விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அதிகாரிக்கு நன்றி

வலைப்பூக்களில் பதிவுகளை எழுதும் பலரும் ( சினிமா , அரசியல் உட்பட ) பல மணிநேரம் செலவிட்டு தங்கள் கருத்துகளை தங்கள் வாசகர்கள் விரும்பும் ( விரும்புவார்கள் என்ற நம்பிக்கை !!!) வண்ணம் படைத்து விட்டு பின்னூட்டத்திற்கு காத்துக் கிடக்கும் காலம் இது.. வலைப்பூ எழுதுவதே நீ இந்திரன் சந்திரன் , ஆஹா ஓஹோ என்று வரும் ( வெறும் ) பின்னூட்டங்களை எதிர்பார்த்து மட்டுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக இன்னும் பல நல்ல படைப்புகளை ஆர்வத்துடன் அவர்கள் எழுத அவை தூண்டும். ஆனால் நம்மை போல சிற்பம், கலை, அழிந்த ஓவியம் என்று எழுதும் நமக்கு பெரும்பாலும் தீவிர ரசிகர்கள் சிலரும் நாமே முதுகில் தட்டிக்கொண்டு ஓடுவது தான் கதி. ஆனால் ஒரு பதிவுக்கு நல்ல விளைவு நேர்கையில் வரும் மன நிறைவு ஒரு நெகிழ்வு தான். அப்படி ஒரு காரியம் நடைபெற்றுள்ளது. அதுவும் நமது அழியக்கூடாத குலதனங்கள் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்று மனம் சோர்வு அடையும் பொது , அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் நம் குரலுக்கு செவி சாய்த்து நடத்திய காரியம் தான் அது.

முதல் நன்றி இந்த பதிவை படித்து விட்டு வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்., அங்கே சென்றபோது அங்கு நடந்த தப்பை உடனே படம் பிடித்து அனுப்பி வைத்த நண்பருக்கு . என்ன கொடுமை இது ?, அடுத்த நன்றி பதிவை படித்துவிட்டு அதை தனக்குத் தெரிந்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு அனுப்பிய நண்பருக்கு. நமது முக்கியமான நன்றி – ஒரு வலைபூ குறிப்பை அலட்சியாமாக கருதாமல் விரைந்து செயல் பட்டு குறை தீர்த்த அந்த அதிகாரிக்கு நன்றி! நன்றி!

இதோ புத்துயிர் பெற்று நிற்கும் வாயிற் காப்போன், மற்றும் கீழே உள்ள கல்வெட்டு.

முடிவாக நன்றி – செயல் வீரர் பணி செவ்வனே முடிந்துள்ளது என்று படம் பிடித்து அனுப்பி உதவிய நண்பருக்கு.

ரிஷபாந்திகா , வீணாதாரா, அர்தனாரி சிவன் – திரு லாக்வூட் அவர்களது பல்லவ கலை நூலில் இருந்து

நமது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு இந்த தளத்தில் திரு கிஃப்ட் சிரோமனி அவர்களது
தாக்கம் பற்றி தெரிந்திருக்கும்

பல்லவ துவாரபாலகர்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது?

அந்த பதிவில் நான் இவ்வாறு எழுதி இருந்தேன்

” நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

எனது பாக்கியம் சென்ற மாதம் சென்னை சென்றபோது அவரது மனைவியார் திருமதி ராணி சிரோமனி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனது கணவரின் நெருங்கிய நண்பரான திரு மைக்கல் லாக்வூட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கினார் ” எனக்கு மாமல்லபுரத்தின் ஜாலங்களை அறிமுகப் படுத்தியவர் திரு கிஃப்ட் சிரோமனி ” என்று..

அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகள், நூல்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார். இதற்காக நாம் திரு லாக்வூட் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். இதோ அவர் தன இளமை பருவத்தில் வல்லம் குடைவரை அருகில். 1969 ஆம் ஆண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் (அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஆறு ) – நான் இன்னும் பிறக்க கூட இல்லை !

அவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள படியுங்கள்

Dr. Lockwood

அறிமுகம் கிடைத்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் பல பல்லவர் சம்மந்தமுள்ள பதிவுகளை அவருக்கு அனுப்பினேன். அவரும் பொறுமையாக படித்து தன் கருத்துகளைத் தந்தார். அப்படி ஒரு பதிவில் நாங்கள் சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி என்ற தொடருக்காக திருக்கழுக்குன்றம் சென்றபோது அங்குள்ள ஒரு சிற்பம் பற்றி எடுத்துரைத்தார்.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

பல காலம் முன்னர் நடந்த விவாதம் பற்றி தெரியாமல், வெளிச்சுற்றில் இருக்கும் இந்த சிற்பத்தை ரிஷபவாஹன சிவன் என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். இதனை பற்றி விளக்கம் தரும் வகையில் தனது பல்லவ கலை என்னும் நூலில் உள்ள குறிப்புகளை திரு லாக் வூட் எனக்கு அனுப்பி வைத்தார். கருவறையின் உள்ள சுவற்றிலும் இதே சிற்பம் இருப்பதாகவும், வெளியில் இருப்பதை விட இன்னும் நல்ல நிலைமையில் இருப்பதால் நன்றாக ஆராய முடியும் என்றும் கூறினார்

அவரது குறிப்பைப் படிக்குபோது மல்லை கடற்கரை கோயிலில் உள்ள ஒரு சிறு ஆலயத்தில் உள்ளே இருக்கும் சிற்பமும் இதே வடிவம் என்ற அவரது கருத்து தெளிவானது.

நண்பர் அசோக் அவர்களது படங்கள் கொண்டு நாம் இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது

இதைப் பார்த்தவுடன் இது சிவன், வெறும் ரிஷப வாஹன சிவன் மட்டும் இல்லை வீணாதாரா என்று சொன்னால் – அப்படியே ஒப்புக்கொண்டு இருப்பேன். ஆனால் திரு லாக்வூட் அவர்கள் இது ஒரு அர்த்தநாரி வடிவம் என்று கூறுகிறார். பல்லவ அரசன் ராஜசிம்ஹ பல்லவன் தனக்கென்று ஒரு சில சிறப்பு சிற்பங்களை வைத்துள்ளான். அவற்றை நாம் மல்லை ஓலக்கனேஸ்வர கோயில், கடற்கரை கோயில் மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் என்று எங்கோ ஓரிடத்தில் திரும்ப திரும்ப பார்க்க இயலும்.

ஓலக்கனேஸ்வர ஆலயத்தில் இந்த சிற்பம் இல்லை. கடற்கரைக் கோயிலுக்கு செல்லும் முன்னர் கஞ்சி கைலாயநாதர் கோயில் சென்று தேடுவோம். அங்கே ஒரு வீணாதாரா சிற்பமும் ஒரு வீணாதாரா அர்த்தனாரி வடிவங்களும் உள்ளன.

படங்களுக்கு நன்றி திரு சௌராப் மற்றும் கிருஷ்ணமுர்த்தி மாமா

நாம் முன்னரே அர்த்தனாரி வடிவத்தை பற்றிய பதிவில் எப்படி இரு பாகங்களும் வேறு படுகின்றன என்று பார்தோம்.

சிற்பிக்கு “விடை”யே விடை

இப்போது கைலாயநாதர் சிற்ப்பத்தை அருகில் சென்று பார்ப்போம்.

அர்த்தனாரி என்று தெளிவாகிய பின்னர் வீணையை பார்ப்போம்.

சுமார் எட்டாம் நூற்றாண்டில் வீணை எப்படி இருந்தது என்று நாம் அறியமுடிகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று மேலே இருக்கும் பாகம் குடம் போல இல்லாமல் , திருப்பி பொருத்தப்பட்ட குவளை போல உள்ளது. இதனை மார்புடன் அணைத்து வாத்தியத்தை வாசிக்கும் பொது கலைஞன் இசையுடன் எப்படி இணைத்து வாசித்து இருப்பான் என்று யூகிக்க முடிகிறது. இந்த விதமான வாத்தியம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். புதுகோட்டை பைரவர் ( நன்றி காத்தி ), பாதாமி அர்த்தனாரி ( நன்றி பிகாசா ) , நேபாளத்து சரஸ்வதி ( நன்றி காலதர்ஷன )

தற்போதைய வீணை இப்படி இருக்கிறது. மேலே இருக்கும் குடம் போன்ற பகுதிக்கு சரோக்கை என்று பெயர், ஆனால் அதற்க்கு இப்போது வேலை உண்டா என்று தெரிய வில்லை.

ஆனால் அந்நாளைய வீணையை போல இந்த திருப்பி பொருத்தப்பட்ட குவளை போன்ற வீணைகள் இன்றும் இருக்கின்றனவா ? அதை மீட்டும் பொது இசையுடன் கலக்கும் உணர்ச்சிகள் …

சரி, மீண்டும் நமது சிற்ப புதிருக்கு வருவோம். இந்த சிற்பம் ஒரு வீணாதாரா அர்த்தனாரி ரிஷபவாகன சிவன் என்று சொல்கிறார் திரு லாக்வூட். அதற்கு சான்றாக இந்த இரு படங்களையும் தருகிறார்.

படம் A கைலாயநாதர் ஆலயத்தின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது. பார்ப்பதற்கு மல்லை மற்றும் திருக்கழுக்குன்றம் சிற்பம் போலவே உள்ளது.

படம் B வீணாதாரா அர்ததனாரி ஆனால் இங்கு ரிஷப வாஹனம் இல்லை அதற்கு பதில் அரியணையில் அமர்ந்திருக்கும் வண்ணம் உள்ளது. இந்த சிற்பம் நான்கு புறமும் சிற்பம் கொண்ட பாறையின் ஒரு பக்கத்தில் உள்ளது. இந்த சிற்பம் மல்லை கடற்கரை கோயிலின் வெளிச்சுற்றில் அந்நாளில் இருந்தது.

மேலும் அவர் கூறுகையில் முன்னர் பார்த்த கைலாயநாதர் வீணாதாரா அர்த்தனாரி வடிவமும் அரியணை மீது அமர்ந்த வண்ணம் உள்ளது. இது மேற்கு புறம் வெளிச்சுவரில் உள்ளது

முடிவாக இந்த புதிரின் விடை மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று திருக்கழுகுன்றம் கருவறை சிற்பம் – கைத்தேர்ந்த ஓவியர் யாரையாவது வைத்து நேரில் பார்த்து வரையவைத்துப் பார்க்கலாம். மற்ற இரண்டு சிற்பங்களும் தற்போது எங்கே உள்ளன.. தேடிப்பார்க்க வேண்டும்.. படங்கள் எடுத்த ஆண்டு 1969.

பல்லவ கலைகள் நூல் 1997 ஆம் ஆண்டு மறுபதிவின் பொது திரு லாக்வூட் எழுதிய குறிப்பு

இரு சிற்பங்களும் தற்போது தொல்லியல் துறை மல்லை அருங்காட்சியகத்தில் உள்ளன !!

தற்போது இந்த இரு சிற்பங்களும் எங்கு உள்ளன என்று ஆர்வலர் தேடி படம் பிடித்து தர வேண்டுகிறோம்.

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

இன்று நாம் பார்க்கவிருக்கும் வடிவங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை போல முதலில் தோன்றும். அதற்கு முன்னர் நண்பர் திரு சதீஷ் அவர்கள் போட்டிருந்த ஓவியம் ஒன்றுடன் காஞ்சிப் பயணத்தை துவங்குவோம்.


சதீஷ் அவர்களின் தளம் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின் மல்லை கடற்க்கரை கோயில், பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம், மற்றும் காஞ்சி கைலாயநாதர் ஆலயம் – புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும். – அரைகுறை ஆர்வலருக்கே புகைப்படம் எடுத்து தள்ளும் வெறியைத்தரும் இவை – கைதேர்ந்த வல்லுனர்கள் பிடியில் சிக்கினால். இதோ நண்பர் ஆதி ஆர்ட்ஸ் கைவரிசை – இல்லை – கேமரா வரிசையை பாருங்கள்.



என்ன ஒரு அழகு – ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக இன்னமும் நின்று சிறக்கும் பொக்கிஷம்.

அடுத்து இந்த வரிசையைப் பாருங்கள். .

அஜந்தா புத்தர் , மலை தவம் மற்றும் கைலாசநாதர் சோமாஸ்கந்தர் வடிவம் – மூன்றிக்கும் என்ன சம்பந்தம் ?

முன்னர் நாம் பார்த்த காஞ்சி சோமாஸ்கந்தர் ஓவியம் நினைவில் உள்ளதல்லவா ?

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

முதலில் இந்த ஓவியம் எங்கே உள்ளது என்று பார்ப்போ

படத்தில் அம்புக்குறி போட்டிருப்பது போல நேரே சென்று இடது பக்கம் திரும்பிப் பாருங்கள். நான்கு இடங்களில் மட்டும் சிதைந்த ஓவியங்கள் தெரியும். மற்ற இடத்தில சுமார் தான் !!


ஆனால் இந்த ஒரு இடம் மிகவும் முக்கியம். உள்ளே தலையை நுழைத்து வலது பக்கம் உற்று பாருங்கள்.


முதலில் வெறும் கருப்பு சாயம் போல தோன்றும் – சிறுது நேரம் கண்கள் வெளிச்சம் இல்லாமைக்கு பழகியதும் உள்ளே இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லவ கால ஓவியம் தெரியும்

இன்னும் அருகில் சென்று பார்ப்போம். இரு அழகிய கின்னரர்கள். அந்த பெண்மணி புல்லாங்குழல் வாசிக்கும் அழகு அற்புதம். பறவை போல கால்களும் , சிறகுகளும் இருப்பதை கவனியுங்கள்.

இப்போது மல்லை தவச் சிற்பம்.


இங்கேயும் அந்த தம்பதியினர் இருப்பதை பாருங்கள். அதே பறவை போல கால்களும் , சிறகுகளும் இருக்கின்றன. தெரிகின்றதா ?

சரி, இரண்டுமே பல்லவ காலத்தவை தான். ஆனால் இதே போல ஒன்று அஜந்தா ஓவியத்தில் உள்ளது, அதுவும் நீங்கள் பல முறை பார்த்த, ஏன் இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்த புத்தர் உருவத்திலும் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

சரி, இப்போது பாருங்கள்

(படங்களுக்கு நன்றி – An Album of Eighty-five Reproductions in Colour, Editor: A.Ghosh; Published by Archaeological Survey of India)


இப்போது தெரிகிறார்களா ?


உண்மையான கலைக்கு ஏது வேலி , வரம்பு ?

நான் இத்தனை காலம் காத்துவந்த பொக்கிஷம்

நாம் இது போன்ற சிதைந்த ஆலயங்கள் பல பார்த்துள்ளோம். இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் இப்படி தடுக்கி விழுந்தால் இரண்டு இருப்பதால் இவற்றின் மதிப்பை நாம் உணருவதில்லை. இதுவே வெளிநாடாக இருந்தால் தங்கள் பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடாக தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். எனினும், இந்த புள்ளலூர் விமானம் மட்டும் ஏனோ கண்ணையும் சிந்தனையும் விட்டு விலக மறுத்தது.

சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் – புள்ளலூர்

சில நொடிகளே அங்கு கழித்தோம் – மாலை நேரம், வெளிச்சம் குறைந்துக்கொண்டு இருந்தது, மதிய உணவு சாப்பிடவில்லை !! அதற்கும் மேலாக முந்தைய இடத்தில வழியில் ஓடிய பாம்பு, அத்துடன் விமானம் இருந்த நிலைமை என்று பல காரணங்கள். இருந்தும் மனம் எதோ அடித்துக்கொண்டது. வந்த பின்னரும் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் அந்த கோயலின் நிலையை பற்றி சொல்லி தீர்த்தேன். அப்படி சொல்வதை கேட்டு நண்பர் திரு சந்திரசேகரன் ரீச் பௌண்டேஷன் உடனே சென்று பார்க்கிறேன் என்று உறுதி கூறினார். மனதில் அங்கு விமானத்தில் உள்ள சுதை உருவங்களின் நல்ல படங்கள் கிடைத்தால் இந்த கோயிலின் காலத்தை கணிக்க உதவும் என்பதே எனது நோக்கம்.


சந்திரா அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று
திரு தியாக சத்யமூர்த்தி அவர்களையும் அழைத்துச் சென்றார். மேலே என்ன நடந்தது ?

மாலை எனக்கு சும்மார் நாலு மணி அளவில் குறுஞ்செய்தி
ஷங்கர் : ” ரீச் உள்ளே ஓவியங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்”
நான் . ” எந்தக் கோயில் ?”
ஷங்கர் : புள்ளலூர் !
நான் : அங்கே எந்த கோயில்
ஷங்கர் : செங்கல் இடிந்த கோயில்.
நான் : இதோ அழைக்கிறேன் ….

சரி, இதை நாங்கள் எப்படி கவனிக்காமல் விட்டோம் ? நீங்களே பாருங்கள்.

இந்த சுவரில் தான் ஓவியங்கள் உள்ளன என்றால் நம்புவீர்களா ?

ஆமாம், இதில் தான் நான்கு உருவங்கள் உள்ளன. அருமையான அணிகலன்கள், மகுடங்கள் – ஏன் உற்றுப் பாருங்கள் கண் , புருவம் என்று அனைத்தும் மெதுவாக தெரிய வரும். யார் இவர்கள் ?

இதை விட பெரிய கேள்வி – இந்த ஆலயத்தின் காலம் என்ன. உள்ளே இருக்கும் இந்த ஓவியங்களின் காலம் என்ன ?

எருது தழுவும் கண்ணன்

மாட்டுப் பொங்கலன்று நம் கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. மாடுகளுக்கும் மனிதருக்கும் போட்டிக் களத்தில் நடக்கும் பலப்பரீட்சை. எனினும் கடந்த சில வருடங்களாக இதற்கு பல்வேறு காரணங்களால் பல தடைகள் வந்துள்ளன. எனினும் புதிய விதி முறைகளுடன் தற்போது இந்த பாரம்பரிய போட்டி செவ்வனே நடந்து வருகிறது


( நன்றி – விக்கி )

இன்று நாம் காணப் போவதும் எருது தழுவும் – ஜல்லிக்கட்டு சிற்பம் தான். அதுவும் பசுக்களை பராமரிக்கும் கோபாலனே காளையை தன்வசப்படுத்தும் ஒரு சிறிய, ஆனால், அற்புதமான சிற்பம். மீண்டும் திருமால்புரம் ஆலயத்தில் தான்.

முதலில் கதையைக் கேட்போம், பிறகு அருகில் சென்று சிற்பத்தைப் பார்ப்போம்.

அவனது மாயா லீலைகளில் இரு இடங்களில் காளையை பற்றிய குறிப்புகள் வருகின்றன.

ஒன்று அரிஷ்டன் என்ற அசுரனின் வதம்.

போஜ மன்னனான கம்சனின் பணியாள் அரிஷ்டன். கொடுமையான அரக்கன் ஆவான். ஒரு சமயம் அவனைக் காளை மாட்டு உருவம் தாங்கிக் கண்ணனைக் கொல்லவேண்டிக் கம்சன் அனுப்பி வைத்தான். கூரிய கொம்புகள், மிகப் பெரிய உருவம் கொண்ட காளை மாட்டின் உருவம் எடுத்துக்கொண்டு கோகுலத்துப் பசுக்கள் மத்தியில் ஹூங்காரம் செய்து கொண்டு அரிஷ்டன் புகுந்தான்.

அனைத்து கோபர்களும் தைரியம் இழந்து அந்தக் காளை மாட்டின் உருவத்தையும், அதன் பலத்தையும் கொம்புகளால் தரையைக் குத்திக் கொண்டு சீறுவதையும் கண்டு பயந்து ஓட, அரிஷ்டன் பசுக்களை ஓட ஓட விரட்டினான். கொம்புகளைத் தாழ்த்திக்கொண்டு சற்றும் பயமின்றி கண்ணனை நோக்கிப் பாய்ந்தான். வேகமாய்ப் பாய்ந்த அரிஷ்டனை இரு கொம்புகளையும் தாவிப் பிடித்துத் தடுத்தான் கண்ணன். பின்னர் அரிஷ்டனைக் காலால் எட்டி உதைக்க பதினெட்டு அடி தூரத்தில் காளை போய் விழுந்தது. பின்னர் கண்ணன் அந்தக் காளையைத் தன் தலைக்கு மேல் சுற்றித் தூர எறிந்து கொன்றான்

மற்றொன்று, பிருந்தாவனத்தில் ஹஸ்தின் என்ற ஒரு காளை இருந்து வந்தது. அது அங்கிருந்த காளைகளுக்கெல்லாம் அரசன் போல் விளங்கியது. நன்கு தீட்டி விடப்பட்ட கூரான கொம்புகளுடனும், முறுக்கிய வாலுடனும், திடமான உடலுடனும், பளபளவென்ற மேனியுடனும் காட்சி அளித்தது. முரட்டுக் காளையென்று பெயர் பெற்ற அக்காளையின் அருகில் யாரும் நெருங்கவே பயம் கொள்வர். ஓரிடத்தில் நில்லாமல், தான் கட்டப்பட்டிருக்கும் மரத்தைச் சுற்றி கால்களை பூமியில் கிளறிக் கொண்டே இருக்கும். யாரேனும் தன்னை நெருங்கினாலே, அவர்களை தனது எதிரி போல் கருதி, தனது கூரிய கொம்புகளால் முட்டுவதற்கு ஆயத்தமாகிவிடும்.

இத்தகைய முரட்டுக் காளையை அடக்குவது பற்றி கண்ணன், பலராமன் மற்றும் அவர்களின் நண்பர்களிடையே விவாதம் நடைபெற்றது. இறுதியில் கண்ணன், தானே அந்தக் காளையை அடக்குவதாக பந்தயம் ஏற்றுக் கொண்டார். முதலில் விளையாட்டாக பேச்சு துவங்கிய போதும், இறுதியில் பலராமனும் மற்றும் நண்பர்களும் இது ஆபத்தானது என்றும், இந்தப் பந்தயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்றும் தடுத்துக் கூறினார்கள். இருப்பினும் கண்ணன் தான் நிச்சயமாக அந்தக் காளையை அடக்கி அதன் மீது சவாரி செய்யப் போவதாக கூறி அதற்கான ஒரு நாளையும் நிச்சயித்தான்.

முதலில் கண்ணன், பருத்திக்கொட்டை வைக்கப்பட்டிருந்த கூடையை அதனருகில் வைத்தான். பிறகு தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதம் இசைத்தான். கண்ணன் கீதம் இசைக்கையில் பறவைகளும், கறவைகளும் கூட மனம் லயித்துக் கேட்பதை பெரியாழ்வார் தனது பாசுரத்தில் மிக அருமையாகக் கூறுகிறார்.

சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்யவாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது
பறவையின் கணங்கள் வந்து கிடந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே.”

(பெரியாழ்வார் திருமொழி – ஆறாம் திருமொழி – பாடல் 8. )

தனது சிறிய கைவிரல்களால் புல்லாங்குழலின் துளைகளை மூடியும் திறந்தும் தடவிக் கொண்டு, செந்தாமரை போன்ற கண்கள் மேல் நோக்கி வக்ரமாகவும், சிவந்த வாயைக் குவித்துக் கொண்டு ஊதுகிறபோது வாயினுள் உள்ள வாயுவின் பூரிப்பாலே வாய் குமிழ்க்கவும், புருவங்கள் மேற்கிளர்ந்து வளையவும் கோவிந்தன் குழல் ஊத, அக்குழலோசையை கேட்ட பறவையினங்கள், தாமிருக்கும் கூடுகளை விட்டு ஓடி வந்து, கண்ணனருகில் வந்து, காட்டில் வெட்டி வீழ்ந்த மரங்களைப் போல் ஆடாது அசையாது மெய் மறந்து கிடக்க, பசுக்களோ மெய் மறந்து கால்களைப் பரப்பிக் கொண்டும், தலையை தொங்கவிட்டுக் கொண்டும், காதுகளையும் அசைக்காது நின்றன.

இவ்வாறு புல்லாங்குழல் இசைக்கவும் மெல்ல மெல்ல ஹஸ்தின் மனம் அமைதி பெற்றது. இனிய குழலோசையைக் கேட்டுக் கொண்டே ஆனந்தமாக கூடையில் இருந்த உணவை சுவைக்கத் துவங்கியது. காளையின் மகிழ்வை கடைக்கண்ணால் கண்ட கண்ணன், மெல்ல அதனருகில் சென்று அதைத் தட்டிக் கொடுத்து, உடலை நீவி உற்சாகப்படுத்தினான். புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே, ஹஸ்தின் உணவு உண்டு முடித்ததைக் கண்டான். மெல்ல அதனை நீர் அருந்த ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான். இனிய இசையைக் கேட்டுக் கொண்டே காளையும் ஆற்றங்கரைக்குச் சென்று நீர் அருந்தியது. அதன் வயிறும் மனமும் நிறைந்து மகிழ்ச்சியுடன் இருந்தது. இதையே தக்க சமயமாகக் கொண்டு கீதத்தை இசைத்துக் கொண்டே கண்ணன், சட்டென்று அதன் முதுகில் ஏறினான். மெல்ல மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டே, “என் நண்பா, ஹஸ்தின், நாம் காட்டுக்குப் போகலாமா? எங்கே ஓடு பார்க்கலாம்” என்று கனிவுடன் கூறினான். உணவும் நீரும் அருந்தி, இனிய கீதத்தின் இசையில் மனம் நெகிழ்ந்திருந்த ஹஸ்தின், கண்ணன் கூறியது புரிந்ததுபோல் காட்டை நோக்கி வேகமாக செல்லத் துவங்கியது.

இப்போது இந்த சிற்பத்தைப் பாருங்கள். காளையை தன் வசப்படுத்தி, அதன் மீது சவாரி செய்யும் கோபாலனை பாருங்கள்.

அடக்குவது போலவே உள்ளது .

கண்ணனின் லீலைகள் கேட்க கேட்க பரவசம். அவற்றை இவ்வாறு சிற்பத்தில் காண்பதோ, அவன் லீலைகளை நேரில் காண்பதற்கு இணையான பரவசம் அல்லவா?

நன்றி : வர்தினி மற்றும் கீதா அம்மா

http://sivamgss.blogspot.com/2009/06/blog-post.html
http://sivamgss.blogspot.com/2009/06/blog-post_10.html

தாம்பு கயிற்றினால் உரலுடன் கட்டப்பட்ட கண்ணனின் அழகை பாருங்கள் – திருமால்புரம் .

மக்களே, இன்று ஒரு புதிய பதிவு – தனது பல்வேறு ஆற்றல்களால் அசத்தும் தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன் அவர்கள் இன்று முதல் முறையாக நமது தளத்தில் ஒரு பதிவை எழுதுகிறார். சமீப காலமாக அவர் ஒரு தளம் நிறுவி அபாரமாக எழுதி வருகிறார். பொன்னியின் செல்வி சென்ற பெயரில் இயங்கும் அந்த தளத்தைக் கண்ட பின்னரே இந்த பொன்னியின் செல்வியை திருமால்புரம் ஆலயத்தில் கண்ட இரு அற்புத கண்ணன் வடிவங்களுக்கு வர்ணனை எழுத அழைத்தேன். அவரும் உடனே பணியை ஏற்று அழகாக செய்துள்ளார். இதோ பதிவு …

நான் ஒரு பட்டயக் கணக்கர் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்). குவைத்தில் வசித்து வருகிறேன். தற்போது முழுநேர இல்லத்தரசி. அமரர் கல்கி அவர்களின் அமரகாவியமான பொன்னியின் செல்வனைப் படித்து, அந்த ஈடுபாட்டில் இணையத்தில் தேட, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை என்ற யாஹூ குழுமம் பற்றி அறிந்து அதில் இணைந்து கொண்டேன். அந்தக் குழுமத்தின் மூலம் பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அவ்வாறே “கல்லிலே கலைவண்ணம் கண்டோம்” எனும் இந்த வலைதளமும் திரு. விஜய் அவர்களும் அறிமுகமானார்கள். சிற்பங்களைப் பற்றி பல தகவல்களை எளிமையான முறையில் எடுத்துக்கூறும் இந்த வலைதளத்தைப் பற்றி அறிந்துகொண்டதிலிருந்து நான் இங்கு வாடிக்கையான வாசகி.

நமது நண்பர் திரு. விஜய் அவர்கள் ஒரு சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி இதைப் பற்றி ஒரு கெஸ்ட் போஸ்ட் செய்கிறீர்களா என்று கேட்டார். என் மனதினுள் தயக்கம். ஐயா, சிற்பத்தைப் பற்றி நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும். எனக்கொன்றும் தெரியாதே. நான் என்ன எழுத என்று கேட்டேன். இல்லை, நீங்கள் அந்தப் சிற்பத்தின் படத்தைப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள் என்றார். சரி ஆகட்டும் என்றேன். அந்த சிற்பத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பரம்பொருளாகிய கண்ணன் குழந்தையாக காட்சி தரும் சிற்பம் யாருக்குத் தான் பிடிக்காது. எனவே, கண்ணனின் திருவுளமாகவே இதை ஏற்றுக் கொண்டு, இப்பதிவினை எழுதுகிறேன்.

நான் சொல்லப் போவதென்னமோ கதை தான். அதுவும் நாம் அனைவரும் அறிந்த கதை. ஆம், அந்த சிற்பம் சொல்லும் கதை.

கண்ணன் குறும்பின் மொத்த உருவம். தன் வீட்டில் பானைகளிலும் உறியிலும் அத்தனை வெண்ணெய் இருக்க, கோகுலத்தில் இருக்கும் பிறரின் வீட்டிற்கு சென்று வெண்ணெய் உண்ட கண்ணன். இதைக் கண்டு கோகுலத்துப் பெண்கள் எல்லாம் யசோதையிடம் கண்ணனை குறை கூறி முறையிட, யசோதைக்கு கோபம் வருகிறது. அவள் கோபமாய் இருப்பதை அறிந்து, கண்ணன் அவள் எதிரே வர மறுக்கிறான். உடனே யசோதை, மிக ஆசையாக கண்ணனை அழைத்து, உனக்கு பாலூட்டுகிறேன் வா என்று அழைக்கிறாள். அவன் அருகில் வந்ததும், சட்டென்று ஒரு தாம்பு கயிறை எடுத்து அவனை ஒரு பெரிய மர உரலோடு கட்டி விடுகிறாள். வயிற்றில் தாம்புக் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் தாமோதரன் (தாம்பு + உதரன்) என்று அழைக்கப்படுகிறான்.


அதிரும் கடல்நிற வண்ணனைஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து
பதரப்படாமே பழந்தாம் பாலார்த்த
உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர் வந்து காணீரே.


(பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து இரண்டாம் திருமொழி சீதக்கடல் – பாடல் 9)

அலைகடல் ஆர்ப்பரிப்பதைப் போன்று மிகவும் குறும்பு செய்துகொண்டிருந்த அலைகடல் வண்ண தேகம் கொண்ட கண்ணனை, இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக ஏமாற்றித் தன்னருகே அழைத்த யசோதை அன்னை, அவனை அருகிலிருந்த ஒரு பழைய கயிற்றால் கட்டி வைத்தாள். கண்ணனின் தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய வயிற்றழகை வந்து பாருங்கள். ஒளிவீசும் வளையல்கள் அணிந்துள்ள பெண்களே, தழும்புடன் கூடிய அழகிய வயிற்றை வந்து பாருங்கள்!

குழந்தைகள் என்றும் விஷமம் செய்வதும் பெற்றோர்கள் கண்டிப்பதும் தொன்று தொட்டு இருப்பவை போல !! இதோ சிற்பம்

அத்துடன் முடியவில்லை கண்ணனின் லீலை. யசோதை இவ்வாறு கண்ணனை உரலில் கட்டிவிட்டு வீட்டினுள் சென்று விடுகிறாள். சிறிது நேரம் சும்மா இருந்தான் கண்ணன். பிறகு அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உரலோடு சேர்த்து இழுத்துக் கொண்டே வாசல் வரை வந்தான். இந்த கட்டிலிருந்து வெளிவர ஒரு உபாயம் செய்தான். வீட்டு வாசலில் இருந்த இரு மருத மரங்களைக் கண்டான். ஆகா இந்த மரங்களின் இடையில் நான் புகுந்து வெளிவந்தால், உரல் வெளிவர முடியாமல் கயிறு தானே அறுந்து விடும் என்று எண்ணினான். எனவே, உரலை இழுத்துக் கொண்டு இரு மரங்களுக்கு இடையில் புகுந்தான். தன் பலம் கொண்ட மட்டும் உரலை இழுத்தான். ஆனால், என்ன அதிசயம். அவனது பலத்துக்குக் கட்டுப்பட்டு அந்த இரு மரங்களும் வீழ்ந்தன. வீழ்ந்த்து மட்டுமின்றி இரு தேவ குமாரர்கள் அந்த மரங்களிலிருந்து எழுந்தனர்.

நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள். பெருஞ்செல்வத்தால் ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப் பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர். அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.

இவையனைத்தையும் அறிந்தே கண்ணன் அந்த மருத மரங்களை வீழ்த்தி, அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தான். குபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்துஅங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்பு இருந்தவாகாணீரே சேயிழையீர் வந்துகாணீரே

(பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து இரண்டாம் திருமொழி சீதக்கடல் – பாடல் 10)

தான் செய்த குறும்புத்தனத்திற்காக யசோதையால் மிகப் பெரிய உரலில் கட்டப்பட்டு பின் அந்த உரலை இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களை முறித்துவிட்ட இந்த பாலகனின் திருமார்பையும் திருமார்பில் மின்னுகின்ற திருமகள், கௌஸ்துபம் எனும் இரத்தினமணி, திருத்துழாய் மாலை ஆகியவற்றையும் வந்து பாருங்கள். செம்மையுடைய அணிகலன்கள் அணிந்திருப்பவரே, வந்து பாருங்கள்.

மேலும், அருணகிரிநாதர் தனது திருப்புகழில்

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபர நண்ப ரன்பின் மருகோனே

என்று பாடுகிறார்.

உரலுடன் கட்டப்பட்டு, அதனை இழுத்து வரும் கண்ணனை பாருங்கள்.


இம்மாதிரி நுண்ணிய வேலைபாடு மிக்க சிற்ப்பத்தை தேடுவதிலும் ஒரு ஆனந்தம் உண்டு

எவ்வளவு சிறியது பாருங்கள். அதவும் மரங்களின் அடியில் முகங்கள் – மருத மரங்களாய் நின்ற நளகூபனுக்கும் மணிக்ரீவனுக்கும் சாப விமோசனம் பெறுகிறார்கள் …அற்புதம்

. மிகச் சிறிய சிற்பத்திற்குள் எத்தகைய தெய்வீக கதைகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!

ஒன்றா , இரண்டா …புலித்தொப்பை நண்பர்களின் லூட்டி – திருமால்புரம்

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் – மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை – அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி – நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி – அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் – பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் – அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் – வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 – 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

அதோ அங்கே, இருப்பது அவரா ?

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.


இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.

சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் – புள்ளலூர்

நேரம் போனது தெரியவே இல்லை. உடன் வந்திருந்த அப்பா அம்மா மற்றும் அண்ணன் காட்டிய சைகைகளும் மனதில் ஏறவில்லை. அப்படி ஒரு மயக்கம் – காஞ்சி கைலாயநாதர் கோயிலில் அப்படியே லயித்து விட்டேன். மதியம் ஆகிவிட்டது – அப்போது திடீரென கைபேசி அலறியது.

“விஜய், காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் திருமால்புரம் ரயில் நிலையம் அருகில் இருக்கிறேன். சீக்கிரம் வாரும் ” என்றார் நண்பர் திரு சங்கரநாராயணன். அங்கே ஒரு முற்கால சோழர் கோயிலை தேடி செல்வதாக முந்தைய நாள் திட்டம் போட்டிருந்தோம். சங்கரை பார்த்துவிட்டு அவர் பின்னால் தொடர்ந்த சில வினாடிகளில் போகும் பாதையில் பாதை மட்டும் இல்லை, அப்படி ஒன்று இருந்ததற்கான தடயம் கூட இல்லை என்று புரிந்தது. பெற்றோரையும் , அண்ணனையும் வண்டியுடன் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டு சங்கருடன் அவரது வாகனத்தில் பயணம் தொடர்ந்தது. அப்போது எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் சென்ற எனக்கு பல அதிர்ச்சிகள். திருமால்புரம் இன்ப அதிர்ச்சி ( அதை அடுத்த பதிவில் பார்ப்போம்). ஆனால் அன்று மாலை நாங்கள் கண்ட காட்சி…

சரி, அப்படி எங்கே போனோம், எதை பார்த்தோம்.வரலாற்றில் பல முக்கிய போர்களை பார்த்த மண் – அது சரி, புள்ளலூர் என்றவுடன் பானிபட் போல நமக்கு சட்டென்று சரித்திர பாடம் நினைவுக்கு வருவது கடினம், எனினும் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்களுக்கு ? உடனே சிவகாமியும், குண்டோதரனும், புலிகேசியும் , கண்ணபிரானும், ஆயன சிற்பியும் நினைவுக்கு வருவார்கள்.

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/புள்ளலூர்ச் சண்டை

அதற்குப் பின்னரும் திப்புவின் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து அவனது மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இந்த போர் கருதப்படுகிறது. அதை பற்றி திரு முத்தையா அவர்களின் ஆங்கிலப் பதிவு

The story of Two Obelisks.

சரி, இடம் தெரிந்துவிட்டது,. அங்கே ..

எனது படம் சுய விளம்பரத்துக்காக இல்லை, காரணமாகத்தான் உள்ளது. நான் எங்கே நிற்கிறேன். அடுத்த சில படங்களை பார்த்தல் உங்களுக்கே புரியும்

இன்னும் சற்று தொலைவில் சென்று பார்ப்போம்.

புள்ளலூர் அருகே சோழர் காலத்து கோயிலை தேடிச் சென்ற எங்களுக்கு, சங்கரின் பார்வையில் தொலைவில் , மரக்கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் இந்த விமானம் தென்பட்டது. அங்கே ஊர்க்காரரை கேட்டதற்கு, அதுவா – அது எங்க ” மொட்டை கோபுரம் ” என்றார்

அருகில் சென்றவுடன் தன அதன் முழு பிரம்மாண்டம் விஷவரூபம் எடுத்தது.

விமானத்தின் அடியில் இருந்து பல செங்கல்கள் உருவப் பட்டாலும் ..

முதிர்ந்த போர் வீரரை போல, வீரத்தழும்புகள் பல உடலில் ஏந்தி இருந்தாலும், தலை சற்றும் சாயாமல் நேசி நிமிர்த்தி விண்ணோக்கி சென்ற விமானத்தின் கம்பீரம் மனதை கொள்ளையிட்டது . ஆறு தளங்கள் உடைய அற்புத செங்கல் விமானம்

விமானத்தின் மேல் தளங்களில் சில சுதை சிற்ப்பங்கள் தெரிந்தன. பல்லவர் காலத்து கட்டுமானம் போல உள்ளது.


தன்னைச் சுற்றி சிதைவுகள், குப்பை, முள்செடி , ஆயிரம் ஆண்டுகள் புறக்ணிக்கபட்டதன் விளைவினால் மேலே பல மரக்கிளைகள், எனினும் அதன் அகத்தின் அழகு குன்றவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, நவீன கருவிகள், புதிய கட்டுமான பொருட்களின் கண்டுப்பிடிப்பு என்று அவ்வளவும் இருந்தும் – இந்த தனி விமானம் தனது பெருமையை நமக்கு உணர்த்தியது. ஒரு சோகம் கலந்த பெருமிதம், விமானத்தின் உள்ளே சென்றவுடன் ஒரு தெளிவு…

நம் முன்னோர்களின் அறிவு முதிர்ச்சி மற்றும் அறிவியல் தேர்ச்சி கண்முன்னே கண்டதும் ஒரு பெருமிதம் – விமானத்தின் உட்புறம் சென்று மேலே பார்த்தவுடன் ஒரு மெய் சிலிர்ப்பு. அப்படி ஒரு அற்புதம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும், கேட்பாரற்று குப்பையில் கிடந்தாலும், தங்கள் பணியை இன்றும் செவ்வனே செய்து, தாங்கள் காப்பாற்றிய மூலவர் சிலை இல்லை என்றாலும் எங்கும் எதிலும் கலந்திருக்கும் அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின. ஒரு இணையற்ற
கலை பாரம்பரியத்தை ஈர்ந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் என்ற பெருமிதம். இவை நமது குலதனங்கள் , போற்றி கொண்டாடப்பட வேண்டிய இவை இப்படி இருப்பதை கண்டு மனம் வெந்தது. ஆர்வலர்கள் சிலர் கூடினால் எதுவும் முடியும். இன்பத்திலும் துன்பம்!!!

எங்கள் சோகக் கதையை கேளுங்கள் – குப்பையில் எறியப்பட்ட பேரூர் கோயில் தூண்கள்

மீண்டும் ஒரு பயனுள்ள டிசம்பர் இந்திய பயணம். நண்பர்கள் பலரின் உதவியுடன் இன்னும் பல பதிவுகள் இட மூலங்கள் கிடைத்தன. வழக்கம் போல சில கசப்பான காட்சிகள். எனினும் இதுவரை இல்லா வண்ணம் ஒரு திடுக்கிடும் காட்சி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தூண்கள் படும் அவமானம். முன்னர் ஒரு பதிவில் ஹனுமான் முதலை வயிற்றில் இருந்து வரும் சிற்பம் பற்றி எழுதினேன்.

Hanuman escapes from a crocodile -perur

அப்போதே அந்த பழைய புகைப்படத்தில் உள்ள தூண் இருக்கும் இடம் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இம்முறை சென்று பார்த்தபோது புரிந்தது. அதில் இருப்பது இப்போது சிதைந்த நிலையில் ஆலயத்தினுள் இருக்கும் சிறு நந்தவனத்தில் இருந்த தூண்.

உடையாத தூண் ஆலய கோபுரம் அருகில் உள்ள கடையின் கதவில் மறைந்து உள்ளது.

இந்தப் படங்கள் சென்ற டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை ( 2009) . அப்போது அந்த சிறு நந்தவனத்தில் இன்னும் பல சிதைந்த தூண்கள் இருந்தன.


இம்முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்றதும் ( சற்று பயத்தோடுதான் ) அங்கே சென்றோம். அங்கே இருக்கும் தூண்களை பார்க்காமல் திரும்ப முடியுமா ?

வாகனத்தை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள சிற்பக் கூடத்தில் உள்ள சிற்பிகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு திரும்பியது தான் தெரியும் – எதிரில் அப்படி ஒரு கோரக் காட்சி



குப்பையும் சாக்கடையும் நிரம்பி வழிய வெளியே எறியப்பட்டுள தூண்கள். அருகில் சென்று பார்த்தேன் – பயத்துடன் தேடினேன். கண்கள் பார்ப்பதை மனது ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றது – அதே ஹனுமான் தூண்.

தங்க நகையும் வைர ஆபரணங்களுமே பொக்கிஷம் என்று இருக்கும் இந்நாளில், அவற்றையே பாதுகாக்க முடியாமல் இருக்கும் நிர்வாகம், இந்த சொற்ப கல்லில் என்ன இருக்கிறது என்று குப்பையில் எரிந்து விட்டது போலும். சோகம் பொல்லாதது.. யாரிடம் போய் முறையிடுவது..

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி – மேலைக்கடம்பூர், பாகம் 1

இன்றைக்கு நாம் ஒரு மிக அரிய அற்புத சிலையை பார்க்கப்போகிறோம். கடம்பூர் என்றதுமே பலருக்கு பொன்னியின் செல்வன் நினைவுகள் மலரும். நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னர் மேலைக்கடம்பூர் சென்றோம்.

ஒரு வார பயணத்தின் முதல் நாள் என்பதாலும், அன்றைக்கு இரவே தில்லை செல்லவேண்டும் (30 km தொலைவில்) என்பதாலும், அரக்கபரக்க சென்றோம். மழை வேறு “இதோ இப்போ வருகிறேன்” என்று பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கோயில் வாயில் அடையும் போதே இருட்டி விட்டது. அடுத்த நாள் பிரதோஷ பூஜைக்கு குருக்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தார்.

ஒரு வருடத்துக்கு முன்பா? அப்போ ஏன் இவ்வளவு தாமதம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரு காரணங்கள். ஒன்று திரு ராஜா தீக்ஷதர் அவர்கள் அருமையான ஆங்கில பதிவு ஒன்றில் மிகவும் அருமையாக இந்த ஆலயத்தை விளக்கி இருந்தார். அவரிடத்தில் அந்தப் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து நமது தளத்தில் இட கேட்டிருந்தபோது, திடீரென அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நினைவாக விரைவில் அதனை செய்து விடுவோம். இரண்டாவது காரணம், கடம்பூர் கோயிலில் இருக்கும் சிலை. பிரதோஷத்தன்று மட்டுமே வெளியில் வரும் இந்த சிலை, அன்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வெளி வரவில்லை. வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையை மட்டுமே படம் பிடித்தோம்.

ஆனால், இணையத்தில் தேடியதில் கோயில் தர்மகர்த்தா திரு விஜய் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

கடம்பூர் கோயில்

ஆலயத்தின் ஸ்தல புராணம் பற்றிய அவரது பதிவு.

கடம்பூர் புராணம்

கடம்பூர் – அம்ரிதகடேஷ்வரார் கோயில். தற்போது இருக்கும் கற்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கட்டுமானம் (1075 -1120 C.E.). அதன் அற்புத வடிவம் மற்றும் சிற்பங்கள் பற்றி திரு ராஜா தீக்ஷதர் அவர்களது பதிவில் பின்னர் பார்ப்போம். நேரடியாக அந்த சிற்பம் காண செல்வோம்.

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி

அருகில் சென்று அதன் அற்புத வடிவத்தை பார்ப்போம்.

இந்த சிலையின் தனித்தன்மைகள், உயர்ந்த மேடை, பின்னல் இருக்கும் பிரபை

திரு நாகசாமி அவர்கள் இதனைப் பற்றி கூறுகையில் , ” இந்த கோயிலில் குலோத்துங்கன் காலத்து, அற்புத உற்சவர் சிலைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் நந்தியின் முதுகில் ஆடும் காட்சி, அருகில் விநாயகர், முருகர், பிருங்கி, நந்தி, பைரவர் மற்றும் பல கணங்கள் உள்ளன. இந்த சிலை வங்க தேசத்து பால வம்சத்து வெளிப்பாடை கொண்ட சிலை. இந்த சிலை சுமார் 9th – 10th நூற்றாண்டை ஒட்டி இருக்க வேண்டும். இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது “

கடம்பூர் பற்றிய திரு நாகசாமி அவர்களின் பதிவு

இந்த சிலையை பால கால புத்தர் சிலையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (நியூயார்க் நகர மெட்ரோபொலிடன் அருங்காட்சியக சிலை)

மேடை மற்றும் பிரபைகள் ஒத்து போவதை நாம் காணலாம்.

மேலும் இந்த சிலை தென்னாட்டு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்பதற்கு மகேசனின் ஊர்த்வ லிங்கம் இன்னும் ஒரு சான்று. இவ்வாறு நாம் சோழர் மற்றும் பல்லவர் கால செப்புத்திருமேனிகளில் பார்ப்பதில்லை.

திரு விஜய் அவர்கள் நாம் இன்னும் நன்றாக பார்க்க, அருகில் சென்று பின்னால் இருக்கும் தகடை விலக்கியும் படம் எடுத்து உதவி உள்ளார்.

மிகவும் அழகாக காட்சி அளிக்கும் இந்த சிலை மகேசனின் அற்புத நடனத்தை பிரதிபலிக்கிறது. கைகள் தோள்பட்டையில் இணையும் பாணி மிகவும் அருமை. இதற்கு முந்தைய பல்லவர் மற்றும் சோழர் வடிவங்களில் கைகள் முட்டியில் பிரியும்.

இன்னும் நிறைய பார்க்க உள்ளது இந்த சிலையில். அவற்றை இந்தப் பதிவின் அடுத்த பகுதியில் விரைவில் பார்ப்போம்.