பனைமலை பல்லவகால ஓவியம் உயிர் பெறுகின்றது. பாகம் 1

சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு – – பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.

பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் – தாளகிரீசுவரர்’.

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு


அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல – தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது

விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.

இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.

உமை அம்மை – பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.

காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் – அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .

மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை – மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.

வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.

அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது – “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”

உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.

வண்ணங்கள் மெதுவாக தோன்றின.

போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின – ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் – அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!

மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.

மெதுவாக ஓவியம் வளர்ந்தது…

தொடரும்

திருவட்டதுறை – சிற்ப அதிசயம் – சாமரங்களும் மூர்த்திகளும்

வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்திருநாள் வாழ்த்துக்கள்

இன்றைக்கு மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் இன்னும் ஒரு அற்புத பதிவை நம்முடன் பகிர்கிறார்.

திருவட்டதுறையில் உள்ள திரு ஆரட்டதுறைநாதர் திருக்கோவிலை பற்றி முன்பே இரு கதைகளை கூறியுள்ளேன். 19 ஏப்ரல் 2011 அன்று “தெய்வக்குழந்தைக்கு தெய்வம் தரச்சொன்ன பரிசு” என்ற பதிவில், பாலகனாகிய புலவரும் சிறந்த பக்திமானும் ஆகிய திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகை தந்து பாடல் இயற்றுகையில் சிவபெருமானே அவரை கௌரவிக்கும் வகையில் பல்லக்கும் குடையும் அளித்ததை கண்டோம். 7 ஜூன் 2011 அன்று “திருவட்டதுறை ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்” என்னும் பதிவில் சிற்ப நிரல் பற்றி கண்டோம். பக்தர்கள் கோவில் பிரஹாரத்தை சுற்றி பிரதட்சிணம் செய்யும்போது அவர்கள் கண்டுணர சிவபெருமானின் வெவ்வேறு வடிவங்களை பழங்கால ஸ்தபதிகள் எவ்வாறு அமைத்தனர் என்று கண்டோம்.

இன்றைய பதிவில் சிற்ப நிரலின் விவரங்களை பற்றிய ஒரு கதையை கூறப்போகிறேன். இந்த கோவிலில் சிவனின் வடிவங்கள் மிக அற்புதமான வேலைப்பாடுடயவை. அவற்றின் அழகும் பாவமும் தனித்தன்மை கொண்டவை. இந்த வடிவங்களின் ஒரு சில லக்ஷணங்கள் தனித்துவம் வாய்ந்ததும் ஆர்வத்தை தூண்டுவதும் ஆகும். கோவில் மாடங்களில் உள்ள மூர்த்திகளுடன் கூடிய சாமரங்களே அவை.

நான் இது வரை கண்ட கோவில்கள், தென்னிந்தியாவின் மொத்த கோவில்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காடே என்றாலும், அவற்றிலும் ஒரு சில கோவில்களை காண முடிந்தது எனது அதிர்ஷ்டமே ஆகும். எந்த கோவிலாக இருந்தாலும், ஒவ்வொரு முறை செல்லும்போதும், புதிய விளக்கங்கள், புதிய புரிதல், புதிய அழகு தென்படுகிறது. திருவட்டதுறையில் உள்ள சிவாலயம் ஒரு பொக்கிஷம் மட்டுமல்ல, மறைபொருள் கொண்டதாகவும் விளங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் மிகச் சிறியதும், அதிகம் பேர் அறிந்திராததுமாக விளங்கும் இக்கோவிலின் சிற்பங்களின் அபூர்வமான அழகே இதை ஒரு பொக்கிஷம் என எடுத்துக் காட்டுகிறது. மறைபொருள் கொண்டது என நான் கூறுவதற்கு காரணம் இங்கு சில மூர்த்திகளுடன் காணப்படும் சாமரங்கள் ஆகும்.

சாமரம் என்பது கவரிமானின் வால்முடியால் செய்யப்பட்டு வெள்ளி கைப்பிடி பொருத்திய ஒரு விசிறி ஆகும். தெய்வ வழிப்பாட்டில் அளிக்கப்படும் ஒரு முக்கிய உபசாரமாக இது கருதப்படுகிறது. மேலும் அரசர்களுக்கும் உயர் பதவி வகிப்போருக்கும் அளிக்கப்படும் மரியாதையாகவும் விளங்குகிறது. சரித்திர கதைகள் கொண்ட திரைப்படங்களில் அழகிய பெண்கள் அரசரின் ஆசனத்திற்கு பக்கங்களில் நின்று கொண்டு இத்தகைய சாமரங்களை வீசுவதை கண்டிருக்கிறோம். இன்றும் பல கோவில்களில் வழிபாட்டிலும், திருவிழாக்களின் போதும் சாமரங்கள் வீசப்படுவதை காண்கிறோம். எனவே, ஒரு தெய்வத்தின் சிற்பத்தில் சாமரம் இருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விஷயம் இல்லை. மேலும் அவை கதை சொல்லும் சிற்பங்களில், அதாவது ஒரு கதையையோ அல்லது நிகழ்ச்சியையோ விளக்கும் சிற்பங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் கோவிலின் மாடங்களில் செதுக்கியுள்ள சிற்பங்களில் இத்தகைய சாமரங்களை நான் இதுவரை கண்டதாக என் நினைவில் இல்லை.


இங்கே திருவட்டதுறையில் இரு மூர்த்திகளில் மிகத் தெளிவாக சாமரங்கள் காணப்படுகின்றன. தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள நடராஜரின் சிற்பம் அழகிய இரண்டு சாமரங்களால் கௌரவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் வடக்கு முகமாய் உள்ள மாடத்தில் உள்ள பிரம்மாவிற்கும் அவ்வாறே இரண்டு சாமரங்கள் உள்ளன. வழக்கமாக உபயோகப்படுத்தும் வகையில் இல்லாது, இந்த சாமரங்கள் சிரசின் பக்கங்களில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் கைப்பிடிகள் கவரிமான் இறகுகளின் மீது ஒரு விதமாக மடிக்கப்பட்டுள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளன. நடராஜர் மற்றும் பிரம்மாவின் அருகில் உள்ள சாமரங்களின் கைப்பிடிகள் வேறுபட்டிருக்கின்றன. மேலும் அந்த மூர்த்திகளின் நிலையில் அவற்றின் அமைப்பும் சற்றே மாறுபட்டுள்ளன.

தெற்கு அர்த்தமண்டப சுவற்றில் உள்ள விநாயகர் சிற்பமும் சிற்பிகளால் குடை மற்றும் ஒரு ஜோடி சாமரங்கள் செதுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன. மேலும் பிக்ஷாடனரின் பின்பும் மேலேயும் இரண்டு சாமரங்களின் வடிவம் மங்கிய கோடாக தெரிகின்றது. இந்த சாமரங்களின் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இவை முழுமையாக செதுக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்டவை போல் தோன்றுகின்றன. இவற்றின் மீது எண்ணெயும் தடவவில்லை.

மேற்கு சுவற்றில் உள்ள மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மேலேயும் பின்புறமும் ஒரு ஜோடி சாமரங்கள் காணப்படுகின்றன. இதுவும் எண்ணெய் தடவாமல் முழுமை பெறாமல் உள்ளது.

திருக்கோவிலின் மாடங்களில் உள்ள மற்ற மூன்று மூர்த்திகளாகிய தக்ஷிணாமூர்த்தி, கங்காவதாரனார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியவைகளுக்கு சாமரங்கள் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. துர்கையின் பின்புறம் உள்ள இடம் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அங்கே இரு சாமரங்கள் அமைப்பதற்குரிய இடவசதி இல்லை. அவ்வாறே முகமண்டபத்தின் சுவற்றில் உள்ள பைரவருக்கும் சாமரங்கள் அளிக்கப்படவில்லை.


இந்த விவரத்தை பற்றி இவளுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று வாசகர்களுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். சாமரங்கள் அழகானவை. மேலும் இந்தக் கோவிலின் சிற்பங்களை மிக சிறப்பானவையாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இவற்றின் நோக்கம் என்ன? சாமரங்கள் சில சிற்பங்களில் இருப்பதற்கும் சிலவற்றில் இல்லாதிருப்பதற்கும் காரணம் ஒரு வேளை இவை இந்த கோவிலின் கலை சரித்திரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றனவோ என்று எனக்கு தோன்றுகிறது.

முந்தைய பதிவில் நாம் கண்டபடி, அர்த்தமண்டப சுவற்றில் உள்ள ஆறு மாடங்களில் நான்கு வெட்டப்பட்ட மாடங்களாகும், உண்மையான தேவகோஷ்டங்கள் அல்ல. விநாயகரும் துர்கையுமே தேவகோஷ்டங்களில் அமர்ந்துள்ளனர். விநாயகருக்கு ஒரு குடையும் இரு சாமரங்களும் உள்ளன. ஆனால் இவை முற்று பெறாமல் உள்ளன. துர்கைக்கோ சாமரங்கள் அளிக்கப்படவில்லை. மறுபடி விநாயகர் சிற்பத்தை காணுங்கள். விநாயகர் மூர்த்திக்கு சரிவர இடம் தருவதற்காக குடை மற்றும் சாமரங்கள் ஒரு துளி வெட்டப்பட்டு உள்ளன.

தக்ஷிணாமூர்த்தி இருப்பது ஒரு ஆழமில்லாத, வெட்டப்பட்ட மாடத்தில் ஆகும். அதிலும் ஒரு கருங்கல் பலகையில் அமைக்கப்பட்டு ஒரு மாடத்தில் சேர்க்கப்பட்டதாகும். நடராஜரும் அவ்வாறே. ஆனால் இங்கே சாமரங்கள் நடராஜரின் சிற்பத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. லிங்கோத்பவருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை மாடத்தின் பின்புல சுவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. பிரம்மாவின் சாமரங்களும் அந்த சிற்பத்திலேயே உள்ளன, பிறகு அந்த சிற்பத்தை சுவற்றின் மாடத்தில் பொருத்தியுள்ளனர். மற்ற நான்கு சிற்பங்களுக்கும் சாமரங்கள் இல்லை.

மேலும் சிற்பங்களின் தோற்ற வடிவமைப்பை காணும்போது பல வித்தியாசங்களை காண முடிகிறது. பிரம்மாவிற்கு அரைக்கச்சு கொக்கியாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள கீர்த்திமுகம் உள்ளது. லிங்கோத்பவரின் அரைக்கச்சு கொக்கியோ சோழரின் தொன்மை வாய்ந்த சிற்பங்களில் காணப்படும் கீர்த்திமுகம் போன்று இல்லை. கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் அரைக்கச்சு கொக்கிகள் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும் இந்த மூர்த்திகளின் யக்ஞ்யோபவீதமும் மாறுபட்டுள்ளன. அவற்றில் உள்ள முடிச்சும், அவை உடலின் குறுக்கே தொங்கும் விதமும் வெவ்வேறாக உள்ளன. மேலும் இந்த நான்கு மூர்த்திகளையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால், அவைகளின் இடுப்பில் கட்டப்பட்டுள்ள இடுப்பாடையின் அமைப்பிலும் அவற்றின் ஆழத்திலும் வித்தியாசத்தை காணலாம். லிங்கோத்பவர் மற்றும் கங்காவதாரனாரின் இடுப்பாடைகள் சற்றே ஆழமாக உள்ளன. ஆனால் பிரம்மா மற்றும் அர்த்தநாரீஸ்வரரின் இடுப்பாடைகள் ஒரே விதமாக உள்ளன. ஒரு வேளை கலையின் பரிணாம வளர்ச்சியை இங்கே காண்கிறோமா? அல்லது வெவ்வேறு சிற்பிகள் வடித்த சிற்பங்களை காண்கிறோமா? இரண்டு வகை அரைக்கச்சுகள், இரண்டு வகை இடுப்பாடைகள் என வித்தியாசம் ஏன்?




ஆக, இதன் மூலம் நாம் அறியும் விஷயம் என்ன? அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நான்கு மாடங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், மொத்தம் உள்ள ஆறு மாடங்களில் நான்கு இக்கோவிலின் அசல் வடிவமைப்பில் இல்லை. இரண்டு மூர்த்திகளின் சிற்பத்திலேயே இரண்டிரண்டு சாமரங்கள் உள்ளன. மூன்று மூர்த்திகளில், சிற்பத்திற்கு வெளியே, மாடத்தின் சுவற்றில் முடிவுறாத நிலையில் சாமரங்கள் காணப்படுகின்றன.

இந்த மூர்த்திகளின் தோற்ற வடிவமைப்பில் உள்ள வித்தியாசங்கள், மேலும் சிற்பத்தில் காணப்படும் அல்லது காணப்படாதிருக்கும் சாமரங்கள், ஆகியவற்றையும் வைத்து பார்க்கும்போது, இந்த மூர்த்திகள் பிற கோவில்களிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்க கூடியவையாக இருக்கக் கூடும். மேலும் காலத்தின் வெவ்வேறு சமயங்களில் அமைக்கப்பட்டதாகவும், இந்த கோவிலுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் வந்து சேர்ந்திருக்க கூடியதாவும் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு குழுவாக இந்த சிற்பங்கள் தரத்தையும் அழகிய அமைப்பையும் கொண்டுள்ளன.

துர்க்கை மற்றும் விநாயகர் சிற்பங்கள் அர்த்தமண்டப சுவற்றின் நாடு நாயகமாக உள்ள மாடங்களில் உள்ளன. இந்த மாடங்கள் சற்றே குறுகலாகவும், உயரமாகவும் இருக்க, இந்த மூர்த்திகள் அவற்றில் சரியாக பொருந்தி உள்ளன. இருப்பினும் விநாயகர் உள்ள மாடத்தின் சுவர் அந்த சிற்பம் சரியாக பொருந்த சற்றே வெட்டப்பட்டுள்ளது. இதுவே இந்த சிற்பம் இந்த மாடத்திற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதற்கு ஒரு அறிகுறி ஆகும். பிக்ஷாடனர், நடராஜர், கங்காவதாரனார் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வெட்டப்பட்டுள்ள மாடங்களில் உள்ளனர். இந்த கோவில் கட்டப்பட்ட பின்பு இந்த மூர்த்திகள் வேறு எங்கிருந்தாவது கொண்டு வரப்பட்டு இங்கே பொருத்தப்பட்டனவா? அல்லது இந்த கோவிலின் தலைமை சிற்பி கட்டுமானம் பாதி நடந்துகொண்டிருந்த வேளையில் தன் மனதை மாற்றி கொண்டு அமைத்ததா? அரசியல் மற்றும் பொருளாதார மாறுபாடுகள், அல்லது, சமய நம்பிக்கைகளில் எழுந்த மாறுபாடுகள் அல்லது ரசிப்புத்தன்மையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் சான்றாக இவை காட்சி அளிக்கின்றனவா?

பிரம்மாவிற்கு அவருடைய சிற்பத்திலேயே சாமரங்கள் உள்ளன. விமானத்தின் சுவற்றில் உள்ள ஒரு மாடத்தில் அவர் அமைக்கப்பட்டுள்ளார். வெட்டப்பட்டுள்ள ஒரு மாடத்தில் அமைந்துள்ள நடராஜருக்கும் சாமரங்கள் உள்ளன. ஆனால் அவை இரண்டுமே அமைக்கப்பட்டுள்ள விதத்திலும் நிலையிலும் மாறுபட்டு உள்ளன. வடக்கு மாடத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு மாடத்தில் சுவற்றில் சாமரங்கள் உள்ளன. ஆனால் தெற்கு மாடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு அவ்வாறு சாமரங்கள் இல்லை. இந்த மூர்த்தி மாடத்தின் முழு இடத்தையும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், அதிஷ்டானத்தில் இருந்து சிறிது வெளியிலும் முன்புறம் துருத்திக் கொண்டவாறு ஆசனத்தில் அமர்ந்து ஒரு அசுரன் மீது கால் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆக, இங்கே நாம் அறிந்துகொள்ள ஒரு சிறிய மர்மம் அல்லது மாயம் உள்ளது. ஒன்றிரண்டு சிற்பிகள் மூர்த்திகளுடன் கூடவே சாமரங்களையும் சேர்த்து வடித்துள்ளனர். இவ்வாறு செய்யும் எண்ணம் ஏன் எழுந்தது என்று தெரியாத போதிலும், இதை தொடங்கிய விரைவிலேயே இவை கைவிடப்பட்டதும் புலனாகிறது. ஏன் துவங்கினர், எப்போது இவை கைவிடப்பட்டன என்பதற்கு நான் சரியான காரணங்களை தற்சமயம் வழங்க இயலாது. அதன் காரணங்களை அறிய நமக்கு மேலும் தகவல்கள் வேண்டும். கல்வெட்டுகள், நமது தொன்றுதொட்ட பழக்கங்கள், அல்லது புராணங்களில் இருந்து இவற்றுக்கு விடை கிடைக்கக்கூடும். அல்லது மற்ற கோவில்களின் சிற்பங்களுடன் இந்த கோவிலின் சிற்பங்களை ஒப்பீடு செய்வது மூலமும் விடை கிடைக்கலாம். இருப்பினும் மொத்தத்தில், இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற ஆர்வத்தை நம்மிடையே தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

மொழிபெயர்ப்பு : தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன்
படங்கள் : பதிவு ஆசிரியர் மற்றும் நண்பர் திரு சேகர் அவர்கள்

தொன்மையான இரு விஷ்ணு திருமேனிகளின் தற்போதைய நிலை

“கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” , “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” இவை அனைத்தும் பள்ளியில் படித்தவுடனே மறந்துவிடவேண்டும் போல உள்ளது இன்றைய தமிழ் நாட்டில் வழக்கு. இதை முழுவதுமாக சென்ற இரண்டு மாத சம்பவங்கள் உறுதி படுத்தின.

லண்டன் செல்ல தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. உடனே அங்கே உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் உள்ள செப்புத் திருமேனிகளை தரிசிக்க ஆவல் கொண்டு ஒரு தினத்தை ஒதுக்கினேன். இதுவரை அவற்றை பற்றி படித்த கொஞ்ச நஞ்சத்தில் தெரிந்தது – சிறிய அளவாக இருந்தால் அவை காலத்தால் முற்பட்டு இருக்கும் – மதிப்பு டாலரில் மட்டும் அல்ல, அவை அதனுள் அடக்கும் விஷயங்களும் தான்.

சட்டென கண்ணில் பட்டது ஒரு விஷ்ணு சிலை – காலம் 9 C CE. கொள்ளை அழகு, சிலை மட்டும் அல்ல, அதனை அவர்கள் காட்சிக்கு வைத்திருந்த பாணியும் அருமை – ’மதிப்பதற்கு முடியாத’ அளவில் பெருமைமிக்க பொக்கிஷத்தை அதற்கே உரிய மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.

அருமையான சிற்பம், வலது மார்பில் ஸ்ரீவத்சம், யக்நோபவீதம் என்று பல அம்சங்கள் இதன் காலம் கடை பல்லவ அல்லது ஆரம்ப சோழர் காலமாக இருக்கலாம் என்று கருத உதவுகின்றன. ஆரம்ப சோழர் காலம் ஏன், என்ற கேள்விக்கு சுலபமாக பதில் கூறலாம். சிற்பத்தின் சிறிய அளவு, பிரயோக சக்கரம். கடை பல்லவர் காலம் ஏன் என்பதற்கு கொஞ்சம் ஆராய வேண்டும்.

அதை பற்றி மேலும் படிக்க திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் 1963 ஆம் ஆண்டு நூல் Bronzes of South India – P.R. Srinivasan, உதவி செய்தது. தென் இந்திய செப்புத் திருமேனிகளில் மிகவும் தொன்மையானவை பல்லவ விஷ்ணு திருமேனிகளே – மாயவரம் அருகே பெருந்தோட்டம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்.

இதுவே அந்த திருமேனி காலம் – 8th C CE முற்பகுதி

அடுத்து 8th C CE பிற்பகுதி.

இவை இரண்டும் மிகவும் முக்கியமான பொக்கிஷங்கள். இவற்றை விவரிக்க ஐந்து பக்கங்களை திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் எடுத்துகொள்வதை கொண்டே இவற்றின் அருமையை நாம் அறியலாம். தற்போதைய இடம் தஞ்சை கலைக் கூடம் என்ற குறிப்பை கண்டதும் ஒரு சிறு குழப்பம். அங்கே இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கும் குறிப்பே இல்லையே. நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். கணினியில் படங்களை அலசினேன். எங்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் திருமேனிகளை காணவில்லை. நண்பர் சதீஷ் அவர்களது படங்களை பார்க்கும்போது – விடியற்காலை மணி சுமார் நாலு இருக்கும், ஆஹா, அதோ அதோ …

ஆமாம், பெயர் பலகை கூட இல்லாத அலமாரியில், பத்தோடு பதினொன்றாய் ஒரு ஓரத்தில் கிடக்கின்றன இவை.

நிஜமாகவே இவை தான் அந்த விலை மதிக்க முடியாத திருமேனிகள் என்ற ஐயம் எழ மீண்டும் ஒரு முறை நண்பர்களிடம் உதவி நாடினேன். சதீஷ் மீண்டும் ஒரு முறை இதற்காகவே தஞ்சை சென்று படங்களை பிடித்தார். ஆனால் நிலைமை மாறவில்லை – மேலும் மோசமாக – அலமாரியில் உடைந்த பிளாஸ்டிக் பொருள் இறைந்து கிடக்க காண்கிறோம். ஆனால் சந்தேகமே இல்லை – இவை தான் தென்னாட்டில் மிகவும் தொன்மையான செப்புத் திருமேனிகள்.

இவற்றின் மதிப்பு அறிந்துமா இப்படி வைத்துள்ளனர்? திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் விலைக்கு விற்கப்படும் நூல். அந்த நூலின்படி முதல் இந்து சிற்பங்கள் இவை இரண்டும் தான். தஞ்சையில் அதிகாரிகளை தெரிந்த யாராவது இந்த நிலைமையை மாற்றி இவற்றுக்கு உரிய மரியாதை மதிப்புடன் ஒரு தனி காட்சிப் பெட்டி அமைத்துத் தர வேண்டுகிறேன்.

சரி, இந்த சிலைகளை மேலும் நாம் ஆராயும் முன்னர், நமக்கு தெரிந்த பல்லவ கால சிலைகளை உங்களுக்கு முதலில் காட்டுகிறேன். மல்லைத் தவக் காட்சியில் வரும் விஷ்ணு, ஆதி வராஹா மண்டபத்தில் உள்ள விஷ்ணு, தர்மராஜா ரதத்தில் இருக்கும் ஹரிஹர வடிவம் (படங்களுக்கு நன்றி சௌராப்), கில்மாவிலங்கை (நன்றி சாஸ்வத்)


நமக்கும் கடை பெஞ்சுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு…இந்த இரு நண்பர்களையும் அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

தொடரும் ….

அங்கே இருப்பது தான் வேதாளம் !

” கண்டிப்பாக தொட்டகட்டவள்ளி சென்று பாருங்கள் ” என்று பலமுறை நண்பர் திருமதி லக்ஷ்மி சரத் அவர்கள் கூறினார்கள். கர்நாடகத்தில் இருக்கும் பல சுற்றுலா மற்றும் பாரம்பரிய விஷயங்களில் வல்லுனரான அவரது துணையுடன் தான் ஹோய்சாளர்கள் படைப்புக்களை சென்று ஜூன் மாதம் பார்க்க பட்டியல் தயார் செய்தேன்.

“ஹசனில் தங்குங்கள். அங்கிருந்து பேலூர் செல்லும் வழியில் சுமார் 20 kms பயணித்த பின்னர் ஹோய்சால வில்லேஜ் ரிசோர்ட் தாண்டியவுடனே இடது புறம் தொடகடவள்ளி என்ற பெயர்ப் பலகை இருக்கும். அங்கே திரும்புங்கள் என்றார்.”

பெயரே சற்று வித்தியாசமாக இருந்தது. சிறு பலகை தான், ஆனால் சிரமம் இல்லாமல் அடையாளம் கண்டுகொண்டோம். ஒரு சிறு கிராம பாதை வழி இன்னும் ஒரு 3 கிலோமீட்டர் பயணம். வழியில் நம்மை ஆச்சரியத்துடன் பார்த்த கிராமவாசிகள், ஆனால் அங்கும் அழகிய சீருடை உடுத்தி பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை கண்டு எமக்கு மகிழ்ச்சி.

கண்ணில் பட்ட வரைக்கும் நல்ல இயற்கை காட்சிகளே தெரிந்தன. இந்த தொடகடவள்ளி இன்னும் வரவில்லையே. அதோ அங்கே ஒரு அழகிய குளம், அதன் கரையில் என்னமோ தெரிகிறதே.

இலக்கை நோக்கி மீண்டும் பயணம் செய்தோம். பாதை ஒரு சிறு கிராமத்தினுள் சென்று முடிந்தது. பின்னர் மண் பாதை தான். முடிவில் சிறு கிராமத்து வீடுகளுக்கு நடுவே 898 ஆண்டுகள் நிற்கும் ஆலயம். அதை பற்றி மேலும் படிக்க பழைய நூல் ஒன்று கிடைத்தது

Mysore Archeological Series –
ARCHITECTURE AND SCULPTURE IN MYSORE No. III

THE LAKSHMIDEVI TEMPLE AT DODDAGADDAVALLI
BY
PRAKTANA-VIMARSA-VICHAKSHANA, RAO BAHADUR

P. NARASIMHACHAR, M.A., M.B.A.S.
Honorary Correspondent of the Government of India, Archaeological Department,

Printed under the authority of the Government of his Highness, the Maharaja of Mysore, in 1919.

அங்கே இருந்த ஒரு வாலிபன் எங்களை உள்ளே கூட்டிச் சென்று தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கினான்.

அதற்கு முன்பு இக்கோவிலை பற்றிய சிறிய அறிமுகம். அந்த புத்தகத்திலிருந்து சில வார்த்தைகள்:

“தொட்டகட்டவள்ளியில் உள்ள லக்ஷ்மி தேவி கோவில் ஹோய்சாளர்களின் அழகிய சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது நான்கு அறைகள் கொண்டது. இந்த வகையான ஹோய்சாளர் கட்டுமானம் மாநிலத்திலேயே இது ஒன்று மட்டுமே போலும். கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம், கி.பி. 1113ஆம் ஆண்டில் ஹோய்சாள அரசர் விஷ்ணுவின் ஆட்சியின்போது இருந்த பெரும் வணிகராகிய குள்ளஹண ரஹுதாவும் அவரது மனைவி சஹாஜதேவியும் அபிநவ கொல்லாபுரா எனும் கிராமத்தை தோற்றுவித்து தாயார் மகாலக்ஷ்மிக்கு அங்கே ஒரு கோவில் எடுப்பித்ததாகவும் அறிகிறோம். பேலூரில் மன்னர் விஷ்ணுவால் கி.பி. 1117-இல் கட்டப்பட்ட கேசவ கோவிலுக்கு நான்கு ஆண்டுகள் முன்பே இது கட்டப்பட்டதால், ஹோய்சாளர்களின் கட்டுமானங்களிலேயே இது ஆரம்ப காலங்களில் கட்டப்பட்டதாகும்.”

இத்தனை சரித்திர பின்புலம் இருந்தும், இதென்ன நமது பதிவின் தலைப்பு? சற்றே பயமுறுத்துவதாக உள்ளதே!! அங்கே இருப்பது தான் வேதாளம், நாங்கள் கோவிலுக்குள் நுழைகையில் சூரியன் நன்றாக தன் வேலையை செய்ய துவங்கிய நேரம். இருப்பினும் உள்ளேயோ கும்மிருட்டு. நான் என் வலப்புறம் திரும்பி சிறிது பின்னோக்கி சென்று கோவிலின் முகப்பினை தூரத்தில் நின்று கவனித்தேன். காளியின் சந்நிதி

அந்த இளைஞன் பல விவரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான். இருப்பினும் என் மனம் ஒரே விஷயத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது – வேதாளம். இந்த கோவில் மிகத் தனித்துவம் பெற்றது. ஏனெனில், காளியின் சந்நிதி விஷ்ணுவின் சந்நிதிக்கு எதிரேயும் மற்ற இரண்டில் ஒன்றில் பூதநாதனாக சிவபெருமானும் அவருக்கு எதிரில் லக்ஷ்மியின் சந்நிதியும் உள்ளன.

காளியை அமைதிப்படுத்த விஷ்ணுவும் சிவனை அமைதிப்படுத்த லக்ஷ்மியும் எதிரிலே இருப்பதாக அந்த இளைஞன் கூறினான். ஒரு வேளை இவ்வாறும் இருக்கலாம்; காளியும் சிவனும் அருகருகேயும் விஷ்ணுவும் லக்ஷ்மியும் தம்பதி சமேதராக காட்சி அளிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் விஷ்ணுவின் சந்நிதியில் கேசவனின் அழகிய வடிவம் இருந்ததாகவும் அதனை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் அந்த இளைஞன் விவரித்தான்.

நிழற்படம் எடுக்க அனுமதி உண்டா என்று அவனிடம் நாங்கள் கேட்க, தடை ஏதும் இல்லை என்று அவன் கூறவும் நாங்கள் படம் எடுக்க துவங்கினோம். முதலில் காளி. ஆனால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால், சரிவர காண முடியவில்லை.

ஆனால் அந்த புத்தகமோ மிகவும் உக்ரமான வடிவமாக காளியின் உருவத்தைச் சித்தரிக்கிறது.

காளி கோரமான் உருவத்துடனும் எட்டு கரங்களுடனும், ௩ அடி உயரம் கொண்டு, அரக்கனின் மீது அமர்ந்து, வலக் கரங்களில் சூலம், வாள், அம்பு மற்றும் கோடாரியும், இடக் கரங்களில் உடுக்கை, பாசக்கயிறு, வில் மற்றும் கபாலம் ஏந்தி இருக்கிறாள்.

படம் எடுக்கையிலே விழுந்த ஒளியால் இருள்சூழ்ந்த இடங்கள் தெளிவாக தெரிய, நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். சிறு வயதில் கூறப்பட்ட பயங்கர கதைகள் எங்கள் முன்பு எழுந்து ஆடத் துவங்கின.

9360
9363

அங்கே இருபுறமும் ௬ அடி உயரத்தில் ௨ வேதாளங்கள் முன்புறமாக சற்றே வளைந்து, கண்கள் விரிய திறந்து, நாவு வெளிப்புறம் தொங்க எங்களை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தன.

நாங்கள் எங்கள் சுயநினைவடைந்து பார்த்தபோது ஒரு வேதாளத்தின் அருகே ஒரு பெரிய பட்டாக்கத்தி, இதை வைத்தே சமீபத்தில் யாருடைய தலையையோ வெட்டி அந்த வேதாளங்கள் தங்கள் பசியை ஆற்றியிருந்தன போலும். மற்ற வேதாளத்தின் அருகில் மேலும் ௪ குட்டி பூதங்களும் துணைக்கு இருந்தன.

இது போதாதென்று, அந்தக் கோவிலின் ஜன்னல்களிலும் வெட்டப்பட்ட தலைகளும், பிரேதங்களும், மற்றொரு வரிசை பூதங்களும் இருந்தன. அவற்றில் இரு ஓரங்களிலும் இருப்பவை புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தன.

வேதாளங்கள் என்பவை வாழ்க்கைக்கும் மரணத்தின் பின் உள்ள நிலைக்கும் இடையே கிடந்து அவதியுறும் பாவப்பட்ட ஆத்மாக்கள் என்றே நினைத்திருந்தேன். மேலும் மரங்களில் தலைகீழாக தொங்கிக்கொண்டு போவோர் வருவோரை பிடித்துக்கொள்ளும் என்றே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், ஒரு கோவிலுக்குள்ளே இவ்வாறு வேதாளங்கள் இருக்கும் என்று நினைத்ததே இல்லை. ஆனால் இறைவனே அழிக்கும் சம்ஹார மூர்த்தியாய் விளங்கி, சுடுக்காட்டில் வீற்றிருந்து, பொடி சாம்பலை பூசிக்கொண்டு காளியை மனைவியாக கொண்டு வாழும் போது வேதாளங்கள் அங்கிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா??

அடுத்து வரும் பதிவுகளில் மேலும் வளம் வருவோம்.

இரு வகை குண்டலங்கள் – ஹலெபேடு

தமிழகத்தை விட்டு இன்று கர்நாடகம் செல்கிறோம். அங்கே ஹோய்சாளர் அவர்களின் உன்னத கலைப் படைப்பு – ஹலெபேடு ஹோய்சாலேஸ்வரர் ஆலயத்தில் காதணி அல்லது குண்டலங்களை பற்றி ஒரு சிறு பதிவு. முதலில் இருபுறமும் கம்பீர வாயிற்காப்போர்களைக் கொண்ட மகேசனை தரிசிப்போம்.

பல்லவ குடைவரைகளில் உருள்தடி பிடித்த உருவங்கள் முதல் சோழர் காலத்து பிரம்மாண்ட உருவங்களைப் பார்த்த நமக்கு ஹோய்சாளர் வாயிற்காப்போர்கள் வேறு தினுசாக தெரிகிறார்கள். அங்கே நல்ல வருமானம் கிடைத்ததோ என்னமோ – உடை, அலங்காரம் என்று பவனி வருகிறார்கள் இருவரும்.

நாம் முன்னர் பார்த்த போலவே இங்கு வாயிற்காப்போனும் இரு காதுகளிலும் வெவ்வேறு காதணி அணிந்துள்ளான்.

இடது காதில் மிக அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள மகர குண்டலம். முன்னர் திரு உமாபதி ஆச்சார்யா அவர்கள் நமக்கு மகரம் என்ற உன்னத படைப்பை விளக்கினார்..

ஆனால் இன்று நாம் காண இருப்பது வலது காதில் உள்ள அணி. திரு கோபிநாத் ராவ் அவர்களின் ”Elements of Hindu Iconography” என்ற நூலில் குண்டலங்களில் ஐந்து வகை என்றும், அவை பத்ர குண்டலம் (பனை ஓலை சுருட்டி இருப்பது போல – பின்னலில் அதே பாணியில் தங்கத் தகடில் வார்த்து அணிந்தார்கள்), நகர குண்டலம் (மகர குண்டலம் தான்), சங்கபத்ர குண்டலம் (சங்கை பக்கவாட்டில் வெட்டியவாறு), ரத்ன குண்டலம் மற்றும் சர்ப்ப குண்டலம் என்று விவரிக்கிறார்.

இதில் கடைசியாக வரும் வகை, பொதுவாக காதில் ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பது போல இருக்கும். இதோ பேலூர் கோயிலில் உள்ள கருடனின் காதுகளில் பாருங்கள். .

ஆனால், ஹலெபேடு வாயிற்காவலனின் காதில் இருப்பதோ பல தலை நாகம்

என்ன அருமையான வேலைப்பாடு, நம்மை பார்த்து அந்த நாகம் சிரிப்பது போல இருக்கிறது.

வேலைப்பாட்டை பற்றி சொல்லும் பொது, அந்த தலையில் உள்ள மண்டை ஓடுகளை பற்றி சொல்ல வேண்டும்.

அபாரமான வேலை, இந்த சிறிய இடத்தில, உள்பக்கம் உள்ள கல்லையும் குடைந்து உள்ள நுணுக்கம் அபாரம்.

ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது ?

பரிட்சைகளில் சில கேள்விகள் பார்ப்பதற்கு கடினமாக இருக்கும், ஆனால் விடை தெரிந்த பின்னர், அட இவ்வளவுதானா என்று தோன்றும். அது போலத்தான் நான் இன்று விடை தேடும் கேள்வியின் பதில். இரு தேவியருடன் இருக்கும் நமது மூர்த்திகளில் எப்படி வித்தியாசம் காண்பது? உதாரணத்திற்கு ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது ? எதற்காக தெரியவேண்டும் என்று சிலர் கேட்கலாம் – இருவரை வேண்டினால் கிடைக்கும் பலன்கள் வெவ்வேறாயிற்றே !

அதேபோல பூமியில் புதையுண்டு கிடைக்கும் மூர்த்தி சிலைகள் தனியாக கிடைக்கின்றன. அப்போது இந்த கேள்வியின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதன் விடை மிகவும் எளியது. சிற்ப சாஸ்திர முறைப்படி ஸ்ரீதேவி மார்க்கச்சை அணிந்தும் பூதேவி அணியாமலும் வடிக்கப்பட வேண்டும்.

சோதித்துப் பார்ப்போமா ? மலையடிப்பட்டி ஒளிபாதி விஷ்ணு க்ரிஹம் குடவரைக்கோயிலில் உள்ள இந்த பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சிற்பத்தை பார்ப்போம்.

அருகில் சென்று இரு தேவியரின் உடை அலங்காரத்தை பார்ப்போம்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறதா ? இந்த மார்க்கச்சை குச்சபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதே போல லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் 10 ஆம் நூற்றாண்டு செப்புத் திருமேனிகளை பாருங்கள்.

பெருமாள் திருமேனி பற்றியும் அதன் வளர்ச்சி இதை விட காலத்தால் பிந்தைய சில வடிவங்களை கொண்டு விரைவில் படிப்போம். தற்போது தேவியரை மட்டும் பார்ப்போம்.

ஸ்ரீதேவியின் அருகில் சென்று பார்ப்போம்.

கச்சை / குச்சபந்தம் தெளிவாக தெரிகிறது.

அடுத்து பூதேவி. மார்க்கச்சை இல்லை.

இங்கு லண்டன் அருகாட்சியகக் குறிப்பில் உள்ள ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட வேண்டும் . பெயர் குறிப்பில் பூதேவி என்று சொல்லிவிட்டு ” இங்கு அவர்கள் மார்க்கச்சை / குச்சபந்தம் அணிந்துள்ளார் ” என்று தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த செப்புச் சிலையில் மட்டும் அல்ல சிற்ப சாஸ்திர முறைப்படி அவர் அணிவதில்லை.

இதை தக்க முறையில் லண்டன் அருங்காட்சியக அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

முந்தைய பதிவில் மகேசன் கையில் விடத்தை எடுக்கும் காட்சியை பார்த்தோம். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் சுருட்டுப்பள்ளி ( சென்னை திருப்தி வழியில் சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் ) இருக்கும் சிற்பத்தை கொண்டு, நண்பர் மருத்துவர் திரு ஷங்கர் குமார் அவர்கள் அருமையான புதிய நடையில், நண்பர் திரு அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களது படங்களுடன் இதோ ஆலங்குடியானின் அற்புதக்கோலம்.

திருச்சிற்றம்பலம்.

‘முடியாதுன்னா முடியாதுதான்! எவ்ளோ கெஞ்சிக் கேட்டாலும் இதான் பதில்!’ தனது தலையை இப்படியும் அப்படியுமாக வேகமாக ஆட்டியபடியே தீர்மானமாகச் சொல்கிறார் நந்தியார்!

பரிதாபமாகக் கெஞ்சியபடி நின்ற கூட்டம் நிம்மதி இழந்து தவிக்கிறது.

மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், வாயு, அக்னி, வருணன், நாரதர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, இன்னும் இவர்களுடன் எண்ணிலடங்காத் தேவர்களும், முனிவர்களும் அங்கே பதற்றத்துடன் நிற்கிறார்கள்.

‘எல்லாம் இவரால் வந்தது’ எரிச்சலுடன் முணுமுணுக்கிறார் வாயு பகவான்.

தன்னைப் பார்த்துத்தான் சொல்கிறார் எனப் புரிந்த இந்திரன், ‘நான் என்ன எனக்காகவே கேட்டேன்? நம்ம எல்லாருக்காவும்தானே?’ எனப் பதிலுக்கு முறைக்கிறார்.

‘சரி, சரி, இப்ப பழசையெல்லாம் கிளற வேண்டாம்’ எனச் சமாதானப் படுத்த முனைந்தார் பிரமதேவன்.

‘அதெப்படி? வாயு பகவான் சொல்வதும் சரிதானே? இந்திரன் அமிர்தம் வேணும்னு கேட்கப்போனதாலதானே இத்தனை அமர்க்களமும் ஆச்சு.’ எனச் சிண்டு முடிந்தார் நாரதர்.

‘விடாம, துரத்தித் துரத்தி நம்மளையெல்லாம் இம்சை படுத்தின ராக்ஷசர்களோட தொல்லை பொறுக்க முடியாமத்தானே பாற்கடலைக் கடைஞ்சு அமிர்தம் எடுக்க முடிவு செஞ்சோம்? அப்பவும் நம்மளோட சக்தி மட்டும் அதுக்குப் போறாதுன்னுதானே, வேற வழியில்லாம அவர்களையும் கூடச் சேர்த்துகிட்டோம்? இப்படியெல்லாம் ஆகும்னு யார் கண்டா?’ எனச் சற்று தைரியமாகக் குரலை உயர்த்தினார் இந்திரன்.

‘நீ சொல்றதுல்லாம் வாஸ்தந்தான். யாரு இல்லைன்னாங்க? வாசுகியை கயிறா வைச்சுகிட்டு, வடவரையை மத்தாட்டமா கடைஞ்சோம். எங்கே தலைப் பக்கத்தைப் பிடிச்சா பாம்பு கடிச்சிருமோன்னு பயந்துபோயி, நீங்கள்லாம் வாலைப் பிடிச்சுண்டீங்க பாரு, அங்கதான் தப்பாயிடுச்சு. அந்த முரட்டு அரக்கர்கள்லாம் சேர்ந்து வாசுகியோட தலையைக் கெட்டியாப் பிடிச்சு நசுக்கிட்டாங்க பாவிப்பசங்க! வலி தாங்க முடியாம அது தன்னோட வேலையைக் காட்டிடிச்சு. பொங்கிவந்த அந்த ஆலகால விஷத்தைப் பார்த்ததுமே, அதோட உக்ரம் தாங்கமுடியாம எல்லாருமா ‘துண்டைக் காணும், துணியைக் காணும்’னு ஓடிட்டீங்க.’ என நிறுத்தினார் பிரமன்.

‘நான் சொல்லலை…. கொஞ்சம் சீண்டிவிட்டாப் போதும். என்னோட தந்தையார் எல்லா விஷயத்தையும் சொல்லாம நிறுத்த மாட்டார்’ என்பதுபோல ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார் நாரதர்!

அதைக் கவனியாதவர்போல பிரமன் தொடர்கிறார்.

‘விஷமா, அப்பிடியே சீறிப் பாயறது. அந்த உஷ்ணம் தாங்காம, லோகமே…. இந்தப் பிரபஞ்சமே கிடுகிடுத்துப் போயிடுத்து! எனக்கா கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன பண்றதுன்னே புரியலை எனக்கு! நேரா அந்த ஆபத்பாந்தவன் சாக்ஷாத் பரமசிவனை விட்டா வேற வழியில்லைன்னு புரிஞ்சிடுத்து.’

‘நிஷ்டையுல இருந்த பரமேச்வரனைப் பாக்கறதுகாக, அப்பவும், இதோ கெஞ்சிக் கூத்தாடிண்டு நிக்கறோமே, அப்படித்தான் இந்த நந்தி பகவான்கிட்ட மன்னாடி, ஒருவழியா அவரையும் மீறிண்டு உள்ளே போயிட்டேன். எல்லாம் புரிஞ்சவர்மாதிரி, தன்னோட கடைக்கண்ணால, பக்கத்துல் நிக்கற சுந்தரரைப் பாக்கறார் சர்வேச்வரன்.’

‘அடுத்த நொடியே, சுந்தரரைக் காணலை அங்கே! சித்த நாழியுல, கையுல அந்த விஷத்தை எடுத்துகிட்டு வரார் அந்தப் பிரபு! கொஞ்சங்கூட முகத்துல இருக்கற களை மாறவேயில்லை அவருக்கு! இத்தனைக் கொடிய விஷத்தைக் கையுல வச்சிண்டிருக்கோமேன்ற பதட்டமே இல்லாம வரார்! அப்படியே வந்து பவ்யமா சிவன் முன்னாடி கையை நீட்டிண்டு நிக்கறார்.’

‘அப்போ நடந்ததுதான் பெரிய ஆஸ்சர்யம்!…. நீங்கள்லாந்தான் அங்கே அப்போ இல்லியே! அதனாலத்தான் இவ்வளவு விவரமாச் சொல்றேன்…… பரமசிவன் லேசாக் கண்ணைத் திறந்து பார்க்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் கையிலிருக்கிற விஷத்தை நொடிப்பொழுதுல எடுத்து, என்னப் பண்ணப் போறாரோன்னு நினைக்கறதுக்கு முன்னாடியே, அப்படியே வழிச்சு தன்னோட வாயுல போட்டுக்கறார்!’

‘என்ன ஒரு கருணை! இந்த லோகத்தும் மேல அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை! வெளியிலும் இருக்கக் கூடாது அந்த விஷம். தூக்கி எறியவும் இயலாது. எங்கேன்னு எறியறது அதை? இருக்கற ஒவ்வொரு கணமும் அதால இந்தப் பிரபஞ்சத்துக்கே ஆபத்து!! அப்படிப்பட்ட அந்த கடுமையான ஆலகால விஷத்தை இந்த லோக க்ஷேமத்துக்காகத் தானே குடிக்க முடிவு பண்ணின அந்தக் கருணையை நினைச்சு பரவசப்படற அந்த நேரத்துலதான்’ ….என ஒரு இடைவெளி கொடுத்து சுற்றி இருந்தவர்கள் முகத்தைப் பார்க்கிறார் பிரம்மா!

அனைவர் முகத்திலும் ஆச்சரியமும், வியப்பும், திகைப்பும் ஓட பிரம்மாவையே பார்க்கின்றனர்.

அனைவரின் கவனமும் தன் மேல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரமன் தொடர்கிறார்! நாரதர் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை தவழ்கிறது!

‘ம்ம்ம். மேலே சொல்லுங்க! அப்படி என்ன நடந்தது அப்போ?’ என ஆவலை அடக்கமுடியாமல் வருணன் கேட்கிறார்.

‘வாயில் போட்ட விஷம் இன்னும் தொண்டையைத் தாண்டலை! பக்கத்துல உட்கார்ந்திருந்த உமாதேவி, தனது கையால் பரமேச்வரனோட கழுத்தை இறுக்கிப் பிடிக்கறார்! விஷம் உள்ளே இறங்காம, அப்படியே தொண்டையிலியே நின்னுடுத்து!’

‘ஏன் இப்படிப் பண்ணிட்டார்னு நாங்கள்லாம் திகைச்சுப் போயிட்டோம்! அப்பத்தான் இந்த அற்புதத்தோட அருமை புரிஞ்சுது எனக்கு! யார் இந்தப் பரமேச்வரன்? அகில லோகத்துக்கும் ஆதார சுருதியே இவர்தானே! இவரோட ஆட்டத்தாலத்தானே அகிலமே ஆடறது.. ஆடிக்கொண்டு இருக்கு! அப்படிப்பட்டவரோட வயிற்றுக்குள்ளே இந்த விஷம் இறங்கிட்டா, அப்பறம் இதை வெளியுல வைக்கறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே! அது மட்டும் உள்ளே போயிட்டா, அந்த விஷம் தன்னோட வேலையைச் செஞ்சுடுத்துன்னா, இந்த லோகமே அழிஞ்சு போயிடாதா?

‘இதைப் புரிஞ்ச ஒரே ஆள் பார்வதிதான்! லோகமாதாவாச்சே அவர்! சர்வலோக ஜெகன்மாதாவுக்கு அந்தச் சிவனை விடவும் இன்னும் அதிகமான அக்கறை இந்த ஜீவராசிகள் மேலே! அதனாலத்தான், அந்த ஆலகாலத்தை அப்படியே பரமசிவனோட தொண்டைக்குக் கீழே போகவிடாம தடுத்து கருணை பண்ணியிருக்கார்! இப்படி ஒர்த்தருக்கு மேலே ஒர்த்தரா அவங்க இரண்டு பேரும் பண்ணின அற்புதத்தாலதான் இன்னைக்கு நாமெல்லாம் இப்படி நின்னு பேசிகிட்டு இருக்கோம்’ எனச் சொல்லிவிட்டு அனைவரையும் பெருமிதத்துடன் பார்த்தார்!

‘அந்த அற்புதத்துக்கு ஈடு இணை உண்டா? ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததாக் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தாலத்தானே இப்ப நாம இங்கே இப்படி நின்னுகிட்டிருக்கோம்’ என அவரை நிகழ்காலத்துக்கு இட்டு வருகிறார் பெருமாள்!

‘இதோ, இங்க நிக்கறானே இந்த நாரதன், இவன் தான் அதைச் சொன்னவன்! அவனையே கேளுங்க’ என்று நாரதரைப் பார்க்கிறார் பிரமன்.

‘அதான் ஏற்கெனவே சொல்லியாச்சே! விஷத்தை எடுத்து முழுங்கின சிவபெருமான், அது உள்ளேயும் போகாம, வெளியேவும் வராம, அப்படியே அசதியா சாய்ஞ்சுட்டாராம்! அந்த மலைமகள்தான், அவரைத் தன்னோட மடியுல சாய்ச்சுண்டாராம்! இப்ப அப்படியே கண்ணைத் திறக்காம, அந்த சர்வேச்வரன் காலை நீட்டிப் பள்ளி கொண்டிருக்கிறாம்’ என்றார் நாரதர்!

‘என்னது? பள்ளிகொண்டாரா பரமசிவன்? அது என்னோட வேலையாச்சே! அவர் கண்ணை மூடிண்டு படுத்துட்டா இந்த லோகம் என்ன ஆகிறது? அதான் இந்த பிரபஞ்சமே இருளோன்னு இருக்கு. அவரைப் பார்த்து, அவருக்கும், என்னோட சகோதரி மீனாக்ஷிக்கும் அவ்வளவு துணிச்சலா இந்த லோக நன்மைக்காக இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினதுக்காக, என்னோட வணக்கத்தையும், பாராட்டையும் சொல்லலாம்னு பார்த்தா இந்த நந்தி உள்ளே விடமாட்டேன் என்கிறாரே,’ என அங்கலாய்க்கிறார் பாரளந்த பரமன்.

மற்ற எல்லாரைப் போல இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நந்தி பகவான், மஹாவிஷ்ணுவிடம் வந்து, ‘பெருசா ஒண்ணுமில்லை. லேசா தலை சுற்றுகிறாற்போல் இருக்குன்னு சொல்லிட்டு, அம்மையின் மடியில் சயனித்திருக்கிறார் எம்பெருமான். அவர் நிஷ்டையில் இருக்கும்போது எப்படி எவரையும் உள்ளே செல்ல எனக்கு அனுமதி கிடையாதோ, அதே போலத்தான் இதுவும். ‘என்றவர், உடனேயே, ‘கொஞ்சம் இருங்க. உள்ளே ஏதோ சத்தம் கேட்கிறது. என்னன்னு பார்த்துவிட்டு வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட சூரியனும் தனது அன்றாடப் பணிகளை முடித்துவிடும் தருவாயில் லேசாக எட்டிப்பார்க்கத் துவங்கினான்!

‘நான் உதயமாக இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறது. அதற்குள் சிவதரிசனம் கிடைத்தால் நல்லாயிருக்குமே’ எனச் சந்திரன் கைகளைப் பிசைந்து கொள்கிறான்.

அவன் நினைத்ததுபோலவே அருளுறை அன்னை உடன்வர, ஆலவாய் அண்ணல் அன்புப் புன்னகை பூத்தவண்ணம் வெளியே வந்து தரிசனம் தருகிறார்!

அகிலத்தையே தங்கள் கருணையால் காப்பாற்றிய அம்மையப்பனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி ததும்புகிறது!

‘ஆலமுண்ட அண்ணலே போற்றி! அகிலம் காத்தருளிய அன்னையே போற்றி போற்றி!’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

திருச்சிற்றம்பலம்!

திருவட்டது​​றை: ஒரு ஆலயத்தின் ஜீவநாடி – சிற்பம் மற்றும் புராணம்

நமக்கு இன்று மீண்டும் ஒரு விருந்து, மிஸ். லீய்ஸ்​பெத் பங்கஜ ​பென்னிங்க் சென்ற பதிவில் ஞானக் குழந்தைக்கு கிடைத்த குடை மற்றும் பல்லக்கை மிக அழகாக நமக்கு விளக்கினார். இன்று முழு விருந்து. ஒரு ஆலயத்தை எப்படி நாம் இனி பார்க்கவேண்டும் என்று நமக்கு கட்டறுக் கொடுக்கிறார்.

ஒவ்​வொரு ​கோவிலும் ​பல்​வேறு தலவரலாறு ​கொண்டது ​போன்​றே, ஒவ்​வொரு ​தெய்வ வடிவமும், சிற்பமும் பல்​வேறு க​தைக​ளை நமக்கு எடுத்து​ரைக்கின்றன. ஒவ்​வொரு மூர்த்தமும் ஏ​தேனும் ஒரு புராணத்​தை ​மையமாகக் ​கொண்டுள்ளது. ​மேலும் அந்த சிற்பம் வடிக்கப்பட்ட காலகட்டத்தின் வரலாற்​றையும் விளக்கக்கூடியது. ஒரு புராணம் அல்லது ​தொன்மத்​தை அந்த சிற்பியின் காலகட்டத்தில் எவ்வாறு ​சொல்லப்பட்டது என்பதற்கு சான்றாக உள்ளது. சாஸ்திரத்தில் உள்ள ​கொள்​கையின் அடிப்ப​டையி​லே​யே ​தெய்வீக வடிவங்கள் அ​மைக்கப்படுகின்றன என்ற​போதும், அதற்கு உயிர்​கொடுப்பது சிற்பியின் இயற்​கையான அறிவாற்றலும், கற்ப​னைத் திறம் மற்றும் அவர் கண்ட ​மேற்​கோள்களும் ஆகும். சிற்பியின் திற​மையான ஆற்றலின்றி இத்தகு ​தொன்மங்கள் உயிர் ​பெறுவது கடினம்.

இந்த இடு​கையில் ​கோவிலின் அ​மைப்புடன் இ​​யைந்த மூர்த்திக​ளைப் பற்றி காண்​போம். ஒவ்​வொரு மூர்த்தத்தின் க​தை​யையும் தனித்தனி​யே கூறுவதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்​தை அறிய முடியும் என்பதால் அவற்​றை அவ்வா​றே கூற விரும்புகி​றேன்.

முதன்மு​றையாக ஒரு ​கோவிலுக்குள் ​செல்வ​தே ஒரு உன்னதமான அனுபவம். ஒவ்​வொரு ​கோவிலுக்கும் அதற்​கென்று ஒரு அதி​ர்வு உண்டு. அதனுள் பல ​பொக்கிஷங்ளும் உண்டு. பற்பல ​கோவில்கள் பிரபலமான​​வை, என​வே அவற்றின் பு​கைப்படங்களும் பல்​வேறு புத்தகங்களும் எளிதில் கி​டைக்கும். அவ்வாறு பிரபலமான ​கோவில்களில் நாம் நு​ழையும்​போது ஏற்கன​வே நமக்குள் எதிர்பார்ப்புகள் நி​றைந்திருக்கும். இருப்பினும் நமது உண்​மையான அனுபவ​மோ வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவு​மே இருக்கும். ஆனால், நாம் அறியாத ​கோவிலுக்குள் நு​ழைவ​தோ உண்​மையி​லே​யே மிகச் சிறந்த அனுபவமாகும். பல அற்புதங்கள் பு​தைந்துள்ள ஒரு ​பொக்கிஷ நிலவ​றைக்குள் புகும் அனுபவத்​தை ஏற்படுத்தும்.

திருவட்டது​றை சிவன்​ ​கோவிலுக்குள் ​செல்வதும் அத்த​​கைய ஒரு அற்புத அனுபவமாகும். நாங்கள் அக்​கோவிலின் முதன் ​கோபுர வாயிலில் இருந்து ​வெளிப்பிரகாரத்​தை அ​டைந்​தோம். எங்களுக்கு இடதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்குச் ​செல்லும் முற்றத்தின் வாயில் இருந்தது. எங்களுக்கு வலதுபுறத்தில் அம்பி​கை சன்னதிக்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. அ​தைத் தாண்டி சிவாலயத்திற்கான ​கொடிமரமும் நந்தியும் இருந்தன. மார்கழி மாத ​​வெயிலில் குளுகுளு​வென்றிருந்தது. இரண்டாம் ​கோபுர வாயி​லைத் தாண்டி நாங்கள் ​​சென்​றதும் எங்களுக்கு ​எதிரில் ​தெரிந்தது ஒரு மண்டபத்தின் சுவர்கள் தாம்.

பிரதட்சிணம் ​செய்யும் விதமாக நாங்கள் இடப்புறமாக திரும்பி சுற்றி வரத் துவங்கி​னோம்.

அந்த மண்டபம் மிகவும் அழகாகவும் ​தொன்​மையாகவும் இருந்தது. அதன் தூண்கள் பிற்கால ​சோழர் காலத்தியதாக​வோ அல்லது முற்கால நாயக்கர் காலத்தியதாக​வோ இருக்கக்கூடும், அ​நேகமாக 14ஆம் நூற்றாண்​டைச் ​சேர்ந்தது. அந்த மண்டபத்தின் வாயில் ​தெற்குப்புறமாக இருந்தது. இது ஒரு முகமண்டபத்துடன் இ​ணைந்திருந்தது. அந்த முகமண்டப​மோ இன்னும் ​தொன்​மையானதாக இருக்கக் கூடும். அதன் வாயிலும் ​தெற்குப்புறத்தில் இருந்தது. ஒரு சிறிய வழியும் ​தெரிந்தது. இந்த வழி​யை சுற்றி வந்த பிற​கே விஸ்தாரமான முற்றமும் இ​றைவனின் ஆலயமும் ​தெரிந்தன.

ஆலயத்​தைக் கண்ட உட​னே​யே அது முற்கால ​சோழர் கால ​கோவில் என்று அறிந்து​கொண்​டோம். சுவற்றில் உள்ள மாடங்களில் கல்லினால் ஆன ​தெய்வ மூர்த்தங்கள் காணப்பபட்டன. என்​னை​ ​மே​லே ​செல்ல விடாமல் எதிரில் இருந்த மிக அழகிய பிட்சாடனர் திருஉருவம் ஈர்த்தது. நான் இதுவ​ரை கண்டதி​லே​யே மிக அழகான பிட்சாடனர் சிற்பம்.

ஆளுயர அளவில், பளபளக்கும் கருநிறத்தில், ஒயிலான ந​டையுடனும், இதழ்களில் ஒரு மர்ம புன்ன​கையுடனும் அற்புத ப​டைப்பு. தாருவனத்தில் சிவ​பெருமானின் ஆனந்த நடனத்​தைக் குறிப்பது பிட்சாடனர் திருவுருவம்.

இக்க​தை​யை விளக்கும் மற்று​மொரு அழகிய ஓவியம் சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி ஆலயத்தில் உள்ளது.

தனது ​மேல் இடக்கரத்தில் சூலம் ஏந்தி, அத​னை தனது ​தோள்களில் சாய்த்துக் ​கொண்டு நிற்கிறார். சூலத்திலிருந்து ஒரு மயிலிறகு கற்​றை அழகுற ​​தொங்குகிறது. இடதுகரத்தில் ஒரு மண்​டை ஓடு பிட்​சை பாத்திரமாக உள்ளது. கீழ் வலதுகரம் தன்​னை பின்பற்றி வரும் மா​னை ​நோக்கி உள்ளது. இந்த ஓவியத்தில் காணும்​போது, மானுக்கு உணவளிக்க சிறிது புல் ​கையில் ​வைத்திருப்பது​ ​தெரிகிறது. அவருக்கு இடதுபுறத்தில் ஒரு குறுமனிதன் மிகப் ​பெரிய பாத்திரத்​தைத் தூக்கிப் பிடித்துள்ளார். திருவட்டது​றையி​லோ அருகி​லே ஒரு ரிஷி பத்தினி காணப்படுகிறார்.

தாருவனத்தில் ரிஷிக​ளை எதிர்​​கொண்ட பின் சிவ​பெருமான் தனது ஆனந்த நடனத்​தை நிகழ்த்துகிறார். எட்டு தி​சைகளும் அதிர, திருமுடியில் உள்ள கங்​கை பயத்தால் நடுநடுங்க, சிவ​பெருமான் ஆட, உ​​மையம்​மையும் கூட ஆடத்துவங்குகிறார். பிட்சாடனருக்கு அடுத்துள்ள மாடத்தில் சிவகாமசுந்தரியுடன் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த தாண்டவ மூர்த்திக் காணப்படுகிறார். இந்த நடராஜரும் மிக அற்புதமானது.

அற்புத ​வே​​லைப்பாட்டிற்காக மட்டுமன்றி, நடராஜர் சிற்பத்தின் ​வரலாற்றிலும் முக்கிய இடம் வசிப்பதாலும், இ​தேப் ​போன்று ​வே​​றெங்கும் காணப்படாதது மிக ஆச்சரியமான விஷயமாகும்.

நடராஜருக்கும் பிட்சாடனருக்கும் இ​டையி​லே சங்கடங்க​ளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆக, பிட்சாடனர், விநாயகர், நடராஜர் என மூன்று மூர்த்திகள் ​தெற்குமுக அர்த்தமண்டபத்தின் சுவற்றில் காணப்படுகிறார்கள்.

பிரதட்சிணமாக பிரகாரத்​தை வலம் வரும்​போது அடுத்து நாம் காண்பது சிவ​பெருமானின் தட்சிணாமூர்த்தி ​திருவுருவம்.

இந்த சிற்பமும் அற்புத ​​வே​லைப்பாட்டுடனும் அழகுடனும் விளங்குகிறது. நான்கு முனிவர்கள் சுற்றியிருக்க சின்முத்தி​ரையுடன் அருள்புரியும் இவர்தான் பரமகுரு. ​கர்ப்பகிரஹத்தின் தெற்கு சுவற்றிலுள்ள மாட​மே தட்சிணாமூர்த்தியின் இருப்பிடமாகும்.

அடுத்து ​மேற்கு சுவற்றிலுள்ள மாடத்தில் லிங்​கோத்பவ​ரைக் காண்கி​றோம். லிங்​கோத்பவர் பற்றிய க​தை திருவண்ணாம​லையில் நடந்ததாகக் கருதப்படுகிறது. ​மேற்கு மாடத்தில் உள்ள லிங்​கோத்பவ​ரை சிறிய வடிவத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் வணங்குகின்றனர்.

லிங்​கோத்பவ வடிவம் எப்​போது​மே ​மேற்கில் உள்ள மாடத்தில் இருப்பதாக ​தொன்று​தொட்டு எண்ணி வருகி​றோம். இருப்பினும் எப்​​போது​மே இது வழக்கில் இருந்திருக்கிறதா? சற்​றே ​மேல்​நோக்கி விமானத்​தைக் காண்​போம். அங்​கே இரண்டாம் தளத்திலும் சிகரத்திலும் விஷ்ணு​வே ​மேற்கு தி​சையில் குடியிருக்கிறார்.

இரண்டாம் தளத்தில் ஆதி​சேஷன் மீது ஸ்ரீ​தேவி பூ​தேவி ச​மேதராக மஹாவிஷ்ணு காட்சியளிக்கிறார். சிகரத்திலும் விஷ்ணு தனது இரு ம​னைவியருடன் அமர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆசனம் காணப்படவில்​லை. இ​தைக் காணும்​போது நமக்குள் ​கேள்வி எழுகிறது. இந்த மாற்றம் ஏன், எப்​போது ஏற்பட்டது? இன்று பல ​கோவில்களில் ​மேற்குமாடத்தில் நாம் விஷ்ணு மூர்த்தி இருப்ப​தைக் காண்கி​றோம். ஆனால் ​கோவில் விமானத்தி​லோ இ​தே இடத்தி​லே​யே விஷ்ணு குடியிருப்பது, ஆதிகாலத்திலிருந்து இது விஷ்ணு மூர்த்தியின் இடமாக இருந்திருக்கும் எனத் ​தெரிகிறது. இதற்கு சான்று கும்ப​கோணத்திலுள்ள நா​​கேஸ்வர ​கோவில். ​மேற்கு சுவற்றின் மாடத்தில் அர்த்தநாரீசுவரர் இருந்தாலும், விமானத்தின் இரண்டாம் தளத்திலும், சிகரத்திலும் விஷ்ணு​வே குடியிருக்கிறார்.

பிரகாரத்​தின் வடக்குப்பகுதியில் வலம்வரவும், அங்​கே வடக்கு மாடத்தில் நான்முகனாகிய பிரம்மா தனது ​தொன்று​தொட்ட இடத்தி​லே காட்சியளிக்கிறார்.

அர்த்தமண்டபத்தின் வடக்குபுற சுவற்றிலும் மூன்று மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிவ​பெருமானின் இரு வடிவங்கள், கங்காதர​ர் மற்றும் அர்த்தநாரீசுவரர் இருவரும் துர்க்​கையின் ​மேற்கு மற்றும் கிழக்கு தி​சையில் உள்ளனர். துர்க்​கை நடுவில் உள்ள மாடத்தில் வீற்றிருக்கிறாள். அ​னைத்து மூர்த்திகளு​மே மிகவும் அழகுற வடிக்கப்பட்டு அவற்றின் க​தை​யை ஆன்மிக ​நோக்குடனும் அழகுடனும் விளக்குகிறது.


ஆதிகால ​சோழர் ​கோவில்களில் அர்த்தமண்டபத்திலும் விமானத்திலும் உள்ள மாடங்கள் 3-1-1-1-3 என்ற விதமான கட்ட​மைப்பு ஒரு ​பொதுவான அம்சம். இருப்பினும் இக்​கோவிலில் ​மேலும் ஒரு கூடுதலான மாடம் முகமண்டத்தின் வடக்கு முக சுவற்றில் இருப்பது மிக அபூர்வமான ஒன்று.

பத்தாவது மாடத்தில் கால​பைரவர் காட்சியளிக்கிறார். இரு பஞ்சரங்களின் இ​டையி​லே ஓர் தனி மாடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

அ​நேகமான ஆதிகால ​சோழர் ​​கோவில்களில் விமானத்தின் சுவர்களில் ஒற்​​றை மாடம் இருப்பது வழக்கம். ​தெற்கு சுவற்றில் தக்ஷிணாமூர்த்தியும், விஷ்ணு (முற்காலம் முத​லே), அர்த்தநாரீசுவரர் (சிறிது காலத்திற்கு பின், ​மேலும் சில கால​மே வழக்கில் இருந்தது) அல்லது லிங்​கோத்பவர் (பிற்காலத்தில் வழக்கில் இருந்து இன்று வ​ரை ​தொடர்கிறது). பிரம்மா எப்​பொழுதும் வடக்கு சுவற்றி​லே​யே காணப்படுகிறார். சில சமயங்களில் பிற மூர்த்திகளும் வடக்கு சுவற்றில் காணப்படுவது உண்டு, உதாரணத்திற்கு காமரசவல்லியிலும், கும்ப​கோணத்திலுள்ள நா​கேஸ்வரர் ​கோவிலிலும் இவ்வாறு உள்ளது.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் மூன்று மாடங்கள் இருப்பது ஒன்றும் புதிதன்று. இருப்பினும் இந்தக் ​கோவிலில் ஆறு மாடங்களில் நான்கு மாடங்கள் மு​றையான மாடங்கள் அன்று. இ​வை ​ஒழுங்கான மாடத்தின் கட்ட​மைப்பாக இன்றி, கோவிலின் சுவற்றில் ​​வெட்டப்பட்டு உள்ளன. மகரத்​தோரணம் ​கொண்ட உத்திரக்கல்லும், ​மேலுள்ள வரிகளின் ​தொடர்பின்​மையும் இ​த​னை ப​றைசாற்றும்.

அர்த்தமண்டபத்தின் சுவற்றில் நடுநாயகமாக விளங்கும் விநாயகரும் துர்க்​கையு​மே உண்​மையான மாடங்களாக விளங்கியிருக்கின்றன என எடுத்துக் காட்டுகிறது. இது கூறும் க​தை​யென்ன? ஒரு​வே​ளை சிற்ப கட்டுமானர், கட்டுமானம் துவங்கியபின் இ​டை​யி​லே பல்​வேறு மூர்த்திக​ளையும் ​சேர்க்க எண்ணியிருப்பா​ரோ? அல்லது ஒரு​வே​ளை கட்டுவித்தவர் விருப்ப​மோ? ஆதிகால ​சோழர் ​கோவில்களில் இது எந்த நி​லைமாறுபடு காலத்​தைக் குறிக்கிறது? மற்ற நான்கு மூர்த்திக​ளை விட விநாயகர் மற்றும் துர்க்​கையின் மூர்த்திகள் ​வேறுவிதமாய் இருப்ப​தை அறியலாம். அதிலும் குறிப்பாக துர்க்​கை அ​நேகமாக உருண்​டையாக வடிவ​மைக்கப்பட்டுள்ளது. மஹிஷாசுரனின் த​லைமீது வீற்றிருக்கும் அன்​னை சற்​றே குறுகிய மற்றும் உயரமான ​வே​லைப்பாட்டுடன், சற்​றே அதிக உயரமாகவும் குறுகலாகவும் உள்ள மாடத்தில் மிக அரு​மையாக ​பொருந்தியுள்ளது.

ஆனால் சுவற்றில் ​வெட்டப்பட்டுள்ள மற்ற மாடங்க​ளோ ஆழமின்றியும், அகலமாகவும், உயரமாகவும் உள்ளன. அ​வை வரிகளின் ​மே​லே​யே உள்ளன. ஆனால் ஒழுங்கான மாடங்க​ளோ ​பொதுவாக ​சோழர் கால ​கோவில்களில் காணப்படுவது ​போன்​றே வரிகளின் ஊ​டே ​செல்கின்றன. ஒரு​வே​ளை இந்த மாடங்கள் பிற்காலத்தில் ​வெட்டப்பட்டனவாக இருக்கக் கூடு​மோ என்ற ஐயம் எழுகிறது. ​​வே​றொரு ​கோவிலில் இருந்த வந்த மூர்த்திகளுக்கு அ​டைக்கலம் வழங்க ​​செய்யப்பட்டதாகவும் இருக்கலா​மோ என்றும் ​தோன்றுகிறது. இ​வைகளின் இ​டை​யே உள்ள ஒற்று​மை ​வேற்று​மைக​ளை அறிந்து ​கொள்வதன் மூலம் நாம் இன்னும் ​தெளிவாக புரிந்து ​கொள்ள இயலும். பின்பு வரும் மற்று​மொரு இடு​கையில் இந்த மூர்த்திக​ளை ​மேலும் ஆராய்ந்து பார்த்து இந்தக் ​கேள்விகளுக்கு வி​டை காண முயற்சிப்​போம்.

(தமிழாக்க உதவி – தோழி திருமதி பர்வதவர்த்தினி முரளிகிருஷ்ணா அவர்கள் )

250 ஆவது பதிவு. விடமுண்ட கண்டரே.. விஷாபஹரணரே! யாருக்காக விஷத்தை உண்டீர்?

கல்லிலே கலைவண்ணத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பான நீண்ட நெடிய உற்சாகக் கலைப் பயணத்தில் இது ஒரு முக்கிய தருணம். இந்த சிறப்பான புனிதப்பணியில் என்னோடு பங்கு கொண்டு பயணித்து வரும் நண்பர்களுக்கும் இது இனிய தருணம். ஆம்! இது 250 ஆவது பதிவு. இந்தப் பதிவின் போது ஒரு முக்கியமான உத்தமரைப் பற்றியும் அவர் எங்கள் பதிவுகளுக்கு எத்தனை அரிய சந்தர்ப்பங்களை தன் தேவாரம் தளம் மூலமாக செய்து கொடுத்திருந்தார் என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவர்தான் தமிழ்ப் பேரறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தமிழின் இனிய தேவகானமான தேவாரத்தையும் திருவாசகத்தையும் பெரிய புராணத்தையும் உலகின் பல பாஷைகளில் எடுத்துச் செல்லும் மகான். அத்தகைய மாமனிதரை இந்த 250 ஆவது சிறப்புப் பதிவான விஷாபஹரணர் (விடமுண்ட கண்டன்) சிற்பத்துக்காக ஒரு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்டபோது அந்த சிவபக்தர் உடனடியாக ஒப்புக் கொண்டு அனுப்பிவைத்தார். இதோ அவர் கையால் ஒரு சிறிய முன்னுரை.

”ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி” என்றார் அபிராமிப் பட்டர் (அபிராமி அந்தாதி பாட்டு 7).

மத்து (சுழலும்போது) இரு பக்கமும் மாறி மாறிச் சுழலும். இந்தப் பக்கம் போகுதே எனக் கருதுமுன்பே மற்றப் பக்கம் திரும்பும்.

உயிர் அத்தகைய சுழற்சிக்கு ஆளானது. திரோதான சக்தி ஒருபுறம் ஈர்க்கும், சிவனின் திருவடிகளை அடைய உதவும்.

அந்தச் சக்தியின் ஈர்ப்பில் ஆட்பட்ட நிலை தொடராது.

மாயை மறுபக்கம் ஈர்க்கும், ஆணவம் சார்ந்த நிலை வரும்.

ஐயையோ தவறினோமே என வருந்தி அந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டுத் திரோதான சக்தியின் ஈர்ப்பில் உயிர் ஈடுபடும்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம். மாறி மாறி வரும் ஈர்ப்புகள், இடையில் தவிக்கும் தத்தளிக்கும் உயிர்.

”அமுதம் தரும் பாற் கடல். மத்தாக மேரு மலை. நாணாக வாசுகி பாம்பு. ஒரு பக்கம் அசுரர். மறுபக்கம் தேவர். பாற்கடலைக் கடைகின்றனர்.

ஆலகால விடம் திரள்கிறது. அமுதம் திரளவேண்டிய இடத்தில் விடம். அந்த விடம் அனைவரையும், அனைத்தையும் அழிக்கும் விடம்.

சிவன் விடத்தை அள்ளுகிறார்.

நீடும் இருவினைகள் நேராக நேராதல் கூடும் இறை சத்தி கொளல் (திருவருட்பயன் 51) என்றார் உமாபதிசிவம்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம்.
அருளின் ஈர்ப்பு ஒருபுறம், ஆணவத்தின் ஈர்ப்பு மறுபுறம்.

”எல்லாப் பிறப்பும் பிறந்தேன், பிறந்து பிறந்து இளைத்தேன், உன் பொன்னடிகள் கண்டேன், வீடுபேறு அடைந்தேன்,(மாணிக்கவாசகர்)

விடமுண்ட கண்டன் திருவடிகளை அடைதல், உயிரின் ஏக்கம். அறுக்க முடியாப் பாசத்தை அறுத்து, வினை நீக்கி விரும்பி வீடருள்வான் சிவன்.

தேவாரத்தில்தால் இறைஞானிகள் எத்தனை இடங்களில் விடமுண்டகண்டனை சிறப்பித்துள்ளார்கள்

ஒளியார் விடமுண் டவொருவன்

கறைக்கண் டத்தாரே

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

இவ்வாறாகப் பன்னிரு திருமுறைகள் முழுவதும் சிவனின் கண்டத்தில் விடமுள்ள பாங்கான உயிரது இருவினை ஈர்ப்பு நிலையைச் சுட்டி நிற்கின்றன.

முழுமையை நோக்கிய உயிரின் நெடும் பயணம். இடைவிடா முயற்சி. உயிரின் தன்மையே அஃதாம். அந்தக் கூர்மை முயற்சி வழுக்கும் கம்பம் போல. சாண் ஏற முழம் சறுக்கும். தீவினைகளைத் தனதாக்குபவன் சிவன், உயிரின் கூர்மை முயற்சிக்குக் கை கொடுப்பவன் சிவன். விடா முயற்சிக்குரிய நம்பிக்கையின் ஊற்றுக்கண், விடமுண்ட கண்டன் அவன்.

இறைவன் இந்த உயிரினம் என்றும் நிலைக்கச் செய்ய தன்னையே கூட தியாகம் செய்ய முன்வந்த அற்புத நிகழ்ச்சிதான் விடமுண்டகண்டன் நிகழ்ச்சி. நினைத்துப்பாருங்கள்.. அன்று சிவன் மட்டும் விடத்தை உண்டிராவிட்டால் ஏது இங்கே உலகம்.. ஏது மக்கள்.. ஏது உயிரினம்.. கிடைத்தற்கரிய அமுதத்துக்காக ஏற்கனவே கிடைத்திருந்த உயிரினங்களை பலி கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் அனைத்தையும் காத்தவன் அன்றோ..

ஆஹா.. அப்படிப்பட்ட விடமுண்டகண்டனின் சிற்பம் ஒன்று இந்த சிறப்புப் பதிவில் பார்ப்போமே. பல்லவர்கள் போய் சோழர்கள் தமிழகத்தை தங்கள் கீழ் கொண்டு வரும் 9ஆம் நூற்றாண்டு சிற்பம். மிகவும் அரிய பொக்கிஷம் இது. பொக்கிஷம் என்று சொல்லிவிட்டதால் அது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று சொல்லவும் வேண்டுமோ.

மீண்டும் ஒரு முறை காட்சியை மனதில் கொண்டு மேலே செல்வோம். சிவன் விடத்தை அள்ளுகிறார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் உதித்திருக்கும் , அவை அவரது திருமுகத்தில் எப்படி பிரதிபலிக்கும்.

நாம் முன்னர் பார்த்த சோமஸ்கந்தர் பல்லவ வடிவம் இந்த சிலையை விட பழமை என்று ஏன் கருதப்படுகிறது என்றும் பார்ப்போம்.

ஈசனின் மனதில் உள்ள ஆழ்ந்த சிந்தனையை எப்படி தான் முகத்தில் கொண்டு வந்தானோ அந்த கலைஞன்.

பொதுவாக ஆனந்தக் கூத்தனின் புன்முறவல் இங்கே இல்லை. அண்டத்தை காக்க தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தை எண்ணி ஒரு நிமிடம் …நெற்றிக் கண்ணோடு அந்த முகத்தில் இருக்கும் பாவம்.

இந்த சிலையில் ஜடாமகுடம் சற்றே உயர்ந்து காணப்படுவது இதன் காலத்துக்கு ஒரு அறிகுறி. அதில் கொன்றைப் பூ மற்றும் பிறைச் சந்திரன் அருமை. இங்கு மகுடத்தில் ஒரு புதிய அணிகலன் காணப்படுகிறது. பல முனைகளை கொண்ட சூலம் போன்ற ஒரு அணிகலன் நாம் முதன் முறையாக இந்த சிலையில் பார்க்கிறோம்.

உடல் அமைப்பு அருமையிலும் அருமை. அந்த இடை கொள்ளை அழகு. மார்பின் மேலே யக்நோபவீதத்தின் (புரிநூல்) முடிச்சு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் மூன்று இழைகளாக பிரிந்து ஒன்று வலது கையின் மேலே செல்கிறது. இந்த பாணி பல்லவர் காலத்து சிலைகளிலும் சிற்பங்களிலும் வெகுவாக நாம் பார்க்கலாம். பட்டையாக வேப்லைபாடுகள் கொண்ட உதரபந்தம் உள்ளது.




இரண்டு கரங்களை ஒரு பக்கத்தில் காட்ட முயற்சிக்கிறான் சிற்பி, அதனால் கைகளின் மேல் பகுதி சற்றே தடிமனாக உள்ளது. இதை கொண்டு இது ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வடிக்கப்பட்டதென்று கருதலாம.

ஆனால் கை முட்டிக்கு கீழே அபாரம். ஆபரணங்கள் மகுடத்தில் உள்ள புதிய வடிவத்தை ஒத்து உள்ளன. இதனை ஒத்து பார்க்கும் பொது நடேசர் சிலையின் மிக குறைவான அணிகலன்களை கொண்டு அதன் காலம் இந்த சிலையை விட முன்னதாக நிர்ணயிக்கப்படுவதை நாம் உணரலாம்.

மேல் கைகள் ஒரு பக்கம் மழு , மறு பக்கம் மான். இங்கே நாம் பார்க்கவேண்டியது மழு எப்படி கையினுள் உள்ளங்கையில் படும்படி இருக்கிறது. நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் இரு விரல்களில் அது இருக்கும்.

மான் குட்டி மிக சுட்டி. ஆஹா என்ன அழகாக தந்து முன்னங்கால்களை மடக்கி – ஒரு வேளை ’வேண்டாம் செய்யாதீர்கள்’ என்றோ அல்லது ’ஆஹா தம்மைப் போன்ற உயிரினங்களையும் வாழவைக்க நீங்கள் செய்யப் போகும் மகத்தான காரியம்’ என்று போற்றி வணங்குகிறதா ?

உடலில் தோலுக்குள் இருக்கும் எலும்பு, அதன் மேலே படியும் சதை, அதை சுற்றி இருக்கும் துணி என்று அனைத்தையும் ஆய்ந்து தன் திறமையை வெளிப்படுத்துகிறான் சிற்பி. அந்த வலது காலை பாருங்கள்.

இடுப்பில் ஆடை உக்ரமுக பதக்கதில் இருந்து வெளி வருவது போல வடிவம் உள்ளது. உத்சவ மூர்த்தி என்பதால் பவனி வருவதற்கு எதுவாக கைப்பிடிகள் , நல்ல தடிமனான பீடம் எல்லாம் உள்ளன.

தோள்களின் மேல் தவழும் அவரது கூந்தலில் ஒரு மலர் – ஆஹா என்ன அழகு.


பின்புறம் சென்று பார்க்கும் பொது தான் அந்த சிகை அலங்காரத்தின் முழு அழகு தெரிகிறது.

மிக அழகான சிரஸ் சக்கரம், முன்னர் பார்த்த வடிவங்களை விட இந்த வடிவம் புதியது என்பதற்கு இன்னும் ஒரு காரணம். சிரஸ் சக்கரத்தில் இருந்து விரியும் கூந்தல், அதில் ஒன்று எப்படி அந்த கழுத்து மாலையின் பின்னல் தொங்கும் பட்டையின் மேலே தவழ்கிறது பாருங்கள்.

அப்படியே வளைந்து தோள்களின் மேல் படரும் கூந்தல் எழில் சொக்க வைக்கிறது.

கீழ் இரண்டு கைகள் தான் நமக்கு மிகவும் முக்கியம்.

இடது கையில் ஒரு பெரிய நாகம், படம் எடுத்து மகேசனை நோக்கும் வண்ணம். ஒரு வேளை வலது கையில் இருக்கும் விடத்தின் தன்மையை விளக்க சேர்க்கப்பட்டதோ.

வலது கையில் ஆலகால விடம்

அனைத்தையும் சேர்ந்து பார்க்கும்போது தான் சிற்பத்தின் உள்ளுணர்வு நமக்கு புரிகிறது.

ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதோ ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

மீண்டும் ஒரு முறை திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி கூறி, அவருக்கும் அவரதுமகத்தான பணியில்துணை நிற்கும் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவியை தவறாமல் செய்யுங்கள் என்று கூறி, 250 பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டம் அளித்து எங்களை வழி நடத்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

நூதனமுறையில் பாற்கடல் கடையும் காட்சி – காஞ்சி கைலாசநாதர் ஆலயம்.

ஆயிரம் ஆலயங்களை கொண்ட ஊர் என்ற பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா. காஞ்சி தான். அது வெறும் பகட்டு அல்ல – காஞ்சியில் எந்த தெருவில், எந்த இடத்தில நின்று பார்த்தாலும் குறைந்தது மூன்று ஆலயங்களாவது தெரியும். இப்படி குவியும் எண்ணிக்கையில் தனியாக நிற்கும் ஆலயம் ராஜ சிம்ம பல்லவனது காஞ்சி கைலாசநாதர் – காலத்தால் மிகவும் பழமையான கட்டுமானக் கோயில் என்ற முறையில் மட்டும் அல்ல, சிற்பக்கலை பல்லவ சிற்பிகளின் கைத்திறத்தின் மகிமையில் அடைந்த உன்னத நிலையின் பிரதிபலிப்பு இந்த கலைக் கூடம். அந்த தனித் தன்மையை ஆலயத்தினுள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திலும் நாம் காணலாம். நாம் இன்று பார்க்கும் பாற்கடல் காட்சியும் அதை போலவே வேறு எங்கும் காண இயலாத ஒரு காட்சி.

பொதுவாகவே பாற்கடல் கடையும் காட்சியை விளக்கும் சிற்பங்களை இந்தியாவில் பார்ப்பது அரிது. கம்போடியா அங்கோர் வாட்டில் மிக அருமையான ஒரு சிற்பம் இருக்கிறது. அதே போல அதனை ஒட்டிய காலத்தில் அருகில் சில இடங்களில் இந்த காட்சி உள்ளது. பொதுவாககம்போடியா வடிவங்களில் பெருமாளை முழு உருவமாகவும் அவதார ரூபமான கூர்ம வடிவமாகவும் இரு வடிவங்களாக இருக்கின்றன. ( பாங்காக் விமான நிலைய நவீன சிற்பம் கூட இது போல தான் உள்ளது ) மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும் அசுரகளும் இரு புறம் நின்று கடையும் காட்சி அற்புதம்.

எனினும் இந்த காஞ்சி கைலாசநாதர் வடிவம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இங்கே கூர்ம வடிவம் சித்தரிக்கப்படவில்லை.

நடுவில் இருக்கும் எட்டு கைகளை கொண்ட பெருமாள் உருவம் – ஒரு கையில் சங்கு மற்றொரு கையில் சக்கரம் என்று கம்பீரமாக உள்ளது.

எனினும் பெருமாள் சிற்பத்தின் நடு இடத்தை வகிக்காமல் ஒரு பக்கமாகவே இருப்பதால் , அவர் சாய்ந்து அல்லது சாயாமல் பிடித்து நிற்கும் இடத்தை நாம் ஆராய வேண்டும்.

அவர் நிற்கும் பாணியும் முக்கியம். சாதித்து விட்டு நிற்கும் ஒரு வெற்றி பரவசம் தெரிகிறது.

அடியில் நாக அரசன் – மந்தார மலையை மத்தாக கொண்டு கடைய உதவிய கயிறாக வாசுகி.

அப்படி என்றால் பெருமாள் தூக்கிப் பிடிக்கும் தூண் போன்ற வஸ்து தான் மந்தார மலையாக இருக்க வேண்டும். மத்து போன்றே இருக்கிறதே !

மந்தார மலையில் ஒரு பறக்கும் உருவம் கையில் எதையோ ஏந்தி வருகிறது.

அருகில் சென்று பார்ப்போம்.

ஆஹா, அமிர்த கலசத்தை ஏந்தி வரும் தன்வந்தரி. காரியம் முடிந்து விட்டது. இதனுடன் பல அற்புத வஸ்துகள் வெளியில் வந்தன என்று நாம் அறிகிறோம். கௌஸ்துபம் என்ற கல் பெருமாளின் நெஞ்சை அலங்கரிக்கும் நகையாக மாறியது, காமதேனு, கல்பவிருக்ஷம்,ஐராவதம் என்ற வெள்ளை யானை, சில குறிப்புகள் படி பெருமாளின் சங்கு, சக்கரம் மற்றும் உச்சைஷ்ராவாஸ் என்ற ஏழு தலை வெள்​ளைப் புரவியும் வந்ததாம்.
கைலாசநாதர் சிற்பங்கள் இப்போதே அழகு, அவை வடித்தபோது மேலே அழகாக பூசப்பட்டு வண்ணம் தீட்டி இருக்கக் கூடும். இன்றோ அவை மிகவும் சிதைந்து இருக்கின்றன – நம்மால் பல குறிப்புகளை பார்க்க இயலவில்லை. எனினும் ஒரு பக்கத்தில் ஒரு புரவி உள்ளது. இந்த புரவியின் வெள்ளை நிறத்துக்கும் அதன் வாலுக்கும் இன்னொரு கதை உண்டு. அதை வேறொரு தினம் பார்ப்போம்.

இப்போது புரிகிறது – வேலை முடிந்து விட்டது. அதனால் தான் பெருமாள் தன் சுய ரூபத்தில் அழகாக நின்று அனைவரின் புகழாரத்தை வாங்கிக் கொண்டு சிரிக்கிறார் போல.

படங்களுக்கு நன்றி : திரு அசோக் கிருஷ்ணசுவாமி