குந்தவை பிராட்டியார் தினமும் படித்துக்காட்டிய மகேசனின் திரி்புர தகனம் மனதில் ஏனோ நின்றுவிட்டது. கதையை எப்படி தீட்டி உள்ளீர், சிற்பம் போல தொடரும் காட்சிகள் போலவா..

மன்னா, தங்களை போல உயிர சிந்தனையும் நல்ல குணமும் பெற்ற தலைவனின் காலத்தில் பிறந்து பிறவிப் பயனை அடையும் நாங்கள் தான் புண்ணியம் செய்தவர்கள். பெரிய பிராட்டியும் குந்தவை பிராட்டியார் போன்றோர் சிறுவயதில் தங்களுக்கு இது போன்ற நல்ல கதைகளை சொல்லி வளர்த்தது வரும் சந்ததியினர் கற்று தெரிய வேண்டிய பாடம். ஓவியத்தை புது பாணியில் ஒரே காட்சியில் முழு கதையையும் விளக்கும் வண்ணம் காட்டியுள்ளோம் மன்னா.

ஒரே காட்சில் முழு கதையுமா. எப்படி முடிந்தது – குறைந்தது ஆறு முக்கிய காட்சிகள் தேவையாக இருக்குமே ?

கோனே, நாம் செய்த பாக்கியம், இது போன்ற ஓவியர்களும் நம்மிடையே உள்ளனர்.

பொறுங்கள், மதுராந்தகனும் பார்க்கட்டும். ராஜேந்திரா இங்கே வா

மன்னா. இருபது வருடங்களுக்கு முன்னர் தங்களை பார்ப்பது போலவே உள்ளது

ஆமாம், பெருந்தச்சரே. ஆனால் கோபம் மட்டும் என்னை விட இருபது மடங்கு. ராஜேந்திரா , இந்த அற்புத ஓவியத்தை பார். திரிபுராந்தகன் கதை, நினைவில் உள்ளதா உனக்கு. ஈசனின் வீரட்டாணங்களில் ஒன்று. திரிபுர அசுரர்கள் மூவர் தாரகாக்ஷ , கமலாக்ஷ மற்றும் வித்யுன்மாலி – தாரகனின் மகன்கள் , பிரம்மனிடத்தில் பெற்ற வரத்தின் பலத்தால், உலகை ஆட்டிப் படைத்தனர். பறக்கும் நகரங்கள் கொண்டு, மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தினர். எனினும் நல்ல சிவ பக்தர்கள். தன் அடியார்களை வதை செய்ய மனமில்லாமல், அப்பன் பெருமாளை புத்த வடிவத்தில் அனுப்பி வேறு மார்க்கத்தில் எழுத்து செல்ல வைத்தார். அதன் பிறகு, தேவர்கள் அனைவரும் கொண்டு படை திரட்டி, புவியைத் தேராக கொண்டு, சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாக வைத்து, நான்முகன் தேரோட்டியாக நின்று, பெருமாளே நாணாக மாறி , மேரு மலையை வளைத்து வில்லாக போர்க்களம் புகுந்தார். அப்படித்தானே பெருந்தச்சரே ?

ஆமாம் அண்ணலே. அந்த தேர் எங்கள் ஆசான் விஸ்வகர்மனால் செய்யப்பட்டது. அதோ தேரோட்டியாக நான்முகன்.

தந்தையே – தேரோட்டி முன்னால் பார்க்காமல் ஏன் திரும்பி ஈசனை பார்க்கும் வண்ணம் உள்ளது?

மகனே, இது கதை சொல்லும் ஓவியம் – முழு கதையையும் ஒரே ஓவியத்தில் ஓவியன் விளக்க எத்தனிக்கிறான்.

ஐயனே, மேலே பெருமாள் புத்த வடிவில் இருப்பதும் திரிபுர அசுரர்கள் அவனை வாங்கும் வண்ணம் வரைந்துள்ளோம். அங்கே எலியின் மீது யானைமுகனும், மயிலின் மீது முருகனும், சிம்மத்தின் மீது தேவியும், ஈசனுடன் பல பூத கணங்களும் போருக்கு செல்லும் காட்சி இங்கே

ஆமாம். அசுரர் படையும் மிகவும் கோரமாக தெரிகிறது. அந்த பந்தத்தை இன்னும் அருகில் எடுத்து வாருங்கள், ஓவியத்தில் உள்ள தனித்தன்மையை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். ராஜேந்திரா , உன்னால் முடிகிறதா பார்ப்போம்.

தந்தையே , தேவார வரிகளில் இரு விதமாக இந்த காட்சியை பாடும் பாடலை படித்த நினைவு வருகிறது – கறுத்தவன் (சினந்தவனும்) என்று ஒருமுறையும் நகைசெய்த என்றும் வருமே.

முதல் திருமுறை

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

முதல் திருமுறை

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பலே மகனே – அருமை. படிப்பிலும் கவனம் செலுத்தினாய் போல உள்ளதே. ஆச்சாரியர் இதற்கு இரு விளக்கங்கள் தருவார். இவ்வாறு போருக்கு செல்லும் ஈசனை விளக்கும் பாவம் – உடல் சிவக்க, கண்கள் பிதுங்க , புருவங்கள் வில்லாக வளைய – பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் இதை ரௌத்ர திருஷ்டி என்பார்கள். உனது சினேகிதி அந்த நாட்டியக்காரியிடம் கேளேன்.

அப்பா , இங்கே எதற்கு இந்த சம்பாஷனை. தெரிகிறது தெரிகிறது. சிவனின் முழு உடலுமே செவ்வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. நீங்கள் கோபப்படுவது போலவே .

மகனே, நீ கூட இப்போது கொஞ்சம் சிவந்து காணப்படுகிறாயே ? கோபமா ? நாணமா ? சரி, ஈசனின் முகத்தில் ஏதாவது வித்யாசமாக தெரிகிறதா உனக்கு.

தந்தையே – அதற்கு முன்னர் அவர் வில்லை பிடித்திருக்கும் முறையே சற்று வித்யாசமாக உள்ளதே. எதிரி எதிரில் இருக்க, வில்லை ஏன் தன்னை நோக்கி பிடித்து இருப்பது போல உள்ளது காட்சி.

மதுராந்தகா, அது தான் ஓவியனின் திறமை. கதையை பாதியிலேயே விட்டு விட்டோமே – இரு விதாமாக விளக்கம் தருவார் குருநாதர் என்று சொன்னேன் அல்லவா, ஒன்று – இவ்வாறே படை திரட்டி செல்லும் போது கூட சென்ற தேவர்களில் சிலருக்கு சற்றே தலைக் கனம் பிடித்தது. ஈசனுக்கே நம் உதவி தேவை என்று !! இன்னொரு விதமான விளக்கம் பிரம்மன் ஈசனை பார்த்து – எதற்கு இந்த அதீத விளையாட்டு. தங்களுக்கு இந்த படை, ஆயு்தங்கள் எல்லாம் தேவையா என்று கேட்க….மகேசன் அடுத்த கணம், வில்லை தன் பால் திருப்பி, ஒரு சிரிப்பு சிறக்க – எதிரில் இருந்த அசுரர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர்.

இப்போது பார். பித்தனின் முகத்தில் புன்னகையை. ஓவியன் திறமையாக இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வந்துள்ளான்.

அருமை, தங்கள் விளக்கத்துடன் ஓவியத்தை பார்க்கும் பொது மெய் சிலிர்க்கிறது. சீக்கிரம் வாருங்கள்! அடுத்த ஓவியங்களை பார்ப்போம்.

படங்கள்: திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். பெரிய கோயிலை பற்றி மேலும் முழுவதுமாக தெரியவேண்டுமாயின் கண்டிப்பாக அவர்களது நூலை படியுங்கள்.அவர்களது நூலை
நன்றி ரீச் சந்திரா

ஒரு தனித்தன்மை வாய்ந்த நந்தி – மலையடிப்பட்டி சிவன் குடைவரை

புதுக்கோட்டை மாவட்டம், இயற்கை கொஞ்சம் எழில் என சொல்லிக்கொள்ள பச்சை ஆடை போர்த்திய வயல்கள் என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. எங்கும் ஒரே செந்நிறம், அதில் ஒரு பாதை. அதுவும் செந்நிறம் தான். மலையடிப்பட்டி நோக்கி காலை பத்து மணியளவில் சென்றுக்கொண்டிருந்தோம். திடீரென பாதை முடிந்தது. அருகில் சில வீடுகள். ஒரு புளிய மரம் – மரத்தடியில் ஒரு சிறு வால் பையன்கள் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் வயதாலும் நோயாலும் வளைந்து தனது கைத்தடியின் உதவியுடன் ஒரு பெரியவர். சற்று தொலைவில் ஒரு சிறு குன்று, அருகில் ஒரு தடாகம். ஆஹா, இவ்வளவு தொலைவு வெறும் செம்மண்ணையே பார்த்துக்கொண்டு வந்த நமக்கு இப்படி ஒரு ரம்மியமான இடமா ? மகேந்திரர் குடைவரைகள் இருக்கும் இடங்கள் போலவே உள்ளதே என்று மனதில் ஒரு எதிர்பார்ப்பு. ஆம், இங்கே இரண்டு குடைவரைகள் உள்ளன. ஈஸ்வரன் சிவனுக்கு ஒன்று பெருமாளுக்கு ஒன்று. அந்தப் பெரியவர் தான் இந்த இரு குடைவரைகளுக்கும் காவல். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கூட்டம் வருமாம். மற்றபடி ஈ காக்கா இல்லை. நம்மை போல யாராவது தெரியாமல் வந்தால்தான் உண்டு. ஆனால் சலிக்காமல் திறந்து காட்டினார். அவரிடம் ‘நாங்கள் நிதானமாய் பார்ப்போம் . ஒரு இரண்டு மூன்று மணி எடுக்கும் !!. என்று சொல்லிவிட்டு ‘போய் சாப்பிட்டு விட்டு வாங்க’ என்று சொல்லிக் கொஞ்சம் பணம் தந்தோம்.அப்போது அவர் பழைய கால் சட்டை இருந்தால் கொடுங்கள் என்றார். ( பதிவை பார்த்துவிட்டு அங்கு செல்லும் நண்பர்கள் ஓரிரு பழைய சட்டைகள் எடுத்துசென்று கொடுங்கள்.புண்ணியமாகப் போகும்!!)

இந்த பதிவில் காலத்தால் முந்தைய – தந்தி வர்ம பல்லவ காலத்து சிவனின் முத்தரையர் குடைவரையை பார்ப்போம் ( அப்படிதான் இருக்க வேண்டும், ஏன் என்றால் அந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசர்கள் முத்தரையர்கள்).

முதலில் உள்ளே இருக்கும் சிற்பாம்சம் – நந்தி.

அப்படி என்ன இந்த நந்தியின் சிறப்பு? நல்ல சிலை தான், எனினும் பல இடங்களில் இதுபோல கலையம்சம் பொருந்திய நந்திகளை நாம் பார்க்கிறோமே. இதன் சிறப்பு அதை செதுக்கிய சிற்பி அதனை ஆயிரம் ஆண்டுகள் அதே இடத்தில இருக்கும் படி செதுக்கியதுதான். என்ன, புரியவில்லையா.

மேலே படியுங்கள்.

முதலில் படத்தை கொஞ்சம் கணினியில் திருத்தி குடைவரை முகப்பு பின்னாளைய கட்டுமானங்களை விளக்கி பார்ப்போம்.

அடுத்து, இன்னும் அருகில் செல்வோம். வெறும் மண்டபம் தான் முதலில் காட்சி தருகிறது.

ஆனால் ,உள்ளே சென்று வலது புறம் திரும்பினால் சற்று நேரம் உள்ளே உள்ள இருளுக்கு நம் கண்கள் பழகும் வரை ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் சிறிது நேரம் கழிந்தவுடன் , ஆஹா என்ன அபாரம்.

ஈசனுக்கு எடுப்பித்த இந்த குடைவரையில் பார்க்க நிறைய உள்ளது. இடது புறம் கருவறை காவலர்கள் காவல் காக்க, அருமையான கருவறை, எதிரில் நமது நந்தி, ஒரு பக்கம் வீரபத்ரர் , விநாயகர் மறுபக்கம் இருக்க அழகிய சப்த மாத்ரிகா வடிவங்கள், இன்னொரு பக்கம் துர்க்கை, பெருமாள் என்று ….வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படத்தின் வலது புறத்தில் நமது நந்தி தெரிகிறதா? மீண்டும் கணினி கொண்டு தூண்களை விளக்கிவிடுவோம்.


இப்போது புரிகிறதா. நந்தி, நந்திமேடை – அனைத்தும் ஒரே கல் – அதுவும் தாய்பாறையில் செதுக்கியது. அந்த நாளில் இருந்த திறமை, ஒரு மலைப்பாறையை இப்படி குடைய, அதுவும் துளி கூட தவறுக்கே இடம் இல்லாத இடத்தில இப்படி ஒரு கடினமான சிலையை செதுக்க முயற்சிக்கும் தைரியம், அவன் திறமையில் அவனுக்கு இருக்கும் நம்பிக்கை – நம்மை பிரமிக்க வைக்கிறது.

இப்போது புரிகிறதா – இந்த நந்திக்கு ஏன் தனிச்சிறப்பு என்று

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் ஒன்று – திருமாலுக் காழி யளித்தாய் போற்றி

கடவுளுக்கும் கடவுளுக்கும் போட்டியா? இல்லை என் கடவுளுக்கும் உன் கடவுளுக்கும் போட்டியா? பெரும்பாலும் இது மாதிரி சர்ச்சைக்குரிய வாதங்களை தவிர்க்க முயற்சிப்போம்.

ஆனால் சில நேரங்களில் இவை அத்து மீறிப் போகும் பொழுது, நாம் அந்த வாதங்களை சரியான முறையில் பார்ப்பதற்கு முன் முதலில் அங்கே என்ன இருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றில் எது சரி எது தவறு என்ற அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கும் என்பது சாத்தியம் இல்லை. எனினும் அன்று என்ன இருந்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இருப்பதை ஆராய்ந்து பார்க்கும் முன்னரே போர்க்கொடி தூக்குவது நல்லதன்று. சிற்பம் என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை மனிதனின் மனதால் கட்டுப்படுத்தி செதுக்கப்பட்ட பொருள் என்று மட்டும் பார்க்காமல் மனதை கட்டுப்படுத்தி அடுத்த நிலைக்கு எடுத்தும் செல்லும் கருவி என்றே நாம் பார்க்கவேண்டும்.

இந்த தளத்தின் நோக்கம் சிற்பங்களில் மறைந்து இருக்கும் கதைகளையும் நுணுக்கங்களையும் அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதே. கடந்து வந்த பாதை கரடு முரடானது. பல மதங்கள் காலப்போக்கில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன, ஒரே மதங்களினுள்ளும் இந்த போட்டி நிலவியது. எனினும் இவையும் நமது பாரம்பரியத்தின் இழையாக பிணைந்து விட்டன. இவற்றில் சரி தவறு என்ற வாதங்களை எடுத்தாண்டு எதிரிகளாக நிற்காமல் இருப்பதை இருந்தாக பாருங்கள் என்பது முதல் வேண்டுகோள். இப்படி பார்க்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தயவு செய்து இப்போதே மேலும் படிக்காமல் விலகி விடுங்கள் என்பது இரண்டாவது வேண்டுகோள்.

என்னடா பில்ட் அப் பெரியதாக இருக்கிறதே என்று பார்க்க வேண்டாம். இது போன்ற சர்ச்சை வடிவங்கள் பல உண்டு. ஏன் பரவலாக காணப்படும் லிங்கோத்பவர், காண்பதற்கரிய சரபேஸ்வரர் என்று ஒரு பக்கம். வாமன அவதாரத்தில் கங்கை உரு பெற்ற கதை சொல்லும் சிற்பங்கள் என்று இன்றைய சினிமா படம் போல ஆடியன்சுக்கு ஏற்ப சிற்பங்களும் செதுக்கப்பட்டன. அரசர்களும் தங்களுக்குப் பிடித்த தெய்வங்களை உயர்த்தியும் போற்றியும் குறிப்பிட்ட மதத்தை வளர்த்தனர். நாம் இன்று இரு சிற்பங்களை பார்க்க போகிறோம். விஷ்ணு அனுக்ரஹா மூர்த்தி / சக்கர தானர், இது மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் சிற்பம், காலத்தால் மாலிக் கபூர் தாக்குதலுக்கு பின்னர் உருவானதாக இருக்கலாம். மற்றொன்று அதையும் விட பழமை வாய்ந்த எட்டாம் நூற்றாண்டு ராஜ ஸிம்ஹ பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பம்.

சிற்பங்களை ஒட்டிய கதை ஏதோ நான் ஓட்டுகின்ற கதை அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை இங்கே எடுத்துக் கொடுத்துள்ளேன்.

ஆறாம் திருமுறை

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

ஒரு வழியாக சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது கதைக்குள் செல்வோம். வழக்கம் போல இந்த கருவை கொண்டு பல கதைகள் உள்ளன.

முதல் பாகம்:

ஜலந்தரன் என்னும் சமுத்திரராஜனின் மகன் தன்னுடைய ஆட்சியை எங்கும் நிலைநாட்ட, தேவலோகம், மற்ற தேவர்கள் அனைவரையும் தனக்குக் கீழ் கொண்டு வர எண்ணினான். அவன் மனைவியான பிருந்தை பதிவிரதை என்பதாலும், சிவ பக்தை என்பதாலும் அவளின் சிவ பக்தியும், கற்பின் சக்தியும் அவனைக் கட்டிக் காத்ததால் யாராலும் இந்த ஜலந்தரனை அழிக்கமுடியவில்லை.ஆனாலும் ஈசனோடும் ஜலந்தரன் போர் புரிகிறான். ஈசனுக்கோ, தன் பக்தையின் கணவனை எங்ஙனம் அழிப்பது என்று தன்னுடனும் போருக்கு வரும் ஜாலந்தரனைத் திருப்பி அனுப்புகிறார்.மகாவிஷ்ணுவின் மூலமே அவனை அழிக்கவேண்டும் என எண்ணினார் ஈசன்.

மஹாவிஷ்ணுவும் அதற்கு உடன்பட்டு சிவனுக்கு வழிபாடுகள் செய்கின்றார். ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்து விஷ்ணு வழிபட ஆயிரமாவது தாமரை இல்லாமல் 999 தாமரைகளே இருக்கின்றன. எண்ணிக்கையில் ஒன்று குறைவதைக் கண்ட விஷ்ணு ஆயிரமாவது தாமரைக்காகத் தன் கண்ணைப் ( அவன் தான் கமலக்கண்ணன் ஆயிற்றே!! ) பிடுங்கி அர்ச்சிக்கிறார்…. (இதோ காஞ்சி கைலாசந்தர் கோயில் சிற்பம்.)

பல்லவ சிற்பியின் தனித்துவம் இங்கும் தெரிகிறது. ஈசன் அமர்ந்திர்க்கும் பாணியில்தான் என்ன ஒரு யதார்த்தம். ஒரு காலை மடித்து , வலது கரத்தை ஆசனத்தில் முட்டுக் கொடுத்து அமர்ந்திருக்கும் காட்சி அருமை. தலைக்கு மேலே மற்ற இரு கைகளும் என்ன செய்கின்றன? ஏதோ தலைப்பாகையை கட்டுவது போல உள்ளது, அருகில் உமையம்மை. பெருமாள் ஒரு காலை மடித்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை சிவனுக்கு அளிப்பது போல உள்ளது. இன்னொரு இடது கரம் கண்ணப்பர் போல தனது இடது கண்ணை பறிக்க செல்கிறது.

சிற்பி இங்கே பின்னணியில் உள்ள கதைக்கு ஏற்ப சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஒரு வேளை அதில் நமக்கு எதாவது சொல்ல வருகிறானோ. தான் யார் என்பதை மறந்து அவனுடன் ஒன்றாகும் நிலையே பக்தி அல்லவா?

கதையின் அடுத்த பகுதியையும் மதுரை சிற்பதையும் அடுத்து பார்ப்போம்.

பெருமாளின் செய்கையை பார்த்து, ஈசன் பிரத்யக்ஷமாகி அவரைத் தடுத்துத் தரையில் காலால் கீறி ஒரு வட்டம் வரைகிறார். அதைச் சக்கரமாக வரைந்து அதைப் பெயர்த்தெடுத்து அந்தச் சக்கரத்தின் மூலம் ஜலந்தரனைக் கொல்லச் சொல்கிறார். இதுவே அறுபத்து நாலு சிவ வடிவங்களின் புராணக்கதைகளிலும்,ஈசனின் வீரச் செயல்களைப் பற்றிச் சொல்லும்போதும் வேறுவிதமாய் ஈசனே அந்தச் சக்கரத்தை ஜலந்தரன் மேல் வீசி எறிந்து அவனை இரண்டாகப் பிளந்ததாயும் வரும். பின்னரே அந்தச் சக்கரத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள். நமக்கு இப்போது தேவை ஈசன் பெருமாளுக்கு சக்கரம் தருவது மட்டுமே.

இந்த காட்சியை மதுரை சிற்பதில் பாருங்கள்.

விஷ்ணு மற்றும் சிவன், அருகில் நான்முகன். கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு யார் யார் என்று தெளிவாக புரிகிறது. இந்த காலத்தில் ஆகமங்கள் மேலோங்கி நின்று சிற்பியின் திறனை தாங்கள் இட்ட சட்டங்களுள் கொண்டுவந்து விட்டன. எனவே பல்லவ சிற்பதில் பார்த்த உயிரோட்டம் இங்கே இல்லை. சிற்பம் சிலையாக சொல்லும் கதையை சொல்வதில் மட்டும் தன் கவனத்தை செலுத்துகிறது.

தூண் சிற்பம் தான், எனினும் சிற்பி இன்னும் சற்று சமமான முறையில் அனைவரையும் காண்பித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. கலைக் கண்ணோடு பார்ப்பவருக்கும் சரி சமயக் கண்ணோடு பார்ப்போருக்கும் சரியாக இருந்திருக்கும். ஏன் சொல்கிறேன் என்றால் வெவ்வேறு அளவில் செதுக்கியதால் சக்ராயுதத்தை பெருமாளின் அளவுக்கு ஏற்ப செதுக்க , அது ஈசனின் கையில் சொப்பு போல தெரிகிறது…..இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

திருச்சி – கீழ்க் குடைவரை – “ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை!!”.

ஐயப்பன் சீசன். கூட்டம் களை கட்டியது. நோ என்ட்ரி.. புதிர்களை தாண்டி மலைகோட்டை அடைவதற்குள் சூரியன் தனது அரைநாள் வேலையை முடித்து விட்டு மேலே நகர்ந்துக்கொண்டிருந்தான். முதல் படியிலேயே சண்டை – தேவஸ்தான அதிகாரியுடன் – கேமரா டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று அவர் ஒரே பிடியாய் நிற்க, நாங்கள் ஆசி குடைவரைகளை பார்க்க மட்டும் தான் போகிறோம் – அதற்க்கு சீட்டு தேவை இல்லை என்று வாதாடி தோற்றோம் ( எந்த ஆசி தளத்திற்குள் சென்று படம் எடுக்க கட்டணம் தர தேவை இல்லை. முக்காலி கொண்டு எடுக்க வேண்டும் என்றால் தான் பிரச்சினை ). வேண்டா வெறுப்பாக கட்டணத்தைக் கட்டி சீட்டை பெற்றுக்கொண்டு முதல் தளத்தை கடந்து இடது புறம் திரும்பினோம். உடனே அருகில் இருந்த உங்கள் நண்பன் – அவர்தான் நம்ப ஆட்டோ காரர் – ஒரு விதமாக பார்த்தார். அந்தப் பக்கம் உட்டு அடிக்க வந்தோம் என்று முதலில் நினைத்தாரோ என்னமோ. பின்னர், இது தப்பான வழி. அப்படி போ என்றார். சுற்றி பார்த்தோம் – அறிவு ஜீவிகள் – பேர் பலகையில் முழு பக்கம் வரைந்து வைத்துள்ளனர். அதுவும் பல்லவர் குடைவரை செல்லும் வழி என்று ( பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் குடைவரை பாண்டியர் குடைவரை என்று கருதுகின்றனர் ). எனினும் அவர் விட வில்லை. எங்கே சார் போகணும் என்றார். குடைவரைக்கு என்று சொன்னோம். ”ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை. மேலே போங்க!” என்றார்.

அதை பார்க்கத்தான் வந்தோம் என்றவுடன்,எதோ புழு பூச்சியை சாப்பிட்டது போல ஒரு எக்ஸ்பிரஷன் காட்டி மீண்டும் பீடியை ஊத ஆரம்பித்தார். ஒரு நூறு அடி நடந்ததும் எங்களுக்கே ஒரு கலக்கம். இது சரியான வழியா என்று. நல்ல வேளை, வீடுகளின் நடுவில் ஒரு சின்ன குறுக்கு பாதை மலையை நோக்கி சென்றதை கண்டு அதனுள் விரைந்தோம். பத்து அடி சென்றவுடன்….எதிரே பிரம்மாண்டம்.

அப்படியே பெரிய மலையின் அடியில் எப்படித்தான் இடம் பார்த்து இப்படி குடைந்தார்களோ. பாறையும் அதன் அடியி உள்ள குடைவரையும் கண்ணைப் பறித்தன. அங்கே அலை மோதிய கூட்டம், ஆனால் இங்கே ஈ காக்கா இல்லை. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர் ( சிற்பத்தின் கால்கள் தான் ஸ்டம்ப்_. ஆசி நபர்கள் இருவர் இருந்தனர்

மலையை ஆழமாக்க குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை. வெளித் தூண்களே எப்படி உள்பக்கமாக இருக்கின்றன பாருங்கள்.

தூணைப் பார்த்தவுடனேயே சந்தேகங்கள் – இது பல்லவ தூண் மாதிரி இல்லையே. அருகே ஆசி பலகை – இது மாமல்லர் காலம் என்று அடித்துச் சொன்னது 640 to 670 AD.

நீள்சதுர வடிவில் இருக்கும் குடைவரையின் இரு பக்கங்களில் இரு அர்த்த மண்டபங்கள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே கர்ப்பக்கிருஹம் – ஒன்று சிவனுக்கு,மற்றொன்று பெருமாளுக்கு. இரண்டு கருவறைகளுக்கும் கருவறை காவலர்கள், மற்றும் அர்த்த மண்டபத்துக்கும் இரு வாயிற் காவலர்கள் – என்று மொத்தம் எட்டு வாயிற் காப்போன் சிலைகள் உள்ளன !! ( ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் பார்ப்போம்)

பின் சுவரில் சிற்பி தனது முழு திறனையும் காட்டி – விநாயகர் ( மாமல்லர் காலத்தில் விநாயகர் சிற்பமா?) , நான்முகன், முருகன், சூரியன் மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.

ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் அவற்றை பார்ப்போம். ஆசி ஓவியர் சிற்பங்களை வரைந்துக்கொண்டிருந்தார். ( கரும்பு கடிக்க கூலி வேணுமா – நமக்கு )

ஏனோ அந்த ஆட்டோ காரர் சொன்ன “ஏன் சார், அங்கே வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை ” என்ற வார்த்தைகள் இப்போதும் வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறியாமை தமிழகத்தில் இப்படியும் இருக்கலாகுமோ…

உன் கரம் பிடிக்கிறேன்

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் – சாதாரண திருமணம் அல்ல – அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் – தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

மணமகனாக சுந்தரேஸ்வரர் – மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ – நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .


சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல – தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து

பல்லவ சோமாஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – ஆறாம் பாகம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம்

இன்றைக்கு நாம் மல்லையில் இன்னொரு அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கப் போகிறோம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம் . நாம் முன்னரே இங்கு சென்று அங்குள்ள இரண்டு அற்புத சிற்பங்களை பார்த்தோம் – மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். பொதுவாக அங்கே செல்வோர் இவ்விரு சிற்பங்களையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவர் – கர்ப்பக் கிருஹத்தில் உள்ள அற்புத சோமஸ்கந்தர் வடிவத்தை பார்க்க மறந்துவிடுவர். இது இயற்கை..

பல்லவர் சோமஸ்கந்தர் வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. முழு கருவறை பின் சுவரை ஆக்ரமிக்கும் பிரம்மாண்ட வடிவம். மகேந்திர பல்லவர் குடைவரைகளில் சோமஸ்கந்தர் வடிவங்கள் இருப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த சிற்பத்தை ஆராய்வதற்கு முன்னர், சிலவற்றை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம். மல்லை சிற்பங்களை சுற்றி பல புதிர்கள் உள்ளன. பல்லவர் காலம் என்று பொதுவாக கொண்டாலும், எந்த பல்லவ அரசனின் காலத்தில் எந்த எந்த இடங்கள் உருவாகின என்பது இன்றும் பல வல்லுனர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த புதிரை நீட்டிக்கும் குடைவரைகளில் இந்த குடைவரையும் ஒன்று. விடை தேட இங்கே கல்வெட்டுகள் எதுவும் இல்லை. மேலும் பல குழப்பங்களை உள்ளடக்கும் இந்த மண்டபத்தை நாம் இந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் காலத்தை மட்டும் வைத்து ஆய்வு செய்வோம். இதை ஒப்பிட நமக்கு உதவுவது மல்லையில் ராஜ சிம்ஹன் கல்வெட்டுகளை கொண்ட கடற்கரை கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் வடிவம். இதில் ஏது முந்தையது – ஏது பிந்தைய கால வடிவம் என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடும் பதிவு இது.

முதல் பார்வையில், இரண்டுமே ஒரே வடிவமாக தெரியும். இன்னும் நுணுக்கமாக பார்க்க இரண்டு சிற்பங்களையும் பக்கத்தில் வைத்து , குறிப்புகள் இட்டு பார்ப்போம்.

எதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கும் படம் இதோ.

என்ன அருமையான வடிவம். குழந்தை குமரனின் வடிவம் – அப்படியே அமர்ந்த வடிவில் நம்மை கண்டு தாவும்படி, சற்றே திரும்பி, வலது கையால் குமரனை அணைத்து , இடது கையில் சாய்ந்து நளினமாக அமர்ந்திருக்கும் உமையம்மை, கம்பீரமாக சுஹாசனத்தில் ஈசன் – பின்னால் விஷ்ணு, பிரும்மா – அருமை (உமைக்கு மேல் சாமரம் !!)


இரண்டு வடிவங்களுக்கும் வித்தியாசம் – அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையின் கால்கள் – கடற்கரைக் கோயில் வடிவத்தில் கால்கள் வெறுமனே இருக்கும் . ஆனால் இவை இங்கு சிங்க வடிவத்தில் செய்யப்பட்டுள்ளன. காலுக்குக் கீழே இங்கே நந்தி வந்து விட்டது. ( நரசிம்ம பல்லவர் காலத்தில் பல்லவர் கொடி நந்தியில் இருந்து சிம்மத்திற்கு மாறியது !! இதே போல பல்லவ தூண்களும் மாறின – அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம் ) – மேலும் உமையம்மை காலுக்கு அடியில் இருந்த சொம்பு மாறி இங்கே ஒரு பெண் பக்தை இருக்கிறாள்.

சரி, மீண்டும் கேள்விக்கு வருவோம். இரண்டு உருவங்களில் ஏது பழையது. இன்னும் ஆராய்வோம்.

ஈசனின் அலங்காரம் எல்லாம் ஒன்றே போல தான் உள்ளது.

இரண்டு சிற்பங்களிளும் வெளித் தோற்றதில் ஒன்றே போல இருக்கின்றன. ஆடை , அணிகலன் உட்பட. இன்னும் ஒரு முறை ஒன்றுக் கொன்று அருகில் வைத்து பார்ப்போம். ஈசனின் இடது காலை கவனியுங்கள். கடற்கரை கோயில் வடிவத்தில் – அது மேல் இருந்து கீழே ஈசனின் நடுவே ஒரு கோடு போட்டால் அப்படியே அது நடுவில் வருகிறது. ஆனால் இந்த குடவரையில் அது சற்று நகர்ந்து, நந்தி உள்ளே வர வழி விட்டு , சற்று தள்ளி வந்துள்ளது.

இன்னும் சரியாக விளக்கு கணினி கொண்டு இரு உருவங்களையும் இணைத்து பார்ப்போம். நந்தி உள்ளே வர கால் எப்படி அழகாக நகர்கிறது பாருங்கள்.

இவற்றை கொண்டு பார்த்தால், மகிஷாசுர மர்த்தினி மண்டப சிற்பம் கடற்கரை கோயில் வடிவத்தை ஒத்தது. அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ தான் வடிவமைத்திருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.

கதை சொல்லும் தூண்கள் – பேரூர்

தூண் சிற்பங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான் – அதுவும் கதை சொல்லும் தூண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பல புராண கதைகள் இன்று நாம் மறந்தே பொய் விட்டோம். அதனால் பல சிற்பங்களை அவற்றின் கதையை அறிந்து ரசிக்க முடிவதில்லை. இதுபோல மறந்த கதையை சொல்லும் பேரூர் தூண் சிற்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

கடைகள் மறைத்து நிற்கும் இந்த தூணைத் தேடி செல்ல வேண்டும். இல்லையேல் அகப்படாது. நமக்கென்று உதவ பிரிட்டிஷ் பட களஞ்சியம் உள்ளது.

கண்டுபிடிக்க இயலவில்லையா. இதோ

கனக சபை படிகளை கொண்டு தூண் எங்கே உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இன்றோ கடைகளுக்கு நடுவில் கயிறு கட்டி…

எனினும் இந்த உடைந்த தூண் கண்ணில் பட்டது.

ஏன் என்று தெரிகிறதா.

ஓவியர் பத்மவாசன் அவர்களுடன் பேசும்போது, தான் அந்த தூணை கூட வரைந்து வைத்துள்ளேன் என்றார். இதோ அவரது ஓவியம்.

சரி, இது என்ன கதை? முழு கதையை ஸ்ரீரங்கம் சேஷ ராயார் மண்டப தூணில் பார்த்தோம். படிக்க இங்கே சொடுக்கவும்.

முதலை வாயில் சென்றது மீளுமா ?

இந்த தூண் எப்படி உடைந்தது. இப்போது நாம் பார்ப்பது மாற்று தூணோ ?